.

.
.

Wednesday, November 29, 2017

கோழிக்கறியும், கரப்பான் பூச்சி கூட்டும்

ஒரு சுயபுராணப் பதிவு....

பதிவுக்குள் நுழையும் முன், இந்தப் பதிவில் அசைவ உணவு குறித்த சில சொந்த அனுபவங்களும் , கருத்துக்களும் உள்ளன, அசைவ உணவுப்பிரியர்கள் கவனிக்கவும். அப்புறம் தப்பா சொல்லிட்டோம்னு வருத்தப்படுறது, கோபப்படுறது, சைவத்திற்கு மாறுவது போன்ற பெரும் விளைவுகளுக்கு கம்பெனி பொறுப்பேற்காது என்பதை  முதலிலேயே தெரிவித்துக்கொள்கிறோம். நட்பும் நன்றியும் :))

சும்மா சொல்லக்கூடாது !! அன்றும் சரி, இன்றும் சரி நாம் எப்பவுமே சாப்பாட்டு பிரியைதான் !! இது எந்தளவிற்கு நிஜம் என்பது , அம்மாவின் சமையலை சாப்பாட்டுத்தட்டு முழுக்க நிரப்பி வைத்துக்கொண்டு சாப்பிடுவதைப் பார்த்து "கோபுரங்கள் சாய்வதில்லை " என உடன்பிறப்புகள் அடைமொழி வைத்ததிலிருந்து புலப்படும், அதாவது நாம் ஒரு "சாப்பாட்டு இராமாயி" என்பது :))

அம்மாவின் சமையல் அம்புட்டு ருசி, இத்தனைக்கும் அம்மாவின் சமையலில் அஜினோமோட்டோ, சுவைக்கூட்டு எல்லாம் கிடையாது. கொஞ்சமாய் கருத்து விளங்கும் அந்த இளம் பிராயத்தில் வாழ்ந்தது தோட்டப்புறத்தைத் தொட்ட கம்பம் ஒன்றில், வீட்டிற்கு முன்னால் பெரிய ஆறும் பக்கவாட்டங்களில் அதன் கிளை அருவிகளுமாய் பிரிந்தோடும் நீர்நிலைகள்.   அதற்கு
நடுவே தீபகற்பமாய் ஒரு குட்டி அத்தாப்புக்கூரை வேய்ந்த பலகை வீடு, வீட்டைச் சுற்றிலும் செம்பனை மரக்காடு, நடு நடுவே கொக்கோ பழ மரங்கள், இருள் சூழ்ந்த பிரதேசம்.

அந்த வாழ்க்கையையும் சலிக்காது, சளைக்காது வாழ்ந்தவர் அம்மா, வீட்டிற்கு பக்கத்தில் மரவள்ளித் தோட்டம், குட்டிக் குட்டியாய் கத்தரி இன்னும் அவரால் பராமரிக்க முயன்ற பயிர்கள் அணிவகுத்து பலன் தந்தன.

வீட்டிற்கு முன்னால் தூண்டிலிட்டு மீன்பிடித்து, சொந்தமாய் மசாலை அரைத்து மரவள்ளியும், மாங்காய் பிஞ்சுகளும் சேர்த்து அம்மா  சமைக்கும் மீன்குழம்பு அத்தனை சுவை , மணம். அம்மாவின் ஓரிரண்டு தோழிகளுக்கும் அந்தக் குழம்பில் பங்கு போகும். இப்படியாக அம்மாவின் சுவையான உணவுகளுக்கான காலக்கட்டம் வேற்றூருக்கு வேலை, படிப்பு என புலம் பெயர்ந்ததில் விடைபெற்றுப்போனது.

அதன் பின்னர்தான் வாழ்வில் வந்தது முக்கியக்கட்டம், அம்மாவின் சமையல் இல்லாத வெறுமையோ, அல்லது பிரம்மகுமாரிகள் (ஒரு காலத்தில்) இயக்கத்தின் ஈடுபாடோ ஏதோ ஒன்று மனதை மாற்ற நாம் முழு சைவம் ஆயாச்சு. யார் சொல்லியும் மண்டையில் ஏறவில்லை, கூட்டாளிகள் கூட்டிப்போய் KFC இல் வைத்து கண்முன்னே கோழியைக் கடித்துக் குதறும் போதும் , நமக்குப் பிடித்த சிவப்பு fantaவைக் குடித்துக்கொண்டு சலனப்படாமல் இருக்க முடிந்தது.

எல்லாம் நல்லபடிதான் போய்க்கொண்டிருந்தது, பொறுமைசாலி ஆகிவிட்டதாய் சிலர் சொன்னார்கள் , கோபம் குறைந்து (கொஞ்சம் முன்கோபம் என்பது சொல்லக் கேள்வி !!) , சாந்தசொரூபியாகிவிட்டதாய் சிலர் பாராட்டு மழை பொழிந்து உச்சிக் குளிர வைத்தனர். அதற்கும் வந்தது முடிவு, ரொம்பவும் வேண்டப்பட்ட ஒரு ஜீவனுக்காக எட்டு வருட சைவம் கைவிட்டுப்போனது. கொஞ்சம் வருத்தம்தான், ஆனால் நாம் அன்புக்கு அடிமையல்லவா ( வேறென்ன சொல்ல ? )  ஆச்சு மீன்,  கோழியோடு மீண்டும் துவங்கியது பிடி கடி போராட்டம் :))

 வேற்றூரில் வாழ்ந்த சைவ வாழ்வில் மறக்க முடியாத மனதிலாடும் இரு நிகழ்வுகள்...

 முதலாவது, அது ஓர் பெரிய உணவுப் பேரங்காடி, பல வகை உணவுகள் அணிவகுக்கும் நிறைய அங்காடிகள், கொஞ்சம் பேமசான இடம், உணவு வேளைகளில் அலைபாயும் கூட்டம் , அங்கே நாம் எப்பொழுதுமே சாப்பிடுவது  சைவ உணவுகள் விற்கும் ஒரு சீனப் பெண்மணியின் அங்காடியில், அப்பெண்மணி பார்க்க  நாற்பதுகளின் துவக்கத்தில் நல்ல உயரம், நடுத்தர உடல்வாகு, குழந்தைத்தனமான முகம் எனக் காட்சியளித்தாள். சுவையாய் சமைப்பதில் வல்லவள், மசாலை சேர்த்த நம்மூர் குழம்புகளைப் போலவும் பதார்த்தங்கள் அவள் கடையில் நிறைந்திருக்கும்.

அவள் கடையின் சைவ உணவு பிடித்துப்போக எப்பொழுதும் நாம் அவள் கடைக்குச் செல்வதுதான் வாடிக்கை. அவளின் வாடிக்கையாளரான கொஞ்ச நாளில் நம் உணவுப் பழக்க வழக்கத்தை கண்டு பிடித்துவிட்டாள் அம்மணி, என்னென்ன பிடிக்கும் என்பதைத்  தெரிந்துகொண்டு அவற்றை தட்டில் சற்று அதிகம் பரிமாறி வைப்பாள். உண்டு எழுந்ததும், கொஞ்சம் கோபமும் நிறைய  அக்கரையுமாய், ஏன் இதை மீதம் வைத்தாய், ஏன் சாப்பிட்டு முடிக்கவில்லை என கேள்விக்கனைகள் தொடுப்பாள். ஆரம்பத்தில் கொஞ்சம் விசித்திரமாக இருந்த அவள் போக்கு நாளடைவில் சகஜமாகிப்போனது.

 தம்மைப் பற்றி எதிர்மறையாய் கருத்துக் கூறும் பிறர் மேல் பலருக்கு எழும் கோபம் போல்  அவள் மேல் கோபமோ, வெறுப்போ எழவில்லை, குறை கூறுபவர் யாருமே இல்லையென்றால் நம் சிறு பிழைகளை யார் உணர்த்துவது ? அதுகூட ஒருவகை அக்கரை தானே ? அதை ஏன் சில மழலை மனங்கள் வெறுக்கின்றன ? இதுகூட ஒருவகை வாழ்வின் விசித்திரங்கள் தான் போலும் :))

யாருமற்ற அந்த ஊரில் தாயை ஞாபகப்படுத்தும் அவள் அக்கரை பிடித்துத்தான் இருந்தது. அம்மாகூட தட்டில் ஏன் மீதம் வைத்தாய் எனக் கேட்டதில்லை ( மீதம் வைத்தால்தானே கேட்பதற்கு :0) இனத்தாலும், மதத்தாலும் , மொழியாலும் வேறுபட்ட ஒரு பெண் , வாங்கும் பணத்திற்கு மேல் உபசரிக்கின்றாளே என்ற மரியாதைதான் பிறந்தது.

வருடங்கள் பல கடந்தும் இன்றும் நினைவிலாடுகிறாள் அந்த சீன அண்ணபூரணி :))

இரண்டாவது சம்பவம், ஜோகூரில் புகழ்பெற்ற உணவுக்கடையில், ஒரு வாரக்கடைசி, மதியம், ஒரே பசி , அந்தக் கடையில் நுழைந்து சைவ உணவிற்கு ஆர்டர் கொடுத்துவிட்டு , கைகழுவி அமர்வதற்குள் மின்னல் வேகத்தில் தலைவாழையிலையில் உணவு பறிமாறப்பட்டுவிட்டது. இருக்கும் பசி அத்தனையும் ஒன்று திரண்டு எட்டிப்பார்க்க ஓடிவந்து இலைக்கு முன் அமர்ந்து உணவைப்பார்த்தால் ......

பால் போன்ற பச்சரிசி சாதத்தில் பொன்னிற சாம்பார் மின்ன அதற்கு மத்தியில் சாம்பாரில் விழுந்து, வெந்து, ஊறிப்போய் , இறந்து கிடந்தது ஒரு பெரிய "கரப்பான் பூச்சி" கொதிக்கும் சாம்பாரில் விழுந்திருக்கும் போல , ரொம்பவே துடிதுடித்து சிறகுகள் பிரிய பருத்து பெருத்துக் குலைந்து கிடந்தது. வந்த பசி அத்தனையும் இருந்த இடம் தெரியாமல் மறைந்துபோக, அழாத குறைதான், கடையில் வேறு நிறைய பேர் சாப்பிட்டுக்கொண்டிருக்க, மெல்ல எழுந்து போய் தொட்டுக்கூட பார்க்காத அந்த உணவுக்கான கட்டணத்தை அழுதுவிட்டு, ஏன்மா, சாப்பிடலையா ? சாப்பிடலையா? என துரத்திய கடைக்காரரின் குரலை சட்டை செய்யாமல் பின்னங்கால் பிடரியில் இடிக்க ஓடியதெல்லாம் நினைவோடையில் தெளிவாய் மின்ன. அந்தக் கடைக்கு அத்தோடு ஒரு பெரிய கும்பிடு.

அதுவெல்லாம் பழைய கதை, இப்போ நாமும் நம் அசைவ உணவும் எனும் மகிழ்ச்சியான வாழ்விற்கு வந்திருப்பது பெரிய ஆபத்து. முதலில் ஆடு , அதன் மணம் பிடிப்பதில்லை, சரி ஆடு மாமிசத்திற்கு குட்பை, அப்புறம் கடல் உணவுகள் இதில் இறால், புழு வகையைச் சேர்ந்ததாமே என சிலர் புரளியைக் கிளப்பிவிட, படித்துப்பார்த்தால் அதில் கொஞ்சம் உண்மையிருக்க ஊடான் என்னும் இறாலுக்கும் விடுதலை, அப்புறம் இறால் புழு வகை என்றால் நண்டு பூச்சி வகையில்லையா (இன்னும் ஆராய்ச்சியில்) !!

அப்புறம் மீன்கள் அதற்கு வந்த ஆபத்தும் விநோதமானதே, அதாகப்பட்டது சுனாமி வந்ததல்லவா ? அப்போது மனித சடலங்கள் ஆழிப்பேரலையில் கடலில் சங்கமமாக, அவற்றை உண்டு கொழுத்தனவாம் மீன்கள் , இப்படி ஊடகங்களில் மீன் உணவுக்கு எதிர்ப்பு வெடித்தது. சரி மீன் உணவுக்கும் விடுதலை, மிஞ்சியிருப்பது என்ன ? கோழி மட்டும்தான், அதற்காகத்தான் இந்தப் பதிவே . (மகனும் , தந்தையும் கழுதை மீதேறிய கதை உங்களுக்கு ஞாபகத்திற்கு வருகிறது என்பதை அறிய முடிகிறது )

சிறுவர் முதல் பெரியோர் வரை விரும்பி உண்ணும் உணவு கோழி என்பதற்கு அதன் துரித உணவு வணிகத்தில் சக்கைப்போடு போடும் KFC, McDonald போன்ற துரித உணவு அங்காடிகளே தக்க சான்று, அதுமட்டுமா மசாலை மணக்க அம்மா வைக்கும் கோழிக்குழம்பிற்கு எதுவுமே ஈடாகாது அல்லவா ? விடயம் இப்படியிருக்க..

ஏற்கனவே கோழி தலையை உண்ணக்கூடாது, கழுத்து, ரெக்கை , கால்கள் என யாவற்றையும் விடமாக்கி ஊடகங்களில் பரப்பபட்ட விக்ஷமங்களில் என்னங்கடா இது !! இந்த கோழி உணவுக்கு வந்த சோதனை , போற போக்கை பார்த்தால் கோழி எலும்பு மட்டும்தான் உண்ணத் தகுந்தது போலும் என பயந்திருந்த வேளை  அது நடந்தேவிட்டது , எப்படி என்றுதானே கேட்கிறீர்கள், இதோ சொல்கிறேன் விலாவாரியாக ஆனால் முழுதும் படித்துவிட்டு தங்களுக்கும் கோழி உணவு அலர்ஜியாகிப்போனால் கம்பெனி பொறுப்பேற்காது என்பதை மீண்டும் சொல்லிவிடுகிறேன்.

நம் நாட்டில் அனல் பரக்கும் வானொலி அறிவிப்பாளர், அவர் சொல்கிறார் தற்போது சில பல பண்ணைகளில் வளர்க்கப்படும் கோழிகளுக்கு உணவாக ரொட்டித் துகள்கள் உணவளிக்கப்பட்ட போக்ஷாக்கு நிறைந்த "கரப்பான் பூச்சிகள் " உணவாக்கப்பட்டு , கொழுக் மொழுக்கென வளர்ந்த கோழிகளாய் வியாபாரத்திற்கு வருகின்றன என்று, நெருப்பில்லாமல் புகையுமா ? ஆதாரமில்லாமலா அந்த மனுக்ஷன் இப்படி ஒரு தகவலை பொதுவெளியில் வெளியிடுவார் ? அவ்ளோதான் கோழி உணவுக்கும் அடித்துவிட்டார்கள் சாவுமணி !! இனி கோழி உணவைப் பார்த்தாலே
 

பெருத்து, பருத்த கரப்பான் பூச்சிகள் அதற்குள் ஊர்வதாய் உணர்வுகள் சிலிர்க்க ( கரப்பான் பூச்சியையும் சிலர் உணவாக்கிக் கொல்லு(ள்ளு)ம் உலகில் வாழ்ந்தாலும்)  இனிமேல் கோழி உணவுக்கும் குட்பை, போற போக்கப் பார்த்தா திரும்பவும் நம்மள சைவமா மாத்தாம விடமாட்டாய்ங்க போலிருக்கே சாமி :((


பி.கு :

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு

மேற்காணும்  குறள் வழி நிறைய அனுபவங்களும் சில ஆராய்ச்சிகளும் கலந்ததே மேற்கூறிய பதிவு :))





























Tuesday, November 21, 2017

நா.பாவின் இலட்சியப் படைப்பு "குறிஞ்சி மலர்" - படித்ததும் பிடித்ததும்

காலம் எனும் நதியில்
கரைந்திடும் பொழுதில்
நினைவிலாடும் சில
தருணங்கள் - வாழ்வு

சுமார் பத்து வருடங்களுக்கு முன்பு என் சகோதரி
ரத்னா எனக்கொரு மேசைக்கணிணியை பரிசளித்தார், ரெம்ப ஸ்ட்ரிக்கான இடை நிலைப்பள்ளி ஆசிரியை அவங்க. ( அது என்ன எப்பப் பார்த்தாலும் பரிசு வாங்கின கதையாவே இருக்கே, இவிங்க யாருக்கும் பரிசு  ஏதும் கொடுக்கவே மாட்டாய்ங்களா என சந்தேகிப்பவர்களுக்கு, நாமளும் சின்னக் கலைவாணர் மாதிரி தானுங்க, கொடுக்குறதுக்கு முன்ன யோசிக்கிறதில்ல, கொடுத்தப்புறம் அதப்பத்தி பேசிக்கிறதில்லே :P

அன்று முதல் எனக்கு ஒன்றுவிட்ட சகோதரி போல் ஆகிவிட்டது அந்தக் கணிணி, வாய்ப்புக் கிடைக்கும் நேரமெல்லாம் கணிணி முன் அமர்ந்து பதிவுகள் எழுதுவது, கவிதைகள் வரைவது, மடலாடுவது தொடங்கி கணிணி விளையாட்டுக்கள் என வாழ்வின் பெரும் பகுதி கணிணியுடன் கழிந்தது. எழுதுவது நமக்கு மிகவும் பிடிக்கும், ஏதோ ஒரு வகையில் ஒவ்வொரு மனிதரும் தாமறிந்த தொழில் வழி , கலைகளின் வழி தம்மை வெளிப்படுத்துகிறார்கள், அவ்வகையில் நம்மால் எழுத்தின் வழி உலகோடு உறவாட முடிந்ததில் மிக்க மகிழ்ச்சி, இருந்தாலும் நம் எழுத்துக்கு உதவியாய் இருந்த கணிணிக்கு இப்பொழுது நலமில்லை, பழுதாகிப்போய் கடையில் படுத்துவிட்டது :(( திரும்பி வரும்வரை எழுதுவதில்லை எனும் நமது விரதத்தை தோழி ஸ்டெல்லாவின் விண்ணப்பம் தகர்த்துவிட்டது, எனவே கையகல அலைபேசி ( tab) வழி இப்பதிவு உதயமாகிறது.

 

நா.பா என எழுத்துலகில் அறியப்பட்டு சாகித்திய அகாதமி விருது பெற்ற புகழ்பெற்ற நெடுங்கதை படைப்பாளி நா பார்த்தசாரதி அவர்களின் சிறந்த படைப்புகளில் ஒன்று "குறிஞ்சி மலர்" . ஏறக்குறைய 93 நாவல்களை இவர் படைத்திருக்கிறார். இவ்வளவு அருமையான படைப்பைத் தந்த கதாசிரியரைப் பற்றி மேலும் நாம் அறிந்து கொள்ள அவர் வரலாறு நமக்கு உதவும்.

"குறிஞ்சி மலர்"1960 ஆண்டு வெளியீடு கண்ட படைப்பு , மு.வ அவர்களின் கருத்தாழமிக்க முன்னுரையோடு துவங்கி படிக்கும் ஆர்வத்தைத் தூண்டுகிறது. இந்தப் படைப்பு ஏற்கனவே தமிழ் நாட்டின் புகழ் பெற்ற கல்கி இதழில் வாசகர்களின் ஏகோபித்த ஆதரவுடன் தொடர்கதையாய் வெளிவந்து பின் நாளில் தொலைக்காட்சித் தொடராகவும் வெளிவந்து அசத்தியதாய் விக்கி வழி அறியமுடிகிறது ( ஆஹா ! இதையும் விட்டு வைக்கலையாப்பா தயாரிப்பாளர்களே ? சீரியல் பார்க்காதது எவ்வளவு பிழை என்பது இப்பொழுதுதான் புரிகிறது :)


இந்நாவலுக்கான தகவல்கள் பல இணையத்தில் விரவிக்கிடப்பதால், இதற்கு மேலும் அறிமுக விழா நடத்தாமல் குறிஞ்சி மலர் எனும் நீண்ட புதினத்தின் கதாமாந்தர்களையும் , கதைச்சுருக்கத்தையும் காண்போம் வாருங்கள்.

இப்படைப்பின் முதன்மைக் கதைமாந்தர்கள் பூரணியும், அரவிந்தனும் ஆவர்.

பூரணி, பூரணத்துவமான பெண்மணி எனும் பொருள்பட இவள் பெயரை படைத்திருக்கிறார் கதாசிரியர், இருள் சூழ்ந்த வெளியில் ஒளியேந்திய மங்கையாய் அறிவொளி மிளிர மிகவும் பண்பார்ந்த தைரியசாலியாய் இப்புதினம் முழுக்க வலம் வருகிறாள் பூரணி.

தமிழ்ப்பேராசிரியர் சிற்றம்பலத்தின் மூத்த பெண், இப்புதினம் ஆரம்பித்த தருணத்தில் அவளுக்கு 15 வயது. கல்லூரி செல்லாமலேயே தந்தையின் ஆதரவுடன் வீட்டிலேயே கல்வி கற்று தேறுகிறாள். கொள்கை பிடிப்பு நிறைந்த இப்பெண் , தன் தந்தையின் புகழுக்கு பங்கம் நேராமல் வறுமையை தாங்கிக் கொண்டு நேர்வழியில் நடக்கிறாள்.  தன் சகோதர சகோதரிகளை அன்புடன் பராமரிக்கின்றாள். பிரசங்கியாய் பணி ஏற்கிறாள். தேர்ந்த பிரசங்கியாய் நாடு முழுக்க புகழ்பெறுகிறாள், வெளி நாடுகளுக்கும் சென்று வருகிறாள். அரசியலிலும் ஆதிக்கம் செலுத்துமளவு வல்லமை பெற்ற பெண்ணாய் படைக்கப்பட்டிருக்கிறது பூரணியின் கதாபாத்திரம்.

அரவிந்தன் ஓர் இலட்சியவாதி. ஊருக்கு உதவுபவன், தனக்கு உறவினர் வழி சேர்ந்த பெரும் செல்வத்தையும் பிறருக்கு ஈந்த தயாள குணத்தினன். பிறருக்கு நன்மை செய்யும் குணசாலியான இந்த இளைஞன் தன்னை தற்காத்துக்கொள்ள மறந்து , சூழ்நிலைக்கு பலியாகும் வண்ணம் படைக்கப்பட்டிருப்பது ஏமாற்றமளிக்கிறது. இவன் தன்னையும் காப்பாற்றிக்கொள்ளாமல் தனக்காக காத்திருந்த பெண்ணையும் கரம் பிடிக்க முடியாதவனாகிவிடுகிறான். வெளிப்படையாய்ச் சொல்வதானால் கொஞ்சம் இளிச்சவாய் கதாபத்திரமாகவே காட்சியளிக்கிறான் அரவிந்தன்.

ஒருவேளை பூரணியை மேன்மையாய்க் காட்ட இவன் கதாபாத்திரம் இவ்வாறு பலவீனமாக சித்தரிக்கப்பட்டுள்ளதோ எனத் தோன்றுகிறது.

கதைப்படி பார்த்தால்...

தமிழ்ப் பேராசிரியர் அழகிய சிற்றம்பலம் தமிழ்ப் புலமைக்கும், உண்மை, நேர்மைக்கும் பேர் போனவர். மனைவியை இழந்த இவருக்கு நான்கு குழந்தைகள். அவர்களுள் மூத்தவள் பூரணி. தன் பிள்ளைகளுக்கு கல்வியுடன் நற்போதனைகளும், வாய்மையும் போதித்து வளர்க்கிறார். திடீரென ஒரு நாள் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழக்கிறார்.

தந்தையை இழ்ந்த மக்கள் ஆதரவற்று நிற்கின்றனர். 15 வயதே நிரம்பிய இளம் பெண்ணான பூரணி தன் பெற்றோர்களின் கடமையை ஏற்றுக்கொள்கிறாள். வறுமையின் பிடியில் சிக்கி அலைபாய்கிறது குடும்பம். இருப்பினும் இலவசங்களை ஏற்க மறுத்து, தனது நகையை விற்று குடும்பத்தை பராமரிக்கிறாள் பூரணி. அவர்கள் குடியிருந்த வசதியான வாடகை வீட்டிலிருந்து வெளியேற்றப்படுகின்றனர். சொத்து எதையும் அவர்கள் தந்தை விட்டுச்செல்லாததால் குடும்பம் நடுத்தெருவுக்கு வருகிறது. மூத்த ஆண் மகன் தவறான வழியில் செல்ல முயன்று மீட்கப்படுகிறான்.

துயரத்தில் அல்லாடும் பூரணி வாடகை வீடு தேடி அலைந்து ஒருவழியாய் தோழியின் துணையுடன், ஒரு சிறிய வாடகை வீட்டை தன் குடும்பத்தினர்க்கு ஏற்பாடு செய்துகொள்கிறாள். அப்பொழுது தன் தோழியின் சங்கிலியை அபகரித்த திருடனை விரட்டிப் பிடித்து அவனைத் தாக்கி சங்கிலியை மீட்கிறாள். அவள் மனதிடத்திற்கும் தைரியத்திற்கும் இந்நிகழ்வு ஓர் உதாரணம்.

அடுத்து வாழ்வைத் தொடர வேலை தேடி அலைகிறாள் பூரணி. பசியுடன் கடும் வெயிலில் வெறும் காலுடன் வேலை தேடி அலையும் பூரணி வீதியில் மயங்கி விழுகிறாள்.

அச்சமயத்தில் அவள் வாழ்வின் முக்கியமான இருவரின் கவனம் அவள் மேல் விழுகிறது, ஒருவர் பூரணியின் மனதைக் கவர்ந்த அரவிந்தன் அவன் தான் பணிபுரியும் அச்சகத்திலிருந்து வீதியில் ஒரு பெண் மயங்கி வீழ்ந்ததைக்கண்ணுற்று வேதனையடைகிறான், அவன் அவளைப் காப்பாற்ற முயற்சிக்கும் முன்னரே அவள் பிறரால் காப்பாற்றப்படுகிறாள், அழகான பூரணியை கவிதையாய் வடித்து மனதுள் மடித்து வைத்துக்கொள்கிறான் அரவிந்தன். பின்னாட்களில் பூரணியின் தந்தை அழகிய சிற்றம்பலத்தின் நூல்களை பதிப்பிக்க அவளை மீண்டும் சந்திக்கும் அரவிந்தன் அவளுடன் நல்ல நட்பை வளர்த்துக்கொள்கிறான். அவள் வாழ்வின் சுகதுக்கங்களில் பங்கெடுத்துக்கொள்கிறான். அவளுக்கு மிகப்பெரிய ஆதரவாக நாவல் முழுதும் வலம் வருகிறான். அவள் மேல் ஆசை இருந்தாலும் திருமணம் அவள் பொதுவாழ்வின் வளர்ச்சியைத் தடுக்கும் என எண்ணி அவளை மணமுடிக்கும் நோக்கத்தை இறுதிவரை தவிர்க்கிறான்.

பூரணி மயங்கி வீழ்ந்த அதே சந்தர்ப்பத்தில் அவளை சந்தித்த மற்றொருவர் மங்களேஸ்வரி அம்மாள், பணக்காரப் பெண்மணியான இவர் டாம்பீகம் ஏதுமின்றி நல்ல மனது, ஆன்மீக ஈடுபாடு, இலக்கிய ஆர்வம் கொண்டவராய் திகழ்கிறார்.  இவர் பூரணியைக் காப்பாற்றி அவளுடன் நட்புறவு கொள்கிறார். பூரணியின் குணநலன்களை அறிந்து அவளை இக்கட்டான சூழ் நிலையிலிருந்து மீட்டு அவளுக்கு பிரசங்கியாய் தொழில் வாய்ப்பு ஏற்படுத்தித் தருகிறார்.

இப்படியாய் அபலையான பூரணிக்கு ஆதரவு அரவிந்தன், மங்களேஸ்வரி அம்மாள் மற்றும் தோழி, அண்டை அயலார் வழி அமைந்தாலும் அவள் வாழ்வில் வில்லன்களும் இல்லாமலில்லை, அவள் தந்தையின் படைப்புகளை வெளியிடுவதில் தில்லுமுல்லு செய்த அச்சக நிறுவனர் மற்றும் அவள் அரசியலில் வெற்றிபெறக்கூடாது எனத் தடுக்கும் அரசியல்வாதிகள் என சிலர் இருக்கின்றனர், அவர்கள் பூரணியை அரவிந்தனுடன் இணைத்து அவதூறு பரப்பி, பிறர் பார்வையில் அவள் ஒழுக்கத்தை கேள்விக்குறியாக்குகின்றனர். அரவிந்தனை கடத்தி பூரணியை அரசியலில் இருந்து விலகுமாறு வற்புறுத்துகின்றனர்.

வானில் சூழ்ந்த மேகங்கள் மழையாய் கரைவதைப்போல் பூரணியின் வாழ்வில் சூழ்ந்த இடர்களுக்கும் முடிவு ஏற்பட்டு சுபம் என எண்டு கார்டு போடப்படவேண்டிய வேளையில் அவள் மணமுடிக்க நினைத்த அரவிந்தன் இறந்து போகிறான். வேதனை பூரணியை மீண்டும் விழுங்குகிறது. தனக்கென ஒரு பணியைத் தேடிக்கொண்டு அரவிந்தன் நினைவோடு வேறு திருமணம் புரியாமல் வாழ்கிறாள் பூரணி.புராணத்தில் வரும் திலகவதி அம்மையார் - (அப்பர் சுவாமிகளின் தமக்கையார்) போல் தன் வாழ்வை அமைத்துக்கொண்டு தன் உடன்பிறப்புக்களை ஆளாக்கி விடுகிறாள் பூரணி.

 இலட்சியவாதிகளான பூரணி, அரவிந்தன் இருவரின் வாழ்வும் ஒன்றாகவே பயணித்தும் ஒன்றுசேரமுடியா இரயில் தண்டவாளங்களை ஒத்ததாய் அமைந்துவிடுகிறது.  இவ்விருவரின் எண்ணப்போராட்டங்களும், மனப்போராட்டங்களுடன் சுயநலத்தால் பிறர் இவ்விருவரின்  இலட்சியத்தைத் தகர்க்க குறுக்கு வழிகளைக் கையாண்டு, சூழ்ச்சி, வன்முறை கொண்டு தகர்க்க முயல்வது அதிலும் அவர்கள் ஜெயித்து மீள்வது என நீள்கிறது படைப்பு.

இவர்கள் மட்டுமன்றி அரவிந்தனின் தோழன், மங்களேஸ்வரி அம்மாளின் மகள் வசந்தியின் மணவாழ்வு மற்றும் சிலரின் வாழ்வும் நாவலில் பகிரப்பட்டுள்ளது.

ஏறக்குறைய ஐம்பதாண்டுகளுக்கு முன்பு வந்த நாவல், நல்ல மொழிவளமும், கற்பனை வளமும் விரவிய புதினம், சமூக சீர்திருத்தம் பேசும், பெண்மையை பெரிதாய் போற்றும் ஒரு படைப்பு. 12 ஆண்டுகளுக்கொரு முறை மலரும் அபூர்வ குறிஞ்சி மலரைப்போல் பெண்களுள் சிறந்த பூரணி எனும் பெண்ணின் வாழ்க்கைச் சித்திரம் இது. வாய்ப்புக்கிடைக்கும் நண்பர்கள் வாசிக்கலாம்.