.

.
.

Tuesday, November 21, 2017

நா.பாவின் இலட்சியப் படைப்பு "குறிஞ்சி மலர்" - படித்ததும் பிடித்ததும்

காலம் எனும் நதியில்
கரைந்திடும் பொழுதில்
நினைவிலாடும் சில
தருணங்கள் - வாழ்வு

சுமார் பத்து வருடங்களுக்கு முன்பு என் சகோதரி
ரத்னா எனக்கொரு மேசைக்கணிணியை பரிசளித்தார், ரெம்ப ஸ்ட்ரிக்கான இடை நிலைப்பள்ளி ஆசிரியை அவங்க. ( அது என்ன எப்பப் பார்த்தாலும் பரிசு வாங்கின கதையாவே இருக்கே, இவிங்க யாருக்கும் பரிசு  ஏதும் கொடுக்கவே மாட்டாய்ங்களா என சந்தேகிப்பவர்களுக்கு, நாமளும் சின்னக் கலைவாணர் மாதிரி தானுங்க, கொடுக்குறதுக்கு முன்ன யோசிக்கிறதில்ல, கொடுத்தப்புறம் அதப்பத்தி பேசிக்கிறதில்லே :P

அன்று முதல் எனக்கு ஒன்றுவிட்ட சகோதரி போல் ஆகிவிட்டது அந்தக் கணிணி, வாய்ப்புக் கிடைக்கும் நேரமெல்லாம் கணிணி முன் அமர்ந்து பதிவுகள் எழுதுவது, கவிதைகள் வரைவது, மடலாடுவது தொடங்கி கணிணி விளையாட்டுக்கள் என வாழ்வின் பெரும் பகுதி கணிணியுடன் கழிந்தது. எழுதுவது நமக்கு மிகவும் பிடிக்கும், ஏதோ ஒரு வகையில் ஒவ்வொரு மனிதரும் தாமறிந்த தொழில் வழி , கலைகளின் வழி தம்மை வெளிப்படுத்துகிறார்கள், அவ்வகையில் நம்மால் எழுத்தின் வழி உலகோடு உறவாட முடிந்ததில் மிக்க மகிழ்ச்சி, இருந்தாலும் நம் எழுத்துக்கு உதவியாய் இருந்த கணிணிக்கு இப்பொழுது நலமில்லை, பழுதாகிப்போய் கடையில் படுத்துவிட்டது :(( திரும்பி வரும்வரை எழுதுவதில்லை எனும் நமது விரதத்தை தோழி ஸ்டெல்லாவின் விண்ணப்பம் தகர்த்துவிட்டது, எனவே கையகல அலைபேசி ( tab) வழி இப்பதிவு உதயமாகிறது.

 

நா.பா என எழுத்துலகில் அறியப்பட்டு சாகித்திய அகாதமி விருது பெற்ற புகழ்பெற்ற நெடுங்கதை படைப்பாளி நா பார்த்தசாரதி அவர்களின் சிறந்த படைப்புகளில் ஒன்று "குறிஞ்சி மலர்" . ஏறக்குறைய 93 நாவல்களை இவர் படைத்திருக்கிறார். இவ்வளவு அருமையான படைப்பைத் தந்த கதாசிரியரைப் பற்றி மேலும் நாம் அறிந்து கொள்ள அவர் வரலாறு நமக்கு உதவும்.

"குறிஞ்சி மலர்"1960 ஆண்டு வெளியீடு கண்ட படைப்பு , மு.வ அவர்களின் கருத்தாழமிக்க முன்னுரையோடு துவங்கி படிக்கும் ஆர்வத்தைத் தூண்டுகிறது. இந்தப் படைப்பு ஏற்கனவே தமிழ் நாட்டின் புகழ் பெற்ற கல்கி இதழில் வாசகர்களின் ஏகோபித்த ஆதரவுடன் தொடர்கதையாய் வெளிவந்து பின் நாளில் தொலைக்காட்சித் தொடராகவும் வெளிவந்து அசத்தியதாய் விக்கி வழி அறியமுடிகிறது ( ஆஹா ! இதையும் விட்டு வைக்கலையாப்பா தயாரிப்பாளர்களே ? சீரியல் பார்க்காதது எவ்வளவு பிழை என்பது இப்பொழுதுதான் புரிகிறது :)


இந்நாவலுக்கான தகவல்கள் பல இணையத்தில் விரவிக்கிடப்பதால், இதற்கு மேலும் அறிமுக விழா நடத்தாமல் குறிஞ்சி மலர் எனும் நீண்ட புதினத்தின் கதாமாந்தர்களையும் , கதைச்சுருக்கத்தையும் காண்போம் வாருங்கள்.

இப்படைப்பின் முதன்மைக் கதைமாந்தர்கள் பூரணியும், அரவிந்தனும் ஆவர்.

பூரணி, பூரணத்துவமான பெண்மணி எனும் பொருள்பட இவள் பெயரை படைத்திருக்கிறார் கதாசிரியர், இருள் சூழ்ந்த வெளியில் ஒளியேந்திய மங்கையாய் அறிவொளி மிளிர மிகவும் பண்பார்ந்த தைரியசாலியாய் இப்புதினம் முழுக்க வலம் வருகிறாள் பூரணி.

தமிழ்ப்பேராசிரியர் சிற்றம்பலத்தின் மூத்த பெண், இப்புதினம் ஆரம்பித்த தருணத்தில் அவளுக்கு 15 வயது. கல்லூரி செல்லாமலேயே தந்தையின் ஆதரவுடன் வீட்டிலேயே கல்வி கற்று தேறுகிறாள். கொள்கை பிடிப்பு நிறைந்த இப்பெண் , தன் தந்தையின் புகழுக்கு பங்கம் நேராமல் வறுமையை தாங்கிக் கொண்டு நேர்வழியில் நடக்கிறாள்.  தன் சகோதர சகோதரிகளை அன்புடன் பராமரிக்கின்றாள். பிரசங்கியாய் பணி ஏற்கிறாள். தேர்ந்த பிரசங்கியாய் நாடு முழுக்க புகழ்பெறுகிறாள், வெளி நாடுகளுக்கும் சென்று வருகிறாள். அரசியலிலும் ஆதிக்கம் செலுத்துமளவு வல்லமை பெற்ற பெண்ணாய் படைக்கப்பட்டிருக்கிறது பூரணியின் கதாபாத்திரம்.

அரவிந்தன் ஓர் இலட்சியவாதி. ஊருக்கு உதவுபவன், தனக்கு உறவினர் வழி சேர்ந்த பெரும் செல்வத்தையும் பிறருக்கு ஈந்த தயாள குணத்தினன். பிறருக்கு நன்மை செய்யும் குணசாலியான இந்த இளைஞன் தன்னை தற்காத்துக்கொள்ள மறந்து , சூழ்நிலைக்கு பலியாகும் வண்ணம் படைக்கப்பட்டிருப்பது ஏமாற்றமளிக்கிறது. இவன் தன்னையும் காப்பாற்றிக்கொள்ளாமல் தனக்காக காத்திருந்த பெண்ணையும் கரம் பிடிக்க முடியாதவனாகிவிடுகிறான். வெளிப்படையாய்ச் சொல்வதானால் கொஞ்சம் இளிச்சவாய் கதாபத்திரமாகவே காட்சியளிக்கிறான் அரவிந்தன்.

ஒருவேளை பூரணியை மேன்மையாய்க் காட்ட இவன் கதாபாத்திரம் இவ்வாறு பலவீனமாக சித்தரிக்கப்பட்டுள்ளதோ எனத் தோன்றுகிறது.

கதைப்படி பார்த்தால்...

தமிழ்ப் பேராசிரியர் அழகிய சிற்றம்பலம் தமிழ்ப் புலமைக்கும், உண்மை, நேர்மைக்கும் பேர் போனவர். மனைவியை இழந்த இவருக்கு நான்கு குழந்தைகள். அவர்களுள் மூத்தவள் பூரணி. தன் பிள்ளைகளுக்கு கல்வியுடன் நற்போதனைகளும், வாய்மையும் போதித்து வளர்க்கிறார். திடீரென ஒரு நாள் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழக்கிறார்.

தந்தையை இழ்ந்த மக்கள் ஆதரவற்று நிற்கின்றனர். 15 வயதே நிரம்பிய இளம் பெண்ணான பூரணி தன் பெற்றோர்களின் கடமையை ஏற்றுக்கொள்கிறாள். வறுமையின் பிடியில் சிக்கி அலைபாய்கிறது குடும்பம். இருப்பினும் இலவசங்களை ஏற்க மறுத்து, தனது நகையை விற்று குடும்பத்தை பராமரிக்கிறாள் பூரணி. அவர்கள் குடியிருந்த வசதியான வாடகை வீட்டிலிருந்து வெளியேற்றப்படுகின்றனர். சொத்து எதையும் அவர்கள் தந்தை விட்டுச்செல்லாததால் குடும்பம் நடுத்தெருவுக்கு வருகிறது. மூத்த ஆண் மகன் தவறான வழியில் செல்ல முயன்று மீட்கப்படுகிறான்.

துயரத்தில் அல்லாடும் பூரணி வாடகை வீடு தேடி அலைந்து ஒருவழியாய் தோழியின் துணையுடன், ஒரு சிறிய வாடகை வீட்டை தன் குடும்பத்தினர்க்கு ஏற்பாடு செய்துகொள்கிறாள். அப்பொழுது தன் தோழியின் சங்கிலியை அபகரித்த திருடனை விரட்டிப் பிடித்து அவனைத் தாக்கி சங்கிலியை மீட்கிறாள். அவள் மனதிடத்திற்கும் தைரியத்திற்கும் இந்நிகழ்வு ஓர் உதாரணம்.

அடுத்து வாழ்வைத் தொடர வேலை தேடி அலைகிறாள் பூரணி. பசியுடன் கடும் வெயிலில் வெறும் காலுடன் வேலை தேடி அலையும் பூரணி வீதியில் மயங்கி விழுகிறாள்.

அச்சமயத்தில் அவள் வாழ்வின் முக்கியமான இருவரின் கவனம் அவள் மேல் விழுகிறது, ஒருவர் பூரணியின் மனதைக் கவர்ந்த அரவிந்தன் அவன் தான் பணிபுரியும் அச்சகத்திலிருந்து வீதியில் ஒரு பெண் மயங்கி வீழ்ந்ததைக்கண்ணுற்று வேதனையடைகிறான், அவன் அவளைப் காப்பாற்ற முயற்சிக்கும் முன்னரே அவள் பிறரால் காப்பாற்றப்படுகிறாள், அழகான பூரணியை கவிதையாய் வடித்து மனதுள் மடித்து வைத்துக்கொள்கிறான் அரவிந்தன். பின்னாட்களில் பூரணியின் தந்தை அழகிய சிற்றம்பலத்தின் நூல்களை பதிப்பிக்க அவளை மீண்டும் சந்திக்கும் அரவிந்தன் அவளுடன் நல்ல நட்பை வளர்த்துக்கொள்கிறான். அவள் வாழ்வின் சுகதுக்கங்களில் பங்கெடுத்துக்கொள்கிறான். அவளுக்கு மிகப்பெரிய ஆதரவாக நாவல் முழுதும் வலம் வருகிறான். அவள் மேல் ஆசை இருந்தாலும் திருமணம் அவள் பொதுவாழ்வின் வளர்ச்சியைத் தடுக்கும் என எண்ணி அவளை மணமுடிக்கும் நோக்கத்தை இறுதிவரை தவிர்க்கிறான்.

பூரணி மயங்கி வீழ்ந்த அதே சந்தர்ப்பத்தில் அவளை சந்தித்த மற்றொருவர் மங்களேஸ்வரி அம்மாள், பணக்காரப் பெண்மணியான இவர் டாம்பீகம் ஏதுமின்றி நல்ல மனது, ஆன்மீக ஈடுபாடு, இலக்கிய ஆர்வம் கொண்டவராய் திகழ்கிறார்.  இவர் பூரணியைக் காப்பாற்றி அவளுடன் நட்புறவு கொள்கிறார். பூரணியின் குணநலன்களை அறிந்து அவளை இக்கட்டான சூழ் நிலையிலிருந்து மீட்டு அவளுக்கு பிரசங்கியாய் தொழில் வாய்ப்பு ஏற்படுத்தித் தருகிறார்.

இப்படியாய் அபலையான பூரணிக்கு ஆதரவு அரவிந்தன், மங்களேஸ்வரி அம்மாள் மற்றும் தோழி, அண்டை அயலார் வழி அமைந்தாலும் அவள் வாழ்வில் வில்லன்களும் இல்லாமலில்லை, அவள் தந்தையின் படைப்புகளை வெளியிடுவதில் தில்லுமுல்லு செய்த அச்சக நிறுவனர் மற்றும் அவள் அரசியலில் வெற்றிபெறக்கூடாது எனத் தடுக்கும் அரசியல்வாதிகள் என சிலர் இருக்கின்றனர், அவர்கள் பூரணியை அரவிந்தனுடன் இணைத்து அவதூறு பரப்பி, பிறர் பார்வையில் அவள் ஒழுக்கத்தை கேள்விக்குறியாக்குகின்றனர். அரவிந்தனை கடத்தி பூரணியை அரசியலில் இருந்து விலகுமாறு வற்புறுத்துகின்றனர்.

வானில் சூழ்ந்த மேகங்கள் மழையாய் கரைவதைப்போல் பூரணியின் வாழ்வில் சூழ்ந்த இடர்களுக்கும் முடிவு ஏற்பட்டு சுபம் என எண்டு கார்டு போடப்படவேண்டிய வேளையில் அவள் மணமுடிக்க நினைத்த அரவிந்தன் இறந்து போகிறான். வேதனை பூரணியை மீண்டும் விழுங்குகிறது. தனக்கென ஒரு பணியைத் தேடிக்கொண்டு அரவிந்தன் நினைவோடு வேறு திருமணம் புரியாமல் வாழ்கிறாள் பூரணி.புராணத்தில் வரும் திலகவதி அம்மையார் - (அப்பர் சுவாமிகளின் தமக்கையார்) போல் தன் வாழ்வை அமைத்துக்கொண்டு தன் உடன்பிறப்புக்களை ஆளாக்கி விடுகிறாள் பூரணி.

 இலட்சியவாதிகளான பூரணி, அரவிந்தன் இருவரின் வாழ்வும் ஒன்றாகவே பயணித்தும் ஒன்றுசேரமுடியா இரயில் தண்டவாளங்களை ஒத்ததாய் அமைந்துவிடுகிறது.  இவ்விருவரின் எண்ணப்போராட்டங்களும், மனப்போராட்டங்களுடன் சுயநலத்தால் பிறர் இவ்விருவரின்  இலட்சியத்தைத் தகர்க்க குறுக்கு வழிகளைக் கையாண்டு, சூழ்ச்சி, வன்முறை கொண்டு தகர்க்க முயல்வது அதிலும் அவர்கள் ஜெயித்து மீள்வது என நீள்கிறது படைப்பு.

இவர்கள் மட்டுமன்றி அரவிந்தனின் தோழன், மங்களேஸ்வரி அம்மாளின் மகள் வசந்தியின் மணவாழ்வு மற்றும் சிலரின் வாழ்வும் நாவலில் பகிரப்பட்டுள்ளது.

ஏறக்குறைய ஐம்பதாண்டுகளுக்கு முன்பு வந்த நாவல், நல்ல மொழிவளமும், கற்பனை வளமும் விரவிய புதினம், சமூக சீர்திருத்தம் பேசும், பெண்மையை பெரிதாய் போற்றும் ஒரு படைப்பு. 12 ஆண்டுகளுக்கொரு முறை மலரும் அபூர்வ குறிஞ்சி மலரைப்போல் பெண்களுள் சிறந்த பூரணி எனும் பெண்ணின் வாழ்க்கைச் சித்திரம் இது. வாய்ப்புக்கிடைக்கும் நண்பர்கள் வாசிக்கலாம்.









No comments: