.

.
.

Wednesday, November 29, 2017

கோழிக்கறியும், கரப்பான் பூச்சி கூட்டும்

ஒரு சுயபுராணப் பதிவு....

பதிவுக்குள் நுழையும் முன், இந்தப் பதிவில் அசைவ உணவு குறித்த சில சொந்த அனுபவங்களும் , கருத்துக்களும் உள்ளன, அசைவ உணவுப்பிரியர்கள் கவனிக்கவும். அப்புறம் தப்பா சொல்லிட்டோம்னு வருத்தப்படுறது, கோபப்படுறது, சைவத்திற்கு மாறுவது போன்ற பெரும் விளைவுகளுக்கு கம்பெனி பொறுப்பேற்காது என்பதை  முதலிலேயே தெரிவித்துக்கொள்கிறோம். நட்பும் நன்றியும் :))

சும்மா சொல்லக்கூடாது !! அன்றும் சரி, இன்றும் சரி நாம் எப்பவுமே சாப்பாட்டு பிரியைதான் !! இது எந்தளவிற்கு நிஜம் என்பது , அம்மாவின் சமையலை சாப்பாட்டுத்தட்டு முழுக்க நிரப்பி வைத்துக்கொண்டு சாப்பிடுவதைப் பார்த்து "கோபுரங்கள் சாய்வதில்லை " என உடன்பிறப்புகள் அடைமொழி வைத்ததிலிருந்து புலப்படும், அதாவது நாம் ஒரு "சாப்பாட்டு இராமாயி" என்பது :))

அம்மாவின் சமையல் அம்புட்டு ருசி, இத்தனைக்கும் அம்மாவின் சமையலில் அஜினோமோட்டோ, சுவைக்கூட்டு எல்லாம் கிடையாது. கொஞ்சமாய் கருத்து விளங்கும் அந்த இளம் பிராயத்தில் வாழ்ந்தது தோட்டப்புறத்தைத் தொட்ட கம்பம் ஒன்றில், வீட்டிற்கு முன்னால் பெரிய ஆறும் பக்கவாட்டங்களில் அதன் கிளை அருவிகளுமாய் பிரிந்தோடும் நீர்நிலைகள்.   அதற்கு
நடுவே தீபகற்பமாய் ஒரு குட்டி அத்தாப்புக்கூரை வேய்ந்த பலகை வீடு, வீட்டைச் சுற்றிலும் செம்பனை மரக்காடு, நடு நடுவே கொக்கோ பழ மரங்கள், இருள் சூழ்ந்த பிரதேசம்.

அந்த வாழ்க்கையையும் சலிக்காது, சளைக்காது வாழ்ந்தவர் அம்மா, வீட்டிற்கு பக்கத்தில் மரவள்ளித் தோட்டம், குட்டிக் குட்டியாய் கத்தரி இன்னும் அவரால் பராமரிக்க முயன்ற பயிர்கள் அணிவகுத்து பலன் தந்தன.

வீட்டிற்கு முன்னால் தூண்டிலிட்டு மீன்பிடித்து, சொந்தமாய் மசாலை அரைத்து மரவள்ளியும், மாங்காய் பிஞ்சுகளும் சேர்த்து அம்மா  சமைக்கும் மீன்குழம்பு அத்தனை சுவை , மணம். அம்மாவின் ஓரிரண்டு தோழிகளுக்கும் அந்தக் குழம்பில் பங்கு போகும். இப்படியாக அம்மாவின் சுவையான உணவுகளுக்கான காலக்கட்டம் வேற்றூருக்கு வேலை, படிப்பு என புலம் பெயர்ந்ததில் விடைபெற்றுப்போனது.

அதன் பின்னர்தான் வாழ்வில் வந்தது முக்கியக்கட்டம், அம்மாவின் சமையல் இல்லாத வெறுமையோ, அல்லது பிரம்மகுமாரிகள் (ஒரு காலத்தில்) இயக்கத்தின் ஈடுபாடோ ஏதோ ஒன்று மனதை மாற்ற நாம் முழு சைவம் ஆயாச்சு. யார் சொல்லியும் மண்டையில் ஏறவில்லை, கூட்டாளிகள் கூட்டிப்போய் KFC இல் வைத்து கண்முன்னே கோழியைக் கடித்துக் குதறும் போதும் , நமக்குப் பிடித்த சிவப்பு fantaவைக் குடித்துக்கொண்டு சலனப்படாமல் இருக்க முடிந்தது.

எல்லாம் நல்லபடிதான் போய்க்கொண்டிருந்தது, பொறுமைசாலி ஆகிவிட்டதாய் சிலர் சொன்னார்கள் , கோபம் குறைந்து (கொஞ்சம் முன்கோபம் என்பது சொல்லக் கேள்வி !!) , சாந்தசொரூபியாகிவிட்டதாய் சிலர் பாராட்டு மழை பொழிந்து உச்சிக் குளிர வைத்தனர். அதற்கும் வந்தது முடிவு, ரொம்பவும் வேண்டப்பட்ட ஒரு ஜீவனுக்காக எட்டு வருட சைவம் கைவிட்டுப்போனது. கொஞ்சம் வருத்தம்தான், ஆனால் நாம் அன்புக்கு அடிமையல்லவா ( வேறென்ன சொல்ல ? )  ஆச்சு மீன்,  கோழியோடு மீண்டும் துவங்கியது பிடி கடி போராட்டம் :))

 வேற்றூரில் வாழ்ந்த சைவ வாழ்வில் மறக்க முடியாத மனதிலாடும் இரு நிகழ்வுகள்...

 முதலாவது, அது ஓர் பெரிய உணவுப் பேரங்காடி, பல வகை உணவுகள் அணிவகுக்கும் நிறைய அங்காடிகள், கொஞ்சம் பேமசான இடம், உணவு வேளைகளில் அலைபாயும் கூட்டம் , அங்கே நாம் எப்பொழுதுமே சாப்பிடுவது  சைவ உணவுகள் விற்கும் ஒரு சீனப் பெண்மணியின் அங்காடியில், அப்பெண்மணி பார்க்க  நாற்பதுகளின் துவக்கத்தில் நல்ல உயரம், நடுத்தர உடல்வாகு, குழந்தைத்தனமான முகம் எனக் காட்சியளித்தாள். சுவையாய் சமைப்பதில் வல்லவள், மசாலை சேர்த்த நம்மூர் குழம்புகளைப் போலவும் பதார்த்தங்கள் அவள் கடையில் நிறைந்திருக்கும்.

அவள் கடையின் சைவ உணவு பிடித்துப்போக எப்பொழுதும் நாம் அவள் கடைக்குச் செல்வதுதான் வாடிக்கை. அவளின் வாடிக்கையாளரான கொஞ்ச நாளில் நம் உணவுப் பழக்க வழக்கத்தை கண்டு பிடித்துவிட்டாள் அம்மணி, என்னென்ன பிடிக்கும் என்பதைத்  தெரிந்துகொண்டு அவற்றை தட்டில் சற்று அதிகம் பரிமாறி வைப்பாள். உண்டு எழுந்ததும், கொஞ்சம் கோபமும் நிறைய  அக்கரையுமாய், ஏன் இதை மீதம் வைத்தாய், ஏன் சாப்பிட்டு முடிக்கவில்லை என கேள்விக்கனைகள் தொடுப்பாள். ஆரம்பத்தில் கொஞ்சம் விசித்திரமாக இருந்த அவள் போக்கு நாளடைவில் சகஜமாகிப்போனது.

 தம்மைப் பற்றி எதிர்மறையாய் கருத்துக் கூறும் பிறர் மேல் பலருக்கு எழும் கோபம் போல்  அவள் மேல் கோபமோ, வெறுப்போ எழவில்லை, குறை கூறுபவர் யாருமே இல்லையென்றால் நம் சிறு பிழைகளை யார் உணர்த்துவது ? அதுகூட ஒருவகை அக்கரை தானே ? அதை ஏன் சில மழலை மனங்கள் வெறுக்கின்றன ? இதுகூட ஒருவகை வாழ்வின் விசித்திரங்கள் தான் போலும் :))

யாருமற்ற அந்த ஊரில் தாயை ஞாபகப்படுத்தும் அவள் அக்கரை பிடித்துத்தான் இருந்தது. அம்மாகூட தட்டில் ஏன் மீதம் வைத்தாய் எனக் கேட்டதில்லை ( மீதம் வைத்தால்தானே கேட்பதற்கு :0) இனத்தாலும், மதத்தாலும் , மொழியாலும் வேறுபட்ட ஒரு பெண் , வாங்கும் பணத்திற்கு மேல் உபசரிக்கின்றாளே என்ற மரியாதைதான் பிறந்தது.

வருடங்கள் பல கடந்தும் இன்றும் நினைவிலாடுகிறாள் அந்த சீன அண்ணபூரணி :))

இரண்டாவது சம்பவம், ஜோகூரில் புகழ்பெற்ற உணவுக்கடையில், ஒரு வாரக்கடைசி, மதியம், ஒரே பசி , அந்தக் கடையில் நுழைந்து சைவ உணவிற்கு ஆர்டர் கொடுத்துவிட்டு , கைகழுவி அமர்வதற்குள் மின்னல் வேகத்தில் தலைவாழையிலையில் உணவு பறிமாறப்பட்டுவிட்டது. இருக்கும் பசி அத்தனையும் ஒன்று திரண்டு எட்டிப்பார்க்க ஓடிவந்து இலைக்கு முன் அமர்ந்து உணவைப்பார்த்தால் ......

பால் போன்ற பச்சரிசி சாதத்தில் பொன்னிற சாம்பார் மின்ன அதற்கு மத்தியில் சாம்பாரில் விழுந்து, வெந்து, ஊறிப்போய் , இறந்து கிடந்தது ஒரு பெரிய "கரப்பான் பூச்சி" கொதிக்கும் சாம்பாரில் விழுந்திருக்கும் போல , ரொம்பவே துடிதுடித்து சிறகுகள் பிரிய பருத்து பெருத்துக் குலைந்து கிடந்தது. வந்த பசி அத்தனையும் இருந்த இடம் தெரியாமல் மறைந்துபோக, அழாத குறைதான், கடையில் வேறு நிறைய பேர் சாப்பிட்டுக்கொண்டிருக்க, மெல்ல எழுந்து போய் தொட்டுக்கூட பார்க்காத அந்த உணவுக்கான கட்டணத்தை அழுதுவிட்டு, ஏன்மா, சாப்பிடலையா ? சாப்பிடலையா? என துரத்திய கடைக்காரரின் குரலை சட்டை செய்யாமல் பின்னங்கால் பிடரியில் இடிக்க ஓடியதெல்லாம் நினைவோடையில் தெளிவாய் மின்ன. அந்தக் கடைக்கு அத்தோடு ஒரு பெரிய கும்பிடு.

அதுவெல்லாம் பழைய கதை, இப்போ நாமும் நம் அசைவ உணவும் எனும் மகிழ்ச்சியான வாழ்விற்கு வந்திருப்பது பெரிய ஆபத்து. முதலில் ஆடு , அதன் மணம் பிடிப்பதில்லை, சரி ஆடு மாமிசத்திற்கு குட்பை, அப்புறம் கடல் உணவுகள் இதில் இறால், புழு வகையைச் சேர்ந்ததாமே என சிலர் புரளியைக் கிளப்பிவிட, படித்துப்பார்த்தால் அதில் கொஞ்சம் உண்மையிருக்க ஊடான் என்னும் இறாலுக்கும் விடுதலை, அப்புறம் இறால் புழு வகை என்றால் நண்டு பூச்சி வகையில்லையா (இன்னும் ஆராய்ச்சியில்) !!

அப்புறம் மீன்கள் அதற்கு வந்த ஆபத்தும் விநோதமானதே, அதாகப்பட்டது சுனாமி வந்ததல்லவா ? அப்போது மனித சடலங்கள் ஆழிப்பேரலையில் கடலில் சங்கமமாக, அவற்றை உண்டு கொழுத்தனவாம் மீன்கள் , இப்படி ஊடகங்களில் மீன் உணவுக்கு எதிர்ப்பு வெடித்தது. சரி மீன் உணவுக்கும் விடுதலை, மிஞ்சியிருப்பது என்ன ? கோழி மட்டும்தான், அதற்காகத்தான் இந்தப் பதிவே . (மகனும் , தந்தையும் கழுதை மீதேறிய கதை உங்களுக்கு ஞாபகத்திற்கு வருகிறது என்பதை அறிய முடிகிறது )

சிறுவர் முதல் பெரியோர் வரை விரும்பி உண்ணும் உணவு கோழி என்பதற்கு அதன் துரித உணவு வணிகத்தில் சக்கைப்போடு போடும் KFC, McDonald போன்ற துரித உணவு அங்காடிகளே தக்க சான்று, அதுமட்டுமா மசாலை மணக்க அம்மா வைக்கும் கோழிக்குழம்பிற்கு எதுவுமே ஈடாகாது அல்லவா ? விடயம் இப்படியிருக்க..

ஏற்கனவே கோழி தலையை உண்ணக்கூடாது, கழுத்து, ரெக்கை , கால்கள் என யாவற்றையும் விடமாக்கி ஊடகங்களில் பரப்பபட்ட விக்ஷமங்களில் என்னங்கடா இது !! இந்த கோழி உணவுக்கு வந்த சோதனை , போற போக்கை பார்த்தால் கோழி எலும்பு மட்டும்தான் உண்ணத் தகுந்தது போலும் என பயந்திருந்த வேளை  அது நடந்தேவிட்டது , எப்படி என்றுதானே கேட்கிறீர்கள், இதோ சொல்கிறேன் விலாவாரியாக ஆனால் முழுதும் படித்துவிட்டு தங்களுக்கும் கோழி உணவு அலர்ஜியாகிப்போனால் கம்பெனி பொறுப்பேற்காது என்பதை மீண்டும் சொல்லிவிடுகிறேன்.

நம் நாட்டில் அனல் பரக்கும் வானொலி அறிவிப்பாளர், அவர் சொல்கிறார் தற்போது சில பல பண்ணைகளில் வளர்க்கப்படும் கோழிகளுக்கு உணவாக ரொட்டித் துகள்கள் உணவளிக்கப்பட்ட போக்ஷாக்கு நிறைந்த "கரப்பான் பூச்சிகள் " உணவாக்கப்பட்டு , கொழுக் மொழுக்கென வளர்ந்த கோழிகளாய் வியாபாரத்திற்கு வருகின்றன என்று, நெருப்பில்லாமல் புகையுமா ? ஆதாரமில்லாமலா அந்த மனுக்ஷன் இப்படி ஒரு தகவலை பொதுவெளியில் வெளியிடுவார் ? அவ்ளோதான் கோழி உணவுக்கும் அடித்துவிட்டார்கள் சாவுமணி !! இனி கோழி உணவைப் பார்த்தாலே
 

பெருத்து, பருத்த கரப்பான் பூச்சிகள் அதற்குள் ஊர்வதாய் உணர்வுகள் சிலிர்க்க ( கரப்பான் பூச்சியையும் சிலர் உணவாக்கிக் கொல்லு(ள்ளு)ம் உலகில் வாழ்ந்தாலும்)  இனிமேல் கோழி உணவுக்கும் குட்பை, போற போக்கப் பார்த்தா திரும்பவும் நம்மள சைவமா மாத்தாம விடமாட்டாய்ங்க போலிருக்கே சாமி :((


பி.கு :

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு

மேற்காணும்  குறள் வழி நிறைய அனுபவங்களும் சில ஆராய்ச்சிகளும் கலந்ததே மேற்கூறிய பதிவு :))





























No comments: