.

.
.

Friday, May 9, 2014

ஜஸ்டீனா..!!

மனித வாழ்க்கை மகத்தானது அது தனக்கும் பிற‌ர்க்கும் பயன்விளைவித்து மகிழும்பொழுது..! அழுதுகொன்டே பிறக்கிறோம், அழுதுகொன்டும், சிரித்துக்கொன்டும் காலத்தை முடித்து, முடிந்தால் சில வாரிசுகளை விட்டுவிட்டு, வாழ்வை முடித்து பிற‌ரை அழவைத்துப் புறப்படுகிறோம் .

ஆறடியில் முடிந்துவிடும் வாழ்க்கை என்பதை உணர்ந்த பொழுதிலும்  பணம், புகழ், அந்தஸ்த்திற்காக அல்லும் பகலும் பாடுபடுவதே நிரந்தரமாகிவிட்ட  சூழலில், இம்மண்ணில் எத்தனை பேருக்கு சுயநலம் களைந்து பொதுநலம்  பேணும் தெய்வீககுணம்  வாய்த்திருக்கிறது ?

ஒரு மனிதன் கண்முன்னே துடிதுடித்து  உயிருக்குப் போராடும்போதும், இரத்தம் சிந்தி நோகும்போதும் அவனைக் காப்பாற்றுவதை விட அவன் அனுஅனுவாய் சித்திரவதைப்பட்டு வாடுவதை காணொலி தொலைபேசியில் படமெடுத்து அதை யுடியூப்பிலும் பகிர்ந்து ரசித்து மகிழும் அரக்க மனங்களல்லவா இப்போது பூமியில் மலிந்துள்ளன !!

இவர்களுக்கு மத்தியில் தேவதைகளாய் சில அன்பு மனங்கள் மனிதவடிவில் நம்மிடையே வலம்வருவதுமுண்டு , நம் வாழ்வில் ஒளியேற்றிச் செல்வதுமுண்டு, பிரதிபலன் பாராது பிறர் வாழ்வில் நன்மை செய்து மகிழ்வதுமுண்டு ,அவர்கள் நம்மை பிரிந்து சென்றாலும், காலச்சுழற்சியில் கரைந்து போனாலும்,  அவர்கள் ஏற்றிவைத்த தீபமும், பதித்துச் சென்ற தடங்களும் மனவானில் என்றென்றும் சுடர்விட்டுப் பிரகாசித்து  நாம் வாழும் காலம்வரை அவர்களை நம் நெஞ்சில் நிலை நிறுத்திக் கொன்டுதானிருக்கிறது, அப்படி இந்த வாழ்வில் தீபமேற்றிய ஒரு தேவதையின் கதை இது....!

நடுத்தர குடும்பம், கல்விதான் எதிர்காலம் எனும் நிலை, இடைநிலைப்பள்ளிப் படிப்பு முடிந்தது, மேற்படிப்புக்கு பெரிய அளவில் செலவு செய்யும் வசதியில்லை..! கன‌வு கண்ட உயர்நிலைக்கல்வி தடைப்பட்டுவிட்டது !! தோல்வி மனதைக் குடைந்தது, இரவில் கண்ணீரால் தலையணை நனைந்தது, ஆறுதல் சொல்லவோ, வழிகாட்டவோ, பொருளாதாரத்தை விரட்டியே பொழுதுபோக உழைக்கும் பெற்றோரால் இயலவில்லை..!

பதின்ம வயது ஆகிவிட்டது, இன்னும் எத்தனை காலம் தான் நம் உயர்வுக்காக பெற்றோர் உழைப்பை சுரண்டுவது.. ? ந‌ம் வசதிக்காக அவர்கள் பண‌த்தை பிடுங்கித்தின்பது !  இறுதி முடிவு, படிப்பை உதறிவிட்டு வேலைக்கு செல்வது.

 "எட்டாத பழம் எப்பொழுதுமே புளிக்குமல்லவா ! அப்படித்தான், கரும்பாய் இனித்த கல்வி, வேம்பாய் கசந்து வாழ்க்கையை வேறு பக்கம் திசைதிருப்பிவிட்டது. இடைவேளையில் பயின்ற கணிணி சான்றிதழ்கள் வேலை வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுத்தன‌ . வீடு , பள்ளி என்ற வாழ்க்கை மாறி வீடு, தொழிற்சாலை   என்ற நிலை ஏற்பட்டது..!

கல்வியின்பால் இருந்த ஈர்ப்பு மங்கி மறையலாயிற்று. நாம் மிகவும் ஆர்வத்தோடும், விருப்பத்தோடும் ஈடுபாடு காட்டும் எந்த ஒன்றும் அது உயிரோ, பொருளோ நம்மை விட்டு விலகிவிட்டால் அதன் பிரிவின் தாக்கம் நிச்சயம் நம்மனதைக் காயப்படுத்தும். ஆனால் நாள‌டைவில் அது பெரிய முக்கியத்துவம் இல்லாத ஒன்றாய் மாறிவிடும். தோல்வி, ஏமாற்றம், ஏக்கம், சோகம், பிரிவு எல்லாமே இவ்வகைதான். காலம் ஒரு மிகச்சிறந்த மருந்து. அதற்கு மனதின் காயங்களையும் ஆற்றும் வல்லமையுண்டு..!

இரப்பர் கையுறை தொழிற்சாலையில் அலுவலகத்தில் வேலை. அலுவலகத்தில் பெரும்பான்மை சீனர்களும், அவர்களுக்குச் சற்றுக் குறைவாய் ம‌லாய்க்காரர்களும், ஓரிரு இந்தியப் பணியாளர்களும் பணியாற்றினர். ஆனால் தொழிற்சாலை ஊழியர்களில் பெருமளவு இந்தியர்களே..! பெரிய தலைகளில் (அதிகாரிகளில் ) ஒருவர்கூட இந்தியரில்லை..!

நாட்கள் நகர்ந்து கொன்டிருந்தன, அப்போது ஒரு செய்தி வந்தது ஏற்றுமதி இறக்குமதிப் பிரிவுக்கு (Logistic Department)  ஒரு இந்தியர் மானேஜராக (உயர் அதிகாரியாக‌) வரப்போகிறார் என்ற செய்திதான் அது..!

குறிப்பிட்ட நாளும் வந்தது, அவர் வந்தார், ஆறடி உயரத்தில், செம்மை நிற‌த்தில், நடுத்தரமான உடல்வாகோடு, ஆனால் அவர் ஆண‌ல்ல..! ஒரு பெண்..! அதுவும் அழகான நடுத்தர வயதுடைய ஓர் இந்தியப் பெண்..! அவர் பெயர் ஜஸ்டினா..!

ஜஸ்டினா மிகவும் அழகாக இருந்தார். அலைஅலையாய் தோள்வரை புரளும் கூந்தல், மேல் நாட்டு பெண்களை நினைவுறுத்தும் நடையுடை பாவனை, அலங்காரங்கள், நுனி நாக்கு ஆங்கிலம். ஆழ்ந்த சாக்லேட் நிற ஆல்மென்ட் கண்கள், மெலிந்த உதடுகள், கூரான நாசி. ஒட்டு மொத்த தொழிற்சாலையும் அவரைத்திரும்பிப்பார்த்து ரசித்தது. அவர் அதிகாரியாய் பணியிலமர்ந்தார்.  அலுவலகமே அவரிடம் நட்பு பாராட்டி மகிழ்ந்தது.

ஏற்றுமதி இற‌க்குமதிப் பிரிவு என்பது சாதாரணமல்ல, தொழிற்சாலையிலேயே மிகவும் பிரச்சனையான பகுதி அதுவே, தொழிற்சாலைகளுக்கு வரவேண்டிய பொருட்களையும், அனுப்ப வேண்டிய பொருட்களையும் திறம்பட நிர்வகித்து அவரவரிடம் சேர வேண்டிய பொருளை உரிய நேரத்தில் சேர்ப்பிக்கத்தவறினால் அலுவல் பிரிவு அதிகாரிகளிலிருந்து தொழிற்சாலை நிறுவனர் வரை அனைவருக்கும் பதில் சொல்லி ஆகவேண்டும், திட்டு வாங்கவேண்டும்.

பிரச்சனை மிகுந்த அந்த வேலையில் யாரும் நிலைப்பதில்லை, ஓரிரு மாதங்களிலேயே ஓடிவிடுவார்கள்..! ஆனால் ஜஸ்டினா திறம்பட பணியாற்றினார், தனக்குக் கீழ் பணியாற்றுபவர்களை சரியான முறையில் செயல்பட வைத்தார், எல்லாவற்றையும் குறிப்பெடுத்து வைத்தார், யாரும் அவரை குற்றம் சாட்டவோ, பழி சொல்லவோ அவர் வாய்ப்பை வழங்கவேயில்லை, அதையும் மீறி தம் மேலாதிக்கத்தை காட்ட முனைந்து அவரிடம் வீண்சண்டைக்கு வந்து அலுவலகத்தில் அனைவரின் முன்பாக அவரிடம் சத்தமிட்ட ஒரு சீன அதிகாரியை "இங்கே வந்து குரைக்காதே, நீ பேச வேண்டியதை  எம்டியிடம் பேசு" என்று திட்டி தலைகுனியவைத்து திருப்பி அனுப்பினார்..! நல்ல தைரியசாலி..!          

அவரிடம் பேசியது கிடையாது, சந்திக்கும் தருணங்களில் ஒரு புன்ன‌கை நலம் விசாரித்துப் போகும். ஓரிரு மாதங்கள் கடந்த பின் ஒருநாள் அவர் தன் உதவியாள‌ரிடம் வேலைமுடிந்ததும் என்னை அவர் அறைக்கு அழைத்து வரச் சொன்னதாக தகவல் வந்தது. என்ன விடயம் என்று சொல்லவில்லை, பயம் மனதைக் கவ்வியது, எங்களின் தொழிற்பிரிவுகள் வெவ்வேறு, இருந்தும் ஏன் அழைக்கிறார் ? திட்டப் போகிறாரோ என்று பயமாக இருந்தது.

வேலை முடிந்து அலுவலக‌ம் காலியாகிக்கொன்டிருந்தது. கைப்பையை எடுத்துக்கொன்டு அவர் அறைக்கு தயங்கித்தயங்கிச் சென்றேன். அவர் குளிர்சாதன அறையில் அமர்ந்திருந்தார், பூச்சாடியில்  வெளீர் மஞ்சள் நிறப்பூங்கொத்துக்கள்  மேசை ஓரத்தில் அவரைப்போலவே அழகாக..!
   
"வா சிவனேஸ்" நான் தயங்கி நிற்பதைப் பார்த்து கனிவான பார்வையும் மென்மையான புன்னகையோடும் வரவேற்றார். அவர் எல்லோரிடமும் ஆங்கிலம் தான் பேசுவார். இன்று அழகான தமிழில் ..!!

தான் கவனித்துக்கொன்டிருந்த கோப்புகளை ஓரமாய் எடுத்து வைத்துவிட்டு "உட்கார்" என்றார், 'ஆமாம் எவ்வளவு நாளா இங்கே வேலை செய்யுற" ? எனக்கேட்டார், பதிலை அறிந்து கொன்டதும் "நீ விஞ்ஞானப் பிரிவுல (science stream) படிச்சியாமே ? அப்புறம் ஏன் மேற்படிப்புக்கு போகல ? அக்கறையுடன் கேட்டார். "இல்லை வாய்ப்புக்கிடைக்கலை அதான்" என்றதும், தலையை மெல்ல ஆட்டியவாறு வாய்ப்பு எப்படித்தானா கிடைக்கும் ? நீதான் முயற்சி செய்யனும், மேற்படிப்பு படிக்கனும், நல்ல நிலைக்கு உன்னை உயர்த்திக்கனும், இப்படியே சில நூறு வெள்ளிகளுக்காக வாழ்க்கையை அடகு வைத்துவிடக் கூடாது என அவர் சின்ன சின்ன வாக்கியங்களில் தன் கருத்தை தெரிவித்துப் பேசிக் கொன்டிருந்தார். எனக்கோ அவர் என்பால் கொன்ட அக்கறை மனம் நெகிழச்செய்தது. தலையில் ஒளிவளையத்தோடும் இற‌க்கைகள் இரண்டோடும் ஒரு தேவதை என் முன் பேசிக்கொன்டிருப்பது போல் தோன்றியது. வாய்மூடி அவர் பரிவுடன் கூறுவதை மனதால் உள்வாங்கிக் கொன்டிருந்தேன்.

அவர் அதிகம் பேசவில்லை ஒரு பத்து வாக்கியம் அவ்வளவுதான். கடைசியாக புறப்படுமுன் "அந்த வானத்தைப்பார் இன்றிருக்கும் மேகங்கள் நாளை அங்கே நிலைப்பதில்லை, மனித வாழ்வும் அப்படியே, மாறாத எதுவும் நிலைப்பதுவுமில்லை, முன்னேறுவதுமில்லை..! உடனே உனக்குத்தகுந்த மேற்படிப்புக்கு விண்ணப்பிக்க வேண்டும், இன்னும் கொஞ்ச நாளில் உன்னை இங்கே நான் பார்க்கக்கூடாது" என அன்பாகக் கூறி வ‌ழிய‌னுப்பினார்.

வீடு திரும்பினேன், அவர் கூறியவை மீண்டும் மீண்டும் மனதில் ஒலித்துக்கொன்டேயிருந்தது. கைம்மாறு கருதா அவர் பரிவு மனதை மிகவும் பாதித்தது பலர் சொல்வதை புற‌க்கணித்துவிடும் மனதானது. ஏனோ யாரோ ஒரு சிலர் சொல்வதை மட்டும் உள்வாங்கிக்கொன்டு மீள்பார்வை செய்து மகிழ்கிறது.அதன்படி நடக்கவும் விழைகிறது.

அதன் பின்பும் ஜஸ்டினா, பார்க்கும்போதெல்லாம் எப்பொழுதும் போல்  ஒரு புன்னகைதான் செய்வார், ஆனால் என்மனமோ " நான் சொன்னதை நீ மதிக்கவேயில்லையே" எனத் திட்டுவதைப்போல் கற்பனை செய்து பயம் கொள்ளும்.

கல்வி வேண்டாம்..!  என்று புறக்கனித்த நிலை போய், ஜஸ்டினா இத்தனை பரிவுடன் சொன்னாரே என்பதற்காகவே ஏதாவது பகுதி நேரமாகப் படிக்க வேண்டும் எனும் முயற்சியில் பகுதி நேர‌ கணிணி டிப்ளோமா படிப்புக்கு விண்ணப்பித்து, அதை ஜஸ்டினாவிடம் தேடிப் போய் சொன்னதும் சிரித்தபடி தலையசைத்தார்.

வீட்டில் பெற்றோர் உன் சம்பள‌த்தை  உன் படிப்புக்கு முழுமையாக பயன்படுத்திக்கொள் என்ற‌னர் . பகுதி நேரக் கல்வி என்பது அத்தனை சுலபமல்ல..! வேலை முடிந்து மாலை ஏழு மணிக்குமேல் பொதுப் பேருந்தில் பயணித்து, பசி, தூக்கம் இரண்டும் கலந்த மயக்கத்தோடு படித்து, அயர்வோடு வீடு திரும்பி..! :(

காலம் தன் கடமையை மிகச் சரியாகவே செய்கிறது. சில காலம் கழிந்து வீட்டைப்பிரிந்து, உணவு, உடை, உறைவிடம் தந்து தாய்க்கோழி தம் இறக்கைக்குள் பிள்ளையைக் காப்பதுபோல் தங்கள் கவனத்தில் வைத்துக் காப்பாற்றிய பெற்றோரைப் பிரிந்து சிங்கைக்கு பயணம். ஒரு நாள் இரு நாள் அல்ல! ஒரு சில வருடங்களுக்கு, கல்வியும், பணியும் அங்கே கரைசேர. தனிமையான, த‌ன்னம்பிக்கை நிறைந்த யாத்திரை போன்ற வாழ்வு அது.! 

மீண்டும் திரும்பிய பின் இன்றுவரை ஜஸ்டினாவை சந்திக்க இயலவில்லை. ஆனால், ஒவ்வொரு முறை வானத்தை நோக்கும்போதும், நகரும் மேகங்களூடே அவர் முகம் ஆசிர்வதித்து புன்னகைப்பதை இன்றும்
தரிசிக்கமுடிகிறது...!


ஒரு தீபம் தன் ஒளியை இழக்காமலேயே பல தீபங்களை ஏற்றும் வல்லமை கொன்டது, சில மனிதர்களும் அவ்வாறே, பழகினாலும், பார்வையாள‌ர்களாகவே நிலைப்பவர்களும் உண்டு, பிறர் வாழ்வில் நுழைந்து மாற்றங்கள் நிகழ்த்துபவர்களுமுண்டு...!

சில தெய்வீக உள்ளங்களும் அப்படித்தான். இந்த கணிணி வாழ்க்கை எவ்வளவோ நல்ல உள்ளங்களை இதயத்தில் நட்பாகப் பதிவு செய்தாலும் "ஏன் இப்பொழுதெல்லாம் எழுதுவதில்லை" எனக் கண்டித்தும் "எழுத்துலகில் உன் ஆளுமையை ஆழ‌மாகப் பதிவு செய்" எனவும் "உன் பதிவுகள் முண்ணனி இதழ்களை அலங்கரிக்க வேண்டும்" என்றும் வாழ்த்தும் தேவதைகளையும் இது பெற்றிருக்கிறதே எனும் வியப்போடும் நன்றியோடும் விடைபெறுவோம்...! :)
        

Friday, May 2, 2014

மந்திரத்து மாங்கனி..!






இந்நவீன கணிணி யுகத்தில் பலர் அமானுக்ஷ்யங்களை நம்புவதில்லை, ஆவி, பேய், பிசாசு, பூதம், மந்திரம் மாயம், இறை நம்பிக்கை யாவற்றையும் எள்ளி நகையாடும் காலமும் கூட. உண்மையில் இவ்விடயங்கள் அளவுக்கு மீறி மிகைப்படுத்தப்பட்டு போலி என வகைப்படுத்தப்பட்டுவிட்டது. இவ்வுலகில் நம் ஐம்புலன்களால் தரிசிக்க‌ இய‌லாத மர்மங்களும் உள்ளன‌ என்பதை ஆராய்ந்து பார்த்தால் நம்மால் உணர இயலும். இயற்கையின் ஒருபுறம் அழகும் ஆற்றலும் என்றால் அதன் மறுபுறம் மர்மங்களும் அமானுக்ஷ்யங்களும் என்பது உண்மை. நாம் நம்ப மறுப்பதால் அவை உண்மையல்ல என்றாகிவிடுவதுமில்லை, அப்படியானதொரு சம்பவமே இது.

மோகனும் நளினியும் ஆதர்ச‌ தம்பதிகள். காதலித்து மணம் புரிந்துகொன்டவர்கள். மோகன் மேலதிகாரியாக பணியாற்றிய தொழிற்சாலையில் நளினி அலுவலகப்பிரிவில் அதிகாரியாய் பணியாற்றினாள், மோகனின் வசீகரமான தோற்றமும், தொழில் நேர்த்தியும் நளினியை ஈர்க்க, நளினியின் நளினமும் அடக்கமும் மோகனைக் கவர்ந்தது. நளினி வசதியான குடும்பத்துப் பெண். மோகன் இளம்வயதிலேயே தந்தையை இழந்த நடுத்தர குடும்பத்து வாலிபன், வசதி குறைவு. எனவே நளினியின் குடும்பம் மோகனுக்கு பெண்கொடுக்க மறுக்க, நளினி இரவோடிரவாக வீட்டைவிட்டு வெளியேறி மோகனிடம் தஞ்சமடைந்தாள். இருவீட்டார் மனக்கசப்புடன் நளினி மோகன் திருமணம் நடந்தேறியது. திருமணத்திற்குப் பிறகும் இருவரும் அதே தொழிற்சாலையில் தங்கள் பணியைத் தொடர்ந்தனர்.

அவர்களின் இல்லறஓடம் வாழ்க்கை சமுத்திரத்தில் நிதான‌மாக பயணித்துக்கொன்டிருந்தது. முதல் குழந்தை பிறந்தது. குழந்தையைப் பராமரிக்க அவர்களின் இருவீட்டிலிருந்தும் யாரும் முன்வரவில்லை, வெளியாரிடம் பிள்ளையை விடுவது அவர்களின் மனதிற்கு உகந்ததாகப் படாததால் நளினி தன் வேலையை கைவிட்டு முழு நேர இல்லத்தரசியானாள்.
ஒன்றன் பின் ஒன்றாய் நான்கு குழந்தைகள் அவர்களுக்கு பிறந்தனர். செலவுகள் அதிகரிக்க‌ வருமான பற்றாக்குறை ஏற்படத்துவங்கியது. நளினிக்கும் மோகனுக்கும் பொருளாதாரக் குறைவால் நிறைய சன்டை சச்சரவுகள் ஏற்படத்துவங்கின.

சில காலங்களில் நளினி சூழ்நிலைக்கேற்ப தனனை தயார்படுத்திக்கொன்டு சிக்கனமாக வாழ்க்கையை செயல்படுத்தத்துவங்கினாள், ஆனால் மோகன் மனதிலோ, வளமாக வாழ வேண்டும், முடிந்தால் ஒரே நாளில் பணக்காரனாகிவிடவேண்டும் எனும் பேராசை உள்ளத்தை அரித்தெடுத்தது..!

எல்லோரும்  நாடும் எளிய வழியாக நான்கு நம்பர் துணையை மோகனும் நாடிட வ‌ருமானத்தில் ஒரு பகுதி நான்கு இலக்க எண் கடைக்காரருக்கு போக ஆரம்பித்தது. அது போதாதென்று எங்கெல்லாம் சாமியாடிகளும், பூசாரிகளும், குறிசொல்பவர்களும் நான்கு இலக்க எண் தருகிறார்கள் என்று கேள்விப்பட்டாலும் உடனே அங்கே ஆஜராகி பணத்தை செலவழிக்க ஆரம்பித்து விடுவான் மோகன்.

ஒருநாள் மோகனுடன் பணியாற்றும் ஒருவர், தாம் அறிந்த சாமியார் ஒருவர் வீட்டில் வந்து பூஜை செய்தால் உடனே சகல வறுமைகளும் நீங்கி நம்பர் அடித்து பெரும் பணக்காரர் ஆகிவிடலாம் என ஐடியா வழங்கினார்.

மோகன் உடனே நளினியிடம் கலந்து பேசி அந்த‌ சாமியாரை வரவழைத்து வீட்டில் பூசை போட முடிவு செய்தான். நளினிக்கு இதில் கொஞ்சமும் ஆர்வம் இல்லை. கணவனையும் தடுத்துப்பார்த்தாள். ஆனால் மோகன் காதுகளில் எதுவும் ஏறவில்லை.

மோகன் மிகவும் ஆர்வத்துடன் சாமியாரை சந்தித்தான் . அவர் நடுத்தர வயதினராக தாடி மீசையுடன் காட்சியளித்தார். மோகனின் குறையைக் கேட்டு, கண்கள் மூடி சில நிமிடம் கழித்து மோகன் வீட்டில் தீய சக்தியொன்று  இருப்பதாகவும் அதை விரட்டினால் நில‌மை சரியாகிவிடும் என்றார். பின்னர் அவர் மோகனுடைய‌ வீட்டில் பூசை செய்வதற்கு நாள் குறித்துத்தந்தார். ஒரு நீண்ட பட்டியலைத்தந்து அதிலுள்ள பொருட்களை வாங்கி வைக்கும்படி பணித்தார்.

குறிப்பிட்ட நாளும் வ‌ந்தது. பூசை அன்றிரவு நடந்தது, ஆரம்ப முதலே இதெல்லாம் பிடிக்காத நளினி குழந்தைகளை அழைத்து வைத்துக்கொன்டு ஒரு ஓரமாய் அமர்ந்து நடப்பனவற்றை வேடிக்கை பார்த்தவண்ணமிருந்தாள்.

சாமியார் பூசையை ஆரம்பித்தார், அதற்கு முன் அவர்கள் வீட்டு சாமி மேடையைக் கண்டு அதிலிருக்கும் லக்ஷ்மி நரசிம்மர் படத்தை எடுத்துவிடுமாறு மோகனை பணித்தார். தன் பூசை சம்பந்தப்பட்ட எதையும் சாமி மேடையில் வைக்கக்கூடாது என்றும் அவர்களுக்கு கட்டளையிட்டார்.

 பூசைக்கு பயன்படுத்தும் சிவப்புத்துணிகளை எட்டாக எடுத்து அதில் உரித்த வாழைப்பழம், அரிசி, இன்னும் சில பொருட்கள் சேர்த்து எட்டு பொட்டலங்கள் செய்து வைத்தார். சந்தண‌ம், மஞ்சள், அரிசி, மிளகு யாவற்றையும் குழம்பாய்க் கரைத்து வீடு முழுதும் தெளித்தார்.

நடுவீட்டில் ஹோமம் வளர்த்து வீட்டிலுள்ள அனைவரையும் வெளியேற்றிவிட்டு, நெருப்பில் ஏதோ ஒன்றைத்தூவ அடர்த்தியான வெண்புகை எதிரே இருப்பவர் முகமும் தெரியா வண்ணம் மறைத்தது. நல்லவேளை அதற்கு முன்பே நளினி வீட்டிற்கு வெளியே குழந்தைகளுடன் வந்து நின்று கொன்டாள். பூசாரி மோகனின் துணையோடு வீட்டின் விள‌க்குகள் அனைத்தையும் அடைத்தார். வீடு இருண்டு புகை மண்டலமாகிப் போனது. எல்லோரையும் வெளியேற்றிவிட்டு பூசாரி மட்டும் ஒரு மண்பானையுடன் வீட்டினுள் சென்றார். சற்று நேரத்தில் வெளியேறியவர், மூடிக்கட்டிய அப்பானையினுள் ஏதோ ஒன்று பிராண்டுவதை அனைவருக்கும் காண்பித்தார் (பானையைத் திறக்காமலேயே) அந்தப் பானையும் மிகவும் பாரமாக இருந்தது.

எல்லாம் முடிந்தது. வீட்டிலிருந்த தீய சக்தியை பானைக்குள் பிடித்து விட்டேன். இனி கட்டி வைத்துள்ள பொட்டலங்களை எட்டுத்திசையிலும் கட்டிவைத்து பூசை செய்தால் எல்லாம் நல்லபடியாகும் எனக்கூறி தட்சிணையைப் பெற்றுக்கொன்டு புறப்பட்டார் சாமியார்.

மோகனுக்கு மிகவும் திருப்தியாக இருந்தது, சாமியார் கூறியபடியே வீட்டின் எட்டுத்திக்கிலும் ஆணியடித்து சாமியார் தந்த பொட்டலங்களை மாட்டி வைத்து தூப தீபம் காட்டி வழிபடத்துவங்கினான்.      
  
குறிப்பிட்டபடியே சில நாட்களில் மோகனுக்கு நான்கு இலக்க எண்ணில் 5000 வெள்ளிக்கு நம்பர் அடித்தது. மிகவும் அகமகிழ்ந்துபோனான் மோகன். முன்னிலும் தீவிரமாக மாட்டிவைத்த பொட்டலங்களுக்கு வழிபாடு செய்யத்துவங்கினான்.

மோகனின் நாட்கள் மகிழ்ச்சியுடன் நடக்க ஆரம்பித்த சில நாட்களில் நளினியின் நிலமை மாறத்தொடங்கியது. வீட்டில் யாரோ தன்னைப் பின்தொடர்வது போலவும் தான் கவனிக்கப்படுவது போலவும் உணரத்தொடங்கினாள்.பயமும், பதற்றமும் அவளை ஆட்கொள்ளத் துவங்கியது.

ஒருநாள் மதியம் வீட்டு வேலைகள் முடிந்து நளினி முன்னறையில் குழந்தைகளுடன் ஓய்வாக படுத்திருந்தாள் அவளின் 5 வயது மகன்  அவளுக்கு அருகாமையில்  அமர்ந்து பிஸ்கோத்துகளை உண்டுகொண்டிருந்தான்.

அரைகுறை உறக்கத்தில் இருந்த நளினிக்கு தன் கால்மாட்டில் யாரோ ஒரு பத்து பண்ணிரன்டு வயது மதிக்கத்தக்க சிறுவன் ஒருவன் அமர்ந்திருப்பதைப்போல் தோன்றியது. கழுத்து முதல் முழங்கால் வரை  சிவப்பு நிறத்துணியை அவன் அணிந்திருந்தான். லேசான விழிப்பு நிலையில் தன் மகனை நோக்கி  "தம்பி அண்ணனுக்கு கொஞ்சம் பிஸ்கோத்து கொடுப்பா " என்றாள் நளினி. அவள் குரல் கேட்டு அவள் கால‌டியில் பின்புறமாக அமர்ந்திருந்த அந்த உருவம் அப்படியே முகத்தை கழுத்துப்பக்கம் திரும்பி அவளைப் பார்க்க அதிர்ந்துபோனாள் நளினி. மலாய் சிறுவனைப்போல் காட்சியளித்த அந்த உருவத்தின் முகத்தில் கண்கள் இரண்டும் இரு கருந்திராட்சைகள் போன்று முழு கருப்பாக விழிவெண்படலமின்றி காட்சியளித்தது. அந்த உருவம் அவளை நோக்கி விகாரமானதொரு சிரிப்பை சிந்த, பதறியடித்து எழுந்தாள் நளினி. பக்கத்தில் மகன் மட்டும் சாப்பிடுக்கொன்டிருக்க இப்போது அந்த சிறுவனை அங்கே காணவில்லை...!

நளினிக்கு வியர்த்துக்கொட்டியது. ஏதோவொன்று சரியில்லை என ஆரம்பம் முதலே அவள் சங்கடப்பட்டது உண்மைதான் என அவளுக்கு தோன்றியது. அந்த சிறுவனின் ஆடை, வீட்டில் கட்டித் தொங்கவிடப்பட்டிருக்கும் பொட்டலங்களின் துணியைப் போலவே இருந்ததையும் அவள் நினைத்துப்பார்த்தாள். அதன் பின்னர் அவளின் உடல் நிலை மிகவும் மோசமாகிப் போனது, உடல் பலகீனமாகி, இரத்தசோகை பீடித்து, முகமும், நகமும் வெளுத்து, நடக்கவும் இயலாமல் படுத்தபடுக்கையானாள். 

குழந்தைகளும் நோய்வாய்ப்படலாயினர். மருத்துவச்செலவு ஏகத்துக்கும் எகிறிய்து. மருத்துவர்கள் நளினியை பரிசோதித்துவிட்டு அவளுக்கு ஒரு குறையும் இல்லை, ஆனால் இரத்த அளவு மட்டும் வெகுவாகக் குறைந்திருக்கிறது எனத்தெரிவித்தனர். வறுமையும். பிணியும் அக்குடும்பத்தை அளவுக்கு மீறி ஆட்டிவைக்க ஆரம்பித்தது.

நளினியின் பேச்சை அதுவரை கேட்காத மோகனுக்கு இதயம் துனுக்குற ஆரம்பித்தது. அதற்கு முன் இல்லாது இப்போது அவன் கண்களிலும் அவ்வீட்டின் அரவமற்ற பகுதிகளில் நிழலுருவங்கள் தென்பட, அவன் சந்தேகம் அதிகரிக்கத்துவங்கியது. இதில் ஆச்சரியம் என்னவென்றால் பூசைக்கு முன்னர் அப்படி எதுவும் அந்த வீட்டில் அவ்ர்களுக்கு தென்படவில்லை.

நளினி மிகவும் ஆரோக்கியமான பெண்மணி, திடசிந்தை கொன்டவளும் கூட. காய்ச்சல் சளி என்றுகூட நொந்தவள் கிடையாது.  இன்று இப்படியாகிவிட்டாளே என்று வருந்திய மோகன் ஒரு முடிவுக்கு வந்தான்.

குறிப்பிட்ட அந்த நாளன்று வீடு முழுதும் மஞ்சள் நீரைத்தெளித்து வீட்டின் எட்டுத்திசையிலும் கட்டிவைத்த பொட்டலங்களை

 எடுத்து ஒரு பையில் கட்டி தூர வீசினான். தனியாக எடுத்து வைத்திருந்த லக்ஷ்மி ந‌ரசிம்மர் படத்தை பூசையறையில் மீண்டும் எடுத்து வைத்து வழிபட்டான். ஆச்சரியப்படும் விதமாக இரண்டொரு நாளில் நளினி பழையபடி நலமாக நடமாடத் துவங்கினாள். குழந்தைகளும் தேறிட குடும்பம் ஒரு வழியாக சகஜ‌ நிலைக்குத் திரும்பியது...!

அதன் பின்னர் மோகனுக்கோ நளினிக்கோ நிழலுருவங்கள் எதுவும் கண்ணில் தென்படவேயில்லை...!

மே 2016 "மன்னன்" மாத இதழில் வெளிவந்த படைப்பு