.

.
.

Thursday, April 27, 2017

பழைய டைரியும் புதுநிலவின் கவிதைகளும்

பள்ளிப்பருவத்தில் புத்தகங்கள் படிப்பது மிக மிக‌ விருப்பமான விடயமாய் அமைந்திருந்தது. ஆரம்பப்பள்ளியில் நூலகத்தில் இருந்த சொற்ப புத்தகங்களை திரும்பத் திரும்பப் படிக்கமுடிந்தது, அங்கே அறிமுகமானதுதான் மு.வ வின் எழுத்தோவியங்கள் மீதான ஈர்ப்பு.

மு.வ‌ க்கான பட முடிவுமு.வ, அன்றும், இன்றும், என்றும் நமக்குப் பிடித்த மிகப்பெரிய எழுத்து ஆசான். அவரை வாத்தியார்தனம் நிறைந்தவர் என்றும் ஒழுக்கவாதி எழுத்தாளர் என்றும் இன்றைய இலக்கியவாதிகள் வர்ணிக்கின்றனர். அது 100 % உண்மையே. சுடர் விளக்காயினும் தூண்டுகோல் ஒன்று அவசியம். 

இள‌ம்பருவத்தில் பிள்ளைகளுக்கு வீட்டில் பெற்றோர்களும், பள்ளியில் ஆசான்க‌ளும் ந‌ன்னெறிகளை போதிக்கும் கடப்பாடுகளைக் கொன்டிருந்தாலும், வள‌ர்ந்துவிட்ட மாந்தர்களுக்கும் நற்போதனைகள் அவசியம்தான் என்பதை மறுக்கமுடியாது அல்லவா?  எனவே தனது படைப்புகளின் வழி நற்பண்புகளையும் தனிமனித‌ விழுமியங்களையும் முன்னிறுத்தும் இவர்போன்ற ஒழுக்கவாதி எழுத்தாளர்களும் நமது சமுதாயத்திற்கு அவசியமானவர்களே.  

மு.வ வின் கரித்துண்டு, அகல் விளக்கு, மண் குடிசை இன்னும் பல படைப்புகள் நினைவைவிட்டு நீங்காதவை, ப‌டித்த மு.வ படைப்புகள் குறித்து சில பதிவுகள் எழுதவேண்டும் எனும் ஆசையும் நிறைய உண்டு. பார்க்கலாம்.

நமது பொழுதுபோக்கே வாசிப்பது என்பதினால், கிடைக்கும் எழுத்துக்கள் நிறைந்த எந்தத் தாளையும் விட்டுவைப்பதில்லை. உடனே படித்துக் கிழித்துவிடுவதுதான் வாடிக்கை :))

இதில் வேடிக்கை என்னவென்றால் இந்த வாசிப்புப் பழக்கம் அம்மா வழி வந்த‌து. அம்மா அந்நாளைய இரண்டாம் வகுப்பு. இவரது கல்வி வரலாறு கேட்பவரை பிரமிக்க வைத்துவிடும், இளவயதில் பாட்டி அம்மாவை எழுப்பி பள்ளிக்கு அனுப்ப தயார் பண்ணினால், அம்மா வயிற்று வலி என்று பாத்ரூமுக்குள் ஓடி ஒளிந்துகொள்வாராம். இப்படியே பள்ளிக்கு மட்டம்போடும் தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமாதித்தியாய் அம்மா மாறிவிட பாட்டி அவரிடம் மாட்டிக்கொன்ட வேதாளமாய் விழி பிதுங்கி அம்மா வழிக்கே வந்து ஒரு கட்டத்தில் அம்மாவை பள்ளிக்கு அனுப்பாமல் வீட்டிலேயே வைத்துவிட்டார். அம்மாவின் பள்ளிப்படிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. ஒருவேளை பள்ளி சென்றிருந்தால் அம்மாவும் ஒரு நல்ல ஆசிரியையாய் விளங்கியிருப்பார் போலும், ஆனாலும் அம்மா அவர் குடும்பத்தில் நிறைய ஆசிரியர்களை உருவாக்கி வைத்திருக்கிறார். 
books க்கான பட முடிவுபள்ளிக்குத்தான் செல்லவில்லையே தவிர, அம்மாவின் வாசிப்ப‌னுபவம் அசாத்தியமானது. தமிழ் மட்டுமே படிக்கத்தெரியுமாதலால் கிடைக்கும் எல்லா தமிழ்ப்புத்தகங்களையும் ஒரு கை பார்த்துவிடுவார். நித்திரைக்கு முன்பதாக  படுத்திருக்கும் பொழுதும், வேலைகள் முடிந்த ஓய்வான தருணங்களிலும் அம்மாவின் அருகாமையில் பிள்ளைகளைவிட புத்தகங்களுக்குத்தான் அனுமதி அதிகம்.

இன்றும் தென்றல், மன்னன், குமுதம், ஆன‌ந்த விகடன் மற்றும் வானம்பாடியும் அம்மாவின் நெருங்கிய நண்பர்கள். நமது வாசிப்பிற்கு ஆசான் அம்மாதான். இன்றும் நமது படைப்புகளின் முதல் விமர்சகர் அம்மாதான்.

அடுத்தததாக எழுத்தின் மீது பிரியம் வரக் காரணமான நம் நாட்டு எழுத்தாளர்கள் வெள்ளைரோஜா (அழகான இவர் பெயரைக் கண்டு இவர் நிச்சயம் ஓர் அழகான பெண் எழுத்தாளர் என்று நானும் தோழிகளும் நெடுங்காலம் நம்பிக்கொன்டிருந்தோம் :) அவர் படைப்புகள் பிடிக்கும், பிறகு ஆர்.வி.ரகு, பி.சுமீதன் ஆகியோரின் படைப்புகளும் அதிகம் கவர்ந்தவை.

இந்தச் சமயத்தில்தான் அந்த மென்மையான சூராவளி எங்களைத் தாக்கியது. புதுநிலவு!! அடடா, எப்படிச் சொல்வதென்றே தெரியவில்லை, அவர் கவிதைகள் ரொம்ப அதிகமாகவே எங்களைக் கவர்ந்திழுத்தது.. அந்த இள‌ம் வயதில் இதயத்தின் ஆழம் வரை நின்று பாதித்தது. மனுக்ஷன் உணர்வுகளைப் பிழிந்து வார்த்தைகளின் வடிவம் கொடுத்து கவிதையாக்கி நம் கவனத்தை ஈர்க்கும் அழகோ அழகு. பூவுக்குள் புயலைச் சிறைவைத்தாற்போன்ற‌ மென்மையான சொல்லடுக்குகளில் இழையோடும் பிர‌மாண்ட வார்த்தை ஜாலங்கள், இன்றளவும் பிரமிக்கவைக்கும் அவருடைய படைப்புகள்.

அந்தச் சமயத்தில் நயனம் இதழின் நடுப்பக்கத்தில் வழவழப்பான தாளில் அழகிய வண்ண ஓவியங்கள் பிண்ணனியில் மெருகூட்ட புதுநிலவின் கவிதைகள் பூத்து மலர்ந்திருக்கும், ஒருமுறை, இருமுறை, பலமுறை என ஒவ்வொரு முறையும் படிக்கப் படிக்கத் தெவிட்டாது மகிழ்வூட்டும் புதுநிலவின் கவிதைகள். அவர் கவிதைகளின் படைப்பு பார்க்கவும் அழகு, படிக்கவும் அருமை.

இவரின் நிஜப்பெயர் இராஜகுமாரன் என்பதும் இவர் பிண்ணனியும் அப்பொழுது  அறிந்திருக்கவில்லை.

வீட்டில் அப்பா கொஞ்சம் கண்டிப்பு (கொஞ்சமில்லை ரொம்பவே !!) இடை நிலைப்பள்ளியில் பயில்கையில் உடன் பயிலும் தோழிகள் யாவரும் பாப் கட்டிங் சிகையலங்காரங்களுடன், நாகரீக உடையலங்காரங்கள், ஒப்பனைகள் "ஹைஹீல்ஸ்" காலணிகள் என அழகழ‌காய் உடுத்தி பட்டாம்பூச்சிகளாய் பவனி வருகையில், தியேட்டர் சென்று சினிமா பார்க்கையில் நாம் மட்டும் அப்படியெல்லாம் இல்லாமல் நீள‌மாய் முடிவள‌ர்த்து :( இரட்டைச்சடை பிண்ணி, கவுனா, மெக்சியா என அறியக் கடினமான பள்ளிச்சீருடை அணிந்து நடமாடிக்கொன்டிருந்தோம். தோழிகள் வீட்டிற்கெல்லாம் நாமும் செல்லக்கூடாது. அவர்களும் வரக்கூடாது. அத்தனை கண்டிப்பு (உலகத்திலேயே இல்லாத அதிசயமான பெண்ணைப் பெற்றுவிட்டார், ரொம்பத்தான் ஓவர் கண்டிப்பு :P (மைன்ட் வாய்சுன்னு நினைச்சு, சத்தமா பேசிட்டோம் போல :))

இத்தனை கறார் கண்டிப்புக்களுக்கு மத்தியிலும் அப்பாவின் கண்ணில் விரலைவிட்டு ஆட்டும் வல்லமை படைத்த தோழி ஒருத்தி எனக்கு வாய்த்திருந்தாள் அவள் பெயர் நிர்மலா, இவள் என் உயிர்த்தோழி கோமளத்தின் உற‌வுக்காரப் பெண், நாங்கள் மூவரும் ஒன்றாய்த்தான்  படித்தோம்.

நிர்மலா ரொம்பவும் சுவாரசியமான கதாபாத்திரம். சீனப்பெண்ணைப்போன்ற தோற்றம், பாப் கட்டிங் தலைமுடி,  தலையில் முன்னால் முடிவெட்டிவிட்டுக்கொன்டு இருப்பாள். அந்தக்கால மலாய் அலிபாபா படத்தில் நாயகன் பி.ரம்லி ஒரு மினி சைக்கிளில் வருவாரே, அதேபோன்று ஒரு நீல நிற மினி சைக்கிள்தான் அவள் வாகனம். வீட்டில் கடைக்குட்டி, அதனால் செல்லம் அதிகம். வசதி படைத்த குடும்பம். ஒழுங்காய் படிக்காவிட்டாலும் கண்டிக்க மாட்டார்கள். 

நிர்மலா மாலை வேளைகளில், கண்ணில் கண்ட ஏதாவது ஒரு புத்தகம், நயனமோ, மன்னனோ, வானம்பாடியோ (வார இதழ்) வாங்கிக்கொள்வாள், வீதி ஓரத்தில் வீற்றிருக்கும் அங்காடிக் கடையில் ஒரு சிறிய பை நிறைய வெறும் ஐஸ்கட்டிகளை வாங்கிக்கொள்வாள் (வெயில் வேளைகளில், ஐஸ் கட்டிகளை வாயில் போட்டு நறநறவென கடித்து மெல்வது அவளுக்கு அலாதி ஆன‌ந்தம். கூடவே புளிப்புமிட்டாய், சாக்லெட்டுக்கள் என தின்பண்டங்கள் வாங்கி சட்டைப்பைகளில் நிரப்பிக்கொள்வாள். தனது சைக்கிளில் ஏறி ஒரு பத்து நிமிடம் அந்த வேகாத வெயிலில் மண்டை காய பயணித்து வீட்டிற்கு வருவாள்.

அவள் வந்ததும், ஒரே அரட்டைதான். திண்பண்டங்களைக் கொரித்துக்கொண்டே வாசிக்க ஆரம்பித்துவிடுவோம், அவள் ரொம்பவும் கற்பனைத்திறன் வாய்த்தவள். அனைத்தையும் அறிந்தவள்போல் பொய்யைக்கூட ஆணித்தரமாய் பேசி நம்பவைத்துவிடுவாள். எங்களைக் கவர்ந்த எழுத்தாளர்களைப்பற்றி நாங்கள் பேசும்போது அவள் என்னென்னமோ கூறுவாள். அந்தப் பொய்களை அப்பொழுது உண்மை என்றே பல காலத்திற்கு நம்பியிருந்தேன் என்றால் பாருங்களேன் அவள் திறமையை !!

சில நேரங்களில் நிர்மலா வீட்டிற்கு வரும்பொழுது அப்பா வீட்டிலிருப்பார். வேறு யாராயிருந்தாலும் அப்பாவின் அருமையான விருந்தோம்பல் குண‌மறிந்து வந்த வழியே ஒரே ஓட்டமாய் திரும்பி ஓடிவிடுவார்கள், ஆனால் இந்த நெஞ்சழுத்தக்காரி இருக்கிறாளே போகவே மாட்டாள். வாசலில் நாற்காலி போட்டு அமர்ந்திருக்கும் அப்பாவைக் கண்டாலும் காணாத‌து போலவே பூனைக்குட்டி மாதிரி வீட்டிற்குள் ஓடி வந்துவிடுவாள், பெரிய சிங்கமான அப்பாவின் கர்ஜனையும் முறைப்பும் அந்தச் சின்னப் பூனைக்குட்டியிடம் செல்லாது :) (பூனையும் சிங்கமும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த‌து என்றுதானே விஞ்ஞானமும் சொல்கிறது ? ) 

வீட்டில் அம்மாவுக்கும் எங்களுக்கும் நிர்மலாவின் துணிச்சலைக்கண்டு வியப்பும் சிரிப்பும் ஒருங்கே பொங்கி வழியும். ஒரு முறை அஜானுபாகுவான அப்பா வாசலில் குறுக்கே அமர்ந்திருக்க, அம்மாவைக் காணவந்த ராணிப்பாட்டி திரும்பிப்பார்க்காமல் ஓடிக்கொன்டிருக்க, இந்த நல்லவள் சொகுசாய் தன் துவிச்சக்கர வண்டியிலிருந்து இற‌ங்கி வந்து "அங்கிள் கொஞ்சம் நகர்ந்துகோங்க" என நாசுக்காய் சொல்லி, அப்பாவும் வேறு வழியில்லாமல் நகர்ந்துகொள்ள, கம்பீரமாய் உள்ளே அறைக்குள் அவள் வந்தவுடன் ஏற்பட்ட சிரிப்பு அடங்க வெகு நேரமாகியது.

நல்ல தைரியசாலிதான் !!

உண்மையில் அன்று சிம்மசொப்பனமாய் திகழ்ந்த அப்பாவின் கோபங்க‌ளெல்லாம் இன்று யோசிக்கையில் வேடிக்கையாக இருக்கிறது, ஓர் அடிகூட அடித்ததில்லை, சீ என்றோ ஏய் என்றோ மரியாதைக்குறைவாய் எந்தப் பிள்ளையையும் திட்டியதில்லை, அவரின் சிவந்த பெரிய விழிகளின் கூர்மையான பார்வை ஒன்றே போதும் எங்களை அடக்கிவைக்க.

அதுதான் உண்மையில் நடந்த‌து எனும் நிதர்சமும் இப்பொழுதுதான் புரிகிறது. அவரின் முறைப்பு ஒன்றே மிகப்பெரிய கோபக்காரராய் அவரை நிலை நிறுத்தியிருக்கிற‌து 

அவள் கொன்டுவரும் புத்தகங்களை சேர்த்துவைக்கும் பழக்கமெல்லாம் அவளுக்குக் கிடையாது, வீட்டிலேயே வைத்துவிட்டுப் போய்விடுவாள். அதில் புதுநிலவின் கவிதைகளை மட்டும் எடுத்து நான் பத்திரப்படுத்திக்கொள்வேன்.

ஒரு சமயம் என் தந்தை உபயோகிக்காமல் வைத்திருந்த ஒரு பெரிய டைரியை கொடுத்தார். அதைப் பெற்றுக்கொண்டதும் ஒரே மகிழ்ச்சி. முதல் வேளையாய், பள்ளிக்குக் கிடைக்கும் பணத்தில் கத்தரிக்கோல், பசை, வண்ணக் காகித அலங்காரங்கள்(stickers) வாங்கி வைத்துக்கொன்டேன்.

பின்னர் ஆற அமர அமைதியாய் அமர்ந்து நான் சேகரித்து வைத்திருந்த புது நிலவின் கவிதைகள் யாவற்றையும் ஒவ்வொரு பக்கத்திலும் அழகுபடுத்தி ஒட்டி வைக்க ஆரம்பித்தேன்.

old diary க்கான பட முடிவுபுத்தகத்தின் பெரும்பாலான பக்கங்களை என்னிடமிருந்த புதுநிலவின் கவிதைகளை ஒட்டி அழகான (scrap book) தயார் செய்துவிட்டேன். அழகிய படங்கள், காகிதப்பூக்கள், தீபாவளி அட்டைப் படங்கள் என என் மனதிற்குத் தோன்றிய வண்ணம் அந்த டைரியை அலங்கரித்து வைத்தேன். எனக்குப் பிடித்த மிகவும் அழகான புதுநிலவின் கவிதைத் தொகுப்பை எனக்கு நானே மிக மிக மெச்சிக்கொன்டேன். நேரம் வாய்க்கும் போதெல்லாம் அவர் கவிதைகளை எடுத்துப்படிப்பேன், மெல்லிய சோகம் இழையோடும் அந்தக் கவிதை வரிகள் வாசிப்பதற்கு மிகவும் அருமையாய் அமைந்திருக்கும்.

அந்த டைரி எனது அந்தரங்க உடமைகளில் முதலிடம் பெற்றது, யாருக்கும் அதைக் கொடுக்கவே மாட்டேன் நான். இப்படியே சில வருடங்கள் அந்தத் தொகுப்பு என்னிடத்தில் இருந்தது. மேற்படிப்பு ஆரம்பித்து, வேலைக்கும் செல்ல ஆரம்பித்தவுடன் அந்தப் பழைய டைரியை புரட்டிப்பார்ப்பது கொஞ்சம் குறைய ஆரம்பித்துவிட்டது.

காலங்கள் மாற காட்சிகளும் மாறுமல்லவா? சிங்கையில் படிப்பையும் தொழிலையும் தொடர புற‌ப்பட்டேன். உடமைகளை எடுத்துவைத்து புற‌ப்படும்போது எனது அந்த டைரியைக் காணவில்லை, எங்கேயோ தவறி வைத்துவிட்டேனோ ?  மனம் மிக வருந்தியது, யாராவது எடுத்துச் சென்று விட்டனரோ? தேடித்தேடிப் பார்த்தும் கிடைக்கவில்லை, என்ன செய்வது ? வீட்டில் அனைவரிடமும் விசாரித்தால் நான் வீட்டில் இல்லாத சமயத்தில் போகிக்கு வீட்டைச் சுத்தப்படுத்துகிறேன் என்று எனது புத்தகத்தையும் பழைய உபயோகிக்காத புத்தகம் என்று எரித்துவிட்டிருந்தனர். எனக்கு அழுகை அழுகையாய் வந்தது, என்ன செய்வது, போனது போனதுதானே L  
           
வருடங்கள் பல கடந்து இன்றும் புதுநிலவின் கவிதை வரிகளில் நினைவில் நிழலாடும் ஒரு வரி "அரசாண்ட அற்புதம் நீ" !!