.

.
.

Tuesday, April 29, 2014


சிவகாமியின் சபதம் -தேன் சாகரத்தில் சிறு தேனீயின் அநுபவம் 



கல்கி எனும் எழுத்துலகமேதை அடியேனுக்கு அறிமுகம் ஆக முக்கிய‌காரணியாய் விள‌ங்கிய அந்த நல்லுள்ளத்திற்கு நன்றி பல. இந்த பதிவு அந்த நட்புக்கு சமர்ப்பணம்...!

தமிழ்கூறு நல்லுலகு க(கொ)ண்ட அற்புத எழுத்துச்செல்வர்களில் குறிப்பிடத்தக்கவர் கல்கி எனும் பரிணாமம் கொன்ட இரா. கிருஷ்ணமூர்த்தி அவர்கள். இவர் சாகித்திய அகாதமியின் விருது பெற்ற எழுத்தாள‌ருமாவார். சிற‌ந்த வரலாற்றுப்புதினங்களின் படைப்பாளியான‌ இவரின் வாழ்க்கை வரலாற்றை https://en.wikipedia.org/wiki/Kalki_Krishnamurthy வழி நாம் அறியலாம்.

"சிவகாமியின் சபதம்"  பேனா மன்னர் கல்கியின் கைவண்ணத்தில் மலர்ந்து 12 வருடங்கள் கல்கி வார இதழில் தொடர்கதையாக வலம் வந்து எண்ணற்ற வாசகர்களின் ஏகோபித்த அபிமானத்தைப் பெற்ற புகழ்பெற்ற காவியமாகும்.
 
தமிழ் வாசகர்களின் மத்தியில் மிகவும் பிரசித்திபெற்ற இப்புதினம் "பேனா மன்னரின்" எழுத்து ஆளுமைக்கும், அவரின் ஒப்புவமையற்ற கதை சொல்லும் பேராற்றலுக்கும் தக்க சான்றாக விள‌ங்குகிறது என்றால் அது மிகையல்ல !


பரஞ்சோதி யாத்திரை, காஞ்சி முற்றுகை, பிட்சுவின் காதல், சிதைந்த கனவு என இக்கதையில் நான்கு பிரிவுகள் உள்ளன. முக்கியக் கதாமாந்தர்களாக பேரழகியும், பரதத்தில் கைதேர்ந்த ஆடலரசியுமாகிய சிவகாமியும் அவள் மனங்கவர்ந்த காதலனாக காஞ்சி இள‌வரசன் முதலாம் நரசிம்ம பல்லவனும் விளங்குகின்றனர். இருப்பினும் கலையும், வீரமும் நமது பெருமைக்குரிய பாரம்பரியம் என்பதை உள்ளங்கை நெல்லிக்கனியென பறைசாற்றும் இவ்வ‌ரலாற்றுப் புதினத்தில் இன்னார் மட்டுமே முக்கிய கதாமாந்தர் என அறுதியிட்டுக் கூற இயலா வண்ணம் பரஞ்சோதியாரின் வரலாறு மற்றும் மகேந்திர பல்லவன் வரலாறு, நாகநந்தி வரலாறு என பல்வேறு கோணங்களாக‌ கதை வடிக்கப்பட்டு வெகு நேர்த்தியாக‌ ஒன்றுசேர்த்துப் பின்னிப் பிணைக்கப்பட்டிருக்கிறது.


சிவகாமி, நரசிம்ம பல்லவனை முதன்மை கதாமாந்தர்களாகவும் மேலும் இவர்களைச்சுற்றி பல துணைக் கதாபாத்திரங்கள், சிவகாமியின் தந்தை தலைமைச் சிற்பி ஆயனார், நரசிம்ம பல்லவனின் தந்தையார் காஞ்சி மன்னன் முதலாம் மகேந்திரவர்ம பல்லவன், நரசிம்ம பல்லவனின் ஆப்த நண்பன் பரஞ்சோதி (பின்னாளில் சிறுத்தொண்டர் என அழைக்கப்பட்டு 64 நாயன்மார்களில் ஒருவராக புகழ்பெற்றவர்) மேலும் வில்லத்தனம் புரியும் கள்ள மனமும் வஞ்சக குணமும் படைத்த புத்தபிட்சு நாகநந்தி மற்றும் அவர் ச‌கோதரனும் சாளுக்கிய மன்னனுமாகிய புலிகேசி ஆகியோர் இக்கதையில் பெரும்பங்கு வ‌கிக்கின்றனர்.

பரஞ்சோதி யாத்திரை - விளையாட்டுத்தனம் நிறைந்த வாலிபன் பரஞ்சோதி கல்வி கற்று கல்விமான் எனும் அந்தஸ்தை அடைந்து தன் மாமன் மகளை மணக்க வேண்டி திருநாவுக்கரச பெருமானை நாடி சீட‌ராக இணைந்திட‌ காஞ்சி மாநகருக்கு வருகிறார், காஞ்சிவாசம் அவர் வாழ்வில் பல்வேறு திருப்பங்களை ஏற்படுத்தி விடுகிறது. விதிவசத்தால் அவர் புத்தபிட்சு நாகந‌ந்தியால் தனைத் தீண்டவந்த நாகத்திடமிருந்து காப்பாற்றப்பட்டு அவர் சிநேகத்தை பெறுகிறார். தொடர்ந்து சிவாகாமியை மத யானையிடமிருந்து காப்பாற்றி, அரண்மனைக் கைதியாகி, சிறைதப்பி, மீண்டும் காஞ்சி மன்னருக்கே தளபதியாகி, இளவரசன் நரசிம்மனின் உயிர்த்தோழனாகி, இறுதியில் போரின் மூர்க்கங்கள் தந்த தாக்கத்தில் சிவனடியாராகிவிடுகிறார்.
இன்று (29/4/2014) சிறுத்தொன்டநாயனார் அவர்களின் குரு பூசை தினமுமாகும்.

முதலாம் பகுதியில் பரஞ்சோதியைப் பற்றி விஸ்தரிக்கும் கதாசிரியர் கூடவே கலையும், வீர‌மும் காதல் கொள்ளும் அழகை சிவகாமி , இள‌வரசன் நரசிம்ம பல்லவன் வழியும்,  காஞ்சி மன்னனின் பராக்கிரமம், ஆளுமை, சாணக்கியம், கலையுள்ளம் ஆகியவற்றையும் அழகுறப் படைத்துச் செல்கிறார்.

காஞ்சி முற்றுகை - கலைகளின் பிறப்பிடமாக சிற்ப வேலைப்பாடுகளில் சிறந்து கலையம்சத்தோடு காண்போர் கவனத்தை ஈர்க்கிறது காஞ்சி மாநகர்.காஞ்சி மாநகரின் ம‌கோன்னதம் உண‌ர்ந்து அதை அடைய தன் சகோதரன் நாகநந்தியின் உதவியுடன் போருக்குப் புறப்படுகிறான் சாளுக்கிய மன்னன் புலிகேசி, ஆனால் சாணக்கியத்தில் சிறந்த மகேந்திரபல்லவ மன்னனை வெல்ல அவனால் முடியாது போய்விடுகிறது. பின்னர் காஞ்சி மன்னரிடம் சமாதானத் தூது விடுக்கிறான். "யானைக்கும் அடி சறுக்கும்" அல்லவா ? கள்ளத்தனம் நிறைந்த மன்னன் புலிகேசியின் நட்பை ஏற்கக்கூடாது என இளவரசன் நரசிம்மனும் ஏனைய அரசியல் பிரமுகர்களும் வலியுறுத்தியும், யாவரின் கருத்தையும் புற‌ந்தள்ளி புலிகேசியுடன் நட்பு பாராட்டி தனக்கும் நாட்டுக்கும் தீமை விளைவித்துக்கொள்கிறார் மன்னர் மகேந்திரபல்லவன். சாளுக்கிய ம‌ன்னனின் சாயம் வெளுக்கிறது, போர் மூள்கிறது. காஞ்சியின் வளங்கள் அழிக்கப்பட்டு, ஊர்கள் சூரையாடப்படுகின்றன. காஞ்சி மக்கள் அடிமைகளாக சிறைபிடிக்கப்படுகின்றனர். அவர்களோடு நம் கதாநாயகி சிவகாமியும் அவர்களிடம் அகப்பட்டுக்கொள்கிறார்.

பிட்சுவின் காதல் ‍ - சிறைபிடிக்கப்பட்ட ஆடலரசி சிவகாமி
சாளுக்கிய மன்னனின் சூழ்ச்சியால் தெருத்தெருவாக அந்நாட்டின் நாற்சந்திகளில் ஆடவைக்கப்படுகிறாள். எனினும் சாளுக்கிய மன்னனின் சகோதரனும் ஏற்கனவே சிவகாமிக்கு அறிமுகமானவருமாகிய புத்தபிட்சு
நாகநந்தி அவளை அந்த அவலத்திலிருந்து மீட்டு அவளுக்கு வேண்டிய உதவிகள் செய்து தன் ச‌கோதரனால் மேலும் இடர் ஏற்படா வண்ணம் பாதுகாக்கிறார். கூடவே தன் வரலாறைத் தெரிவித்து  இள‌வயது முதலே தமது இதயத்தில் பதிந்த அழகோவியம் சிவ‌காமியின் வடிவத்தைப் போன்றதுவேயாகும் எனவே தானும் அவளைக் காதலிப்பதாகக் கூறி அவள் காதலை யாசிக்கிறார். அவர் காதலை மறுத்து தான் நரசிம்மனுக்கு மட்டுமே உரியவள் என்பதில் உறுதியாய் நின்று  நாகநந்தியை நண்பராக மட்டுமே ஏற்றுக்கொள்கிறாள் சிவகாமி.

இதற்கிடையில் இள‌வரசன் நரசிம்ம பல்லவனும், தளபதி பரஞ்சோதியாரும் மாறுவேடத்தில் வந்து சிவகாமியைக் காப்பாற்ற விழைகின்ற‌னர். எனினும் அவர்களோடு ஊர் திரும்ப மறுத்து, சாளுக்கிய அரசை போரிட்டு வென்று தன்னை மீட்டால்தான் மீண்டும் காஞ்சி திரும்புவேன் என வீர சபதம் செய்கிறாள் சிவகாமி. இதைச் சற்றும் எதிர்பாராத நரசிம்மபல்லவனும் , பரஞ்சோதியும் வருத்தமும் ஏமாற்றமும் சூழ‌ நாடு திரும்புகின்றனர்.

சிவகாமியின் இச்செய்கையினால் இள‌வரசன் நரசிம்மபல்லவனுக்கு சிவகாமியின் மேல் கோபமும், வெறுப்பும் ஏற்படுகிறது. இதன் தொடர்ச்சியில் அவர் தமது தந்தை மன்னர் மகேந்திரபல்லவனின் ஆக்ஞைக்குக் கட்டுப்பட்டு நாட்டு நலனைக் கருத்தில் கொன்டு பாண்டிய‌ நாட்டு இள‌வரசியை கரம்பிடித்து இரு குழந்தைகளுக்கும் தந்தையாகிறார். மன்னர் மகேந்திரபல்லவனின் மறைவைத்தொடர்ந்து ராஜ்ய பரிபாலனத்தை ஏற்கும் நரசிம்ம பல்லவன் முழுமூச்சாய் படைதிரட்டி ஏழு வ‌ருடங்கள் கடந்த நிலையில் சாளுக்கிய நாட்டின் தலைநகரான‌ வாதாபியின்(இன்றைய கர்நாடகா) மேல் போர் தொடுத்து சாளுக்கிய அரசை தோற்கடித்து சிவகாமியை மீட்கிறார்.              

சிதைந்த கனவு - ஊர் திரும்பிய சிவகாமி உண்மை நிலையை அறிகிறாள். நரசிம்மனை மணக்கும் தன் ஆசையில் மண்விழுந்ததை உணர்ந்து வருந்தி வாடிப்போகிறாள். தன்னை ம‌றந்து மன்னன் நரசிம்மன் வேறொருத்திக்கு சொந்தமாகிவிட்ட நிலையில் தன் வாழ்க்கைக்கு புதிய அர்த்தம் தேடும் முயற்சியில் தன்னையும் தன்னில் குடிகொன்டிருந்த ஒப்பற்ற ஆடல் கலைத் திற‌னையும் முழுமையாய் இறைவனுக்கே அர்ப்பணிக்க முடிவு செய்கிறாள்  சிவகாமி. ஒரு சிற்பியின் மகளான சிவகாமி எனும் கலைப்பொக்கிக்ஷம் எந்த மனிதனுக்கும் சொந்தமாகாமல் தான் கைக்கொன்ட நாட்டியத்திறமையாலும் தன் மன உறுதியாலும் இறை அளவுக்கு தன்னை உயர்த்திக்கொண்டாள் என்பதோடு கதை நிறைவை நாடுகிறது.

மேலே குறிப்பிடப்பட்டது மட்டுமே முழுமையான கதை அல்ல, இதில் அட‌ங்காத பல அருமையான‌ கிளைக் கதாபாத்திரங்களும், முடிச்சுகள், திரும்பங்கள் என எண்ணிலடங்கா சுவார‌சியங்களும் இப்புதினம் முழுதும் விரவிக்கிடக்கின்றன, அவற்றை முழுமையாய் உணர இயன்றோர் இப்புதினத்தை நிச்சயம் வாசித்திட வேண்டும்.

அள்ளி அள்ளி உண்ண உண்ணத் தெவிட்டாத தேன‌முதம் போல் இன்னமுதாய் படிக்க படிக்கச் சுவையூட்டுகிறது இப்புதினம். காட்சிகள், கதாமாந்தர்களைப் பற்றிய வர்ணனைகள் யாவும் இக்கதை நம் கண்முன்னேயே நடப்பதைப் போலவே உணரச்செய்கிற‌து. கலை, வீரம், காதல், அன்பு, நகைச்சுவை, ஆன்மீகம்,  நட்பு, மாந்த்ரீகம், விவேகம் என எல்லா எல்லைகளையும் தொட்டு வாசகனின் சிந்தனையோடு பயணிக்கிறது இக்கதை...!

இக்கதையை ஆழ்ந்து வாசிப்போருக்கு நம் புராதனம் குறித்து அள‌ப்பறிய பெருமையோடு சிவகாமியை நினைக்கையில் சோகமும் நெஞ்சில் நிழலாடுவதை தவிர்க்க இயலாது.

காதல் கைகூடினால் அது வாழ்க்கையாகிவிடுகிறது, அதுவே தோல்வியடைந்தால் காவியமாகிவிடுகின்றது, சிவகாமிக்காக இதயம் கனக்க நம் கண்களும் குளமாகிவிடுகின்றன.

பி.கு : இதுவரை தமிழ்ப்பூங்காவில் அழகோவியமாக நடனமிட்டுக்கொன்டிருந்த ஆடலரசி சிவகாமி இன்றுடன் இங்கிருந்து விடைபெறுகிறார்.  :(


Thursday, April 10, 2014

தமிழ்மொழிக்கல்வியின் அவசியம்

"இரை தேடு இறையும் தேடு" என்பது பழமொழி. எங்கும் பணம் எதிலும் பணம் என பண‌மயமாக விள‌ங்கிடும் இக்காலக்கட்டத்தில் நேர்மையான வழியில் இரைதேட‌ பணம் ஈட்டி  நலமாகவும் வளமாகவும் வாழ்வது வாழ்வின் மிகப் பெரிய சவாலாகும். எதுவுமே சுலபமாக கிடைப்பதில்லை, பாடுபட்டால் மட்டுமே பலன் காண‌முடியும். அதை நிறைவேற்றிக்கொள்ளவேயாவரும் படாத பாடுகின்றனர் . அதிலும் அரசியல் பலமிழந்த, பொருளாதார அனுகூலங்களும் குறைந்த இந்தியர்களின் நிலை சொல்லில் அடங்காதது..!  

ஆரம்ப காலங்களில் உயர் உத்தியோகங்களில் பெருமளவில் இந்தியர்கள் பணியாற்றி சிறப்பாய் வாழ்ந்தனர். இன்று அந்நிலை மிகவும் சரிந்து வருவது அனைவரும் அறிந்ததே, ஏன் இந்நிலை ?  நம்மிடையே சிலர் உடலுழைப்புத்தொழிலாளியாக பல மணி நேரங்கள் உழைத்து சொற்ப வருமானமே பெறுகின்றனர். ஆனால் சிலரோ நன்கு படித்து, கல்வியில் மேல் நிலை அடைந்து மிகவும் அதிகமாக சம்பாதிக்கும் வாய்ப்பைப் பெறுகின்றனர். மருத்துவர்கள், வழக்கறிஞர்கள், நிறுவனங்களில்
 பதவி வகிப்பவர்கள் என இவர்களின் பட்டியல் நீளும். இவர்கள் மனம் விரும்பியபடி வாழ போதுமான பணவசதி பெற்றிருப்பர், ஆனால் உடலுழைப்புத் தொழிலாளிகளின் நிலை அதுவல்ல. அதனாலேயே பெற்றோர்களும்  தங்கள் குழந்தைகள் எதிர்காலத்தில் உயர்பதவிகள் வகிக்கவேண்டும் எனும் எதிர்பார்ப்பில் கல்வியில் சிறந்த நிலை அடைய வேண்டும் எனும் எதிர்பார்ப்புகளோடு குழந்தைகளை பள்ளிகளில் சேர்க்கின்ற‌னர். 

Cross Cultural Issues: Academic Integrity
தற்காலத்தில் பல தமிழ்ப் பெற்றோர்களும் ஏனைய இந்திய பெற்றோர்களும் தமிழ் தவிர்த்து ஆங்கிலம், மலாய் மற்றும் சீனப்பள்ளிகளை தங்கள் குழந்தைகளுக்கான கல்வி பயிலும் களமாக தேர்ந்தெடுக்கின்ற‌னர். இவர்கள் தமிழ்ப்பள்ளிகளை விட பிற‌மொழிப் பள்ளிகளே சிற‌ந்தவை எனும் எண்ணத்தோடு செயல்படுகின்ற‌னர்.

ஆரம்ப காலங்களிலும் சரி, இன்றும் சரி பல தமிழ்ப்பள்ளி மாணவர்கள் கல்வியில் சாதனை படைத்து, பட்டதாரிகளாக தங்களை உயர்த்திக் கொன்டு உயர் பதவிகள் வகித்து வருவது கண்கூடு. தமிழ்க்கல்வி இவர்களின் உயர்வுக்கு படிக்கல் ஆனதே தவிர தடைக்கல் ஆகவில்லை.

சில காலங்களுக்கு முன் ஒரு சம்பவம், ஒரு மலாய் பள்ளியில் இந்திய மாண‌வர்களும், சீன மாண‌வர்களும் கழிவறைக்கு அருகாமையில் (உடை மாற்றும் இடமாம்!) உணவருந்த வைக்கப்பட்டனர். இது நாடள‌வில் பெரிய விடயமாகப் பேசப்பட்டு பின்னர் புஸ்வானமாய் மறைந்துபோனது, ஆனால் நாம் அதை மறந்து போகலாமா ? தமிழ்ப்பள்ளியில் இத்தகைய அவலம் எங்காவது நிகழ்ந்துள்ளதா ? பிற‌கேன் நாம் தமிழ்ப்பள்ளிகளுக்கு முன்னுரிமை தர மறுக்கிறோம் ?

மேலும் ஒரு சம்பவம், ஒரு நாளிகைச் செய்தியாக வெளிவந்தது, வேற்று மொழிப் பள்ளியொன்றில் பயின்ற இந்திய மாணவன் ஒருவன் நான்காவது மாடியிலிருந்து விழுந்து விட்டான், படுகாயமுற்ற அவனை சீன மாண‌வன் 
ஒருவன் ஆசிரியர் அறைக்கு அள்ளிச் சென்று கிடத்தியபோது அங்கிருந்த ஒரு வேற்றுமொழி ஆசிரியை "இங்கே ஏன் இவனைக்கொன்டு வந்தாய் ? எனக் கேட்டாளாம். அதற்கு அந்த சீன மாண‌வன் "அப்புறம் என்ன உன் வீட்டுக்கா கொன்டு போகனும் ? எனக் கேட்டதும், வாய் மூடி அமைதியானாளாம் அந்த ஆசிரியை. தாமத‌மாக மருத்துமனைக்கு அனுப்பப்பட்ட அந்த மாணவன் உயிர் பிழைக்கவில்லை, வீட்டில் அவன் ஒரே பிள்ளையாம், இவையனைத்தும் நாளிகையில் வந்த செய்தி..! தமிழ்ப்பள்ளியில் இவ்வாறு நடக்குமா ? ஏன் நம் தேர்வு தமிழ்ப்பள்ளியாக இருப்பதில்லை ?

இன்னொரு சம்பவம், சீனப்பள்ளிக்கு அனுப்பப்ப‌ட்ட ஒரு வலு குறைந்த மாணவன் அங்கிருந்த மற்ற மாணவர்களால் தாக்கப்பட்டு  சாக்கடைக்கால்வாயில் தள்ளிவிடப்பட்டான். அவனை அப்பள்ளியின் தோட்டக்காரர் காப்பாற்றினார். இது குறித்த பதிவு  http://tamilpoongga.blogspot.com/2013/08/blog-post_2.html வெளிவந்துள்ளது. அம்மாணவன் விடயத்தில் அம்மாண‌வனின் பள்ளி ஆசிரியையும் தலைமை ஆசிரியரும் அத்தனை மெத்தனமாக நடந்து கொன்டிருக்கின்ற‌னர் . தமிழ்ப்பள்ளிகளில் அந்த அளவு அக்கறையின்றி இருக்கமாட்டார்கள் ஆசிரியர்கள் என உறுதியாகக் கூறலாம், ஏன் நமக்கு இன்னும் தமிழ்ப்பள்ளிகளின் மேல் நல்லெண்ணம் மலரவில்லை ?

இக்கரையிலிருந்து பார்த்தால் அக்கரை பச்சையாகத்தான் தெரியும் ! அங்கே சென்று பார்த்தால் மட்டுமே அதன் உண்மை நிலை விள‌ங்கும். தன்னிடமுள்ள சிற‌ப்பை உண‌ராத கவரிமான் புற்களிலே அதை தேடுமாம்..! அதுபோல் இருக்கிறது இன்றைய இந்தியப் பெற்றோர்களின் மனோநிலை..! 

தமிழ்ப்பள்ளிகளில் பயிலும் நம் மாணவர்கள், திருக்குறள், ஆத்திச்சூடி, கொன்றைவேந்தன், இன்னும் நமது சான்றோர்கள் நமக்கென ஆக்கிவைத்துச் சென்ற இதிகாசங்கள், புராண‌ங்கள், காவியங்கள் மற்றும் கலை, கலாச்சாரம், பண்பாடு ஆகியவற்றை இள‌வயது முதற்கொன்டே கற்றுத் தேற முடிகிறது. எந்த வேற்று மொழிப்பள்ளிகளில் ஐயா உங்களுக்கு இவையனைத்தும் கற்றுத்தரப்படுகிற‌து ? நமக்கென வழங்கப்பட்ட நல் பொக்கிக்ஷ‌ங்களை நாமே எடுத்தாளத் தவறுவதால்தானே இன்று ஆங்கிலேயன் அவற்றை புதுப்பித்து காப்புரிமை வைத்து சொந்தம் கொன்டாடுகிறான், அடையாள‌ம் இழந்த சமூகமாக நாம் ஆக வேண்டுமா ? அதற்கு நீங்கள் காரண‌கர்த்தா ஆகலாமா ?    
  
இன்னுமொரு விடயம், பள்ளிகளில் பலதரப்பட்ட போட்டிகள் நடத்தப்படும், விளையாட்டு, அறிவுத்திறன், பேச்சுத்திறன், கலைத்திறன் என. வேற்றுமொழிப்பள்ளிகளில் பயிலும் ந‌ம்மின மாணவர்களுக்கு திற‌மை வாய்த்திருந்தாலும் தமிழ்ப்பள்ளிகளைப்போல் இவற்றில் நேரடியாக களமிரங்க முடியாது, மலாய், சீன மாண‌வர்களோடு போட்டியிட்டு அதையும் தாண்டி திறமையும் அதிர்க்ஷ்டமும் வாய்த்தால் ஒழிய..! போட்டிகள் அங்கே அதிகம், வாய்ப்புகளோ குறைவு, நமக்கென யார் அங்கே வாய்ப்புகளை வாழையிலையில் வைத்துப் பறிமாறப் போகிறார் நம் பிள்ளைகளுக்கு ? நமக்கேன் இந்த நிதர்சனம் புரிய மறுக்கிறது ?

இறுதியாக,சிரமப்பட்டு உழைத்து படிக்கவைக்கும் பெற்றோர்கள் பிள்ளைகள் வாழ்வில் தெய்வமெனப் போற்றப்படுபவர்கள், அவர்களுக்கு நல்லதை மட்டுமே தங்கள் பிள்ளைகளுக்கு தரமேண்டும் எனும் ஆர்வம் அதிகம். 
"இரை தேடு இறையும் தேடு" என்பது பழமொழி. எங்கும் பணம் எதிலும் பணம் என பண‌மயமாக விள‌ங்கிடும் இக்காலக்கட்டத்தில் நேர்மையான வழியில் இரைதேட‌ பணம் ஈட்டி  நலமாகவும் வளமாகவும் வாழ்வது வாழ்வின் மிகப் பெரிய சவாலாகும். எதுவுமே சுலபமாக கிடைப்பதில்லை, பாடுபட்டால் மட்டுமே பலன் காண‌முடியும். அதை நிறைவேற்றிக்கொள்ளவேயாவரும் படாத பாடுகின்றனர் . அதிலும் அரசியல் பலமிழந்த, பொருளாதார அனுகூலங்களும் குறைந்த இந்தியர்களின் நிலை சொல்லில் அடங்காதது..!  

ஆரம்ப காலங்களில் உயர் உத்தியோகங்களில் பெருமளவில் இந்தியர்கள் பணியாற்றி சிறப்பாய் வாழ்ந்தனர். இன்று அந்நிலை மிகவும் சரிந்து வருவது அனைவரும் அறிந்ததே, ஏன் இந்நிலை ?  நம்மிடையே சிலர் உடலுழைப்புத்தொழிலாளியாக பல மணி நேரங்கள் உழைத்து சொற்ப வருமானமே பெறுகின்றனர். ஆனால் சிலரோ நன்கு படித்து, கல்வியில் மேல் நிலை அடைந்து மிகவும் அதிகமாக சம்பாதிக்கும் வாய்ப்பைப் பெறுகின்றனர். மருத்துவர்கள், வழக்கறிஞர்கள், நிறுவனங்களில்
 பதவி வகிப்பவர்கள் என இவர்களின் பட்டியல் நீளும். இவர்கள் மனம் விரும்பியபடி வாழ போதுமான பணவசதி பெற்றிருப்பர், ஆனால் உடலுழைப்புத் தொழிலாளிகளின் நிலை அதுவல்ல. அதனாலேயே பெற்றோர்களும்  தங்கள் குழந்தைகள் எதிர்காலத்தில் உயர்பதவிகள் வகிக்கவேண்டும் எனும் எதிர்பார்ப்பில் கல்வியில் சிறந்த நிலை அடைய வேண்டும் எனும் எதிர்பார்ப்புகளோடு குழந்தைகளை பள்ளிகளில் சேர்க்கின்ற‌னர். 

Cross Cultural Issues: Academic Integrity
தற்காலத்தில் பல தமிழ்ப் பெற்றோர்களும் ஏனைய இந்திய பெற்றோர்களும் தமிழ் தவிர்த்து ஆங்கிலம், மலாய் மற்றும் சீனப்பள்ளிகளை தங்கள் குழந்தைகளுக்கான கல்வி பயிலும் களமாக தேர்ந்தெடுக்கின்ற‌னர். இவர்கள் தமிழ்ப்பள்ளிகளை விட பிற‌மொழிப் பள்ளிகளே சிற‌ந்தவை எனும் எண்ணத்தோடு செயல்படுகின்ற‌னர்.

ஆரம்ப காலங்களிலும் சரி, இன்றும் சரி பல தமிழ்ப்பள்ளி மாணவர்கள் கல்வியில் சாதனை படைத்து, பட்டதாரிகளாக தங்களை உயர்த்திக் கொன்டு உயர் பதவிகள் வகித்து வருவது கண்கூடு. தமிழ்க்கல்வி இவர்களின் உயர்வுக்கு படிக்கல் ஆனதே தவிர தடைக்கல் ஆகவில்லை.

சில காலங்களுக்கு முன் ஒரு சம்பவம், ஒரு மலாய் பள்ளியில் இந்திய மாண‌வர்களும், சீன மாண‌வர்களும் கழிவறைக்கு அருகாமையில் (உடை மாற்றும் இடமாம்!) உணவருந்த வைக்கப்பட்டனர். இது நாடள‌வில் பெரிய விடயமாகப் பேசப்பட்டு பின்னர் புஸ்வானமாய் மறைந்துபோனது, ஆனால் நாம் அதை மறந்து போகலாமா ? தமிழ்ப்பள்ளியில் இத்தகைய அவலம் எங்காவது நிகழ்ந்துள்ளதா ? பிற‌கேன் நாம் தமிழ்ப்பள்ளிகளுக்கு முன்னுரிமை தர மறுக்கிறோம் ?

மேலும் ஒரு சம்பவம், ஒரு நாளிகைச் செய்தியாக வெளிவந்தது, வேற்று மொழிப் பள்ளியொன்றில் பயின்ற இந்திய மாணவன் ஒருவன் நான்காவது மாடியிலிருந்து விழுந்து விட்டான், படுகாயமுற்ற அவனை சீன மாண‌வன்
ஒருவன் ஆசிரியர் அறைக்கு அள்ளிச் சென்று கிடத்தியபோது அங்கிருந்த ஒரு வேற்றுமொழி ஆசிரியை "இங்கே ஏன் இவனைக்கொன்டு வந்தாய் ? எனக் கேட்டாளாம். அதற்கு அந்த சீன மாண‌வன் "அப்புறம் என்ன உன் வீட்டுக்கா கொன்டு போகனும் ? எனக் கேட்டதும், வாய் மூடி அமைதியானாளாம் அந்த ஆசிரியை. தாமத‌மாக மருத்துமனைக்கு அனுப்பப்பட்ட அந்த மாணவன் உயிர் பிழைக்கவில்லை, வீட்டில் அவன் ஒரே பிள்ளையாம், இவையனைத்தும் நாளிகையில் வந்த செய்தி..! தமிழ்ப்பள்ளியில் இவ்வாறு நடக்குமா ? ஏன் நம் தேர்வு தமிழ்ப்பள்ளியாக இருப்பதில்லை ?

இன்னொரு சம்பவம், சீனப்பள்ளிக்கு அனுப்பப்ப‌ட்ட ஒரு வலு குறைந்த மாணவன் அங்கிருந்த மற்ற மாணவர்களால் தாக்கப்பட்டு  சாக்கடைக்கால்வாயில் தள்ளிவிடப்பட்டான். அவனை அப்பள்ளியின் தோட்டக்காரர் காப்பாற்றினார். இது குறித்த பதிவு  http://tamilpoongga.blogspot.com/2013/08/blog-post_2.html வெளிவந்துள்ளது. அம்மாணவன் விடயத்தில் அம்மாண‌வனின் பள்ளி ஆசிரியையும் தலைமை ஆசிரியரும் அத்தனை மெத்தனமாக நடந்து கொன்டிருக்கின்ற‌னர் . தமிழ்ப்பள்ளிகளில் அந்த அளவு அக்கறையின்றி இருக்கமாட்டார்கள் ஆசிரியர்கள் என உறுதியாகக் கூறலாம், ஏன் நமக்கு இன்னும் தமிழ்ப்பள்ளிகளின் மேல் நல்லெண்ணம் மலரவில்லை ?

இக்கரையிலிருந்து பார்த்தால் அக்கரை பச்சையாகத்தான் தெரியும் ! அங்கே சென்று பார்த்தால் மட்டுமே அதன் உண்மை நிலை விள‌ங்கும். தன்னிடமுள்ள சிற‌ப்பை உண‌ராத கவரிமான் புற்களிலே அதை தேடுமாம்..! அதுபோல் இருக்கிறது இன்றைய இந்தியப் பெற்றோர்களின் மனோநிலை..!

தமிழ்ப்பள்ளிகளில் பயிலும் நம் மாணவர்கள், திருக்குறள், ஆத்திச்சூடி, கொன்றைவேந்தன், இன்னும் நமது சான்றோர்கள் நமக்கென ஆக்கிவைத்துச் சென்ற இதிகாசங்கள், புராண‌ங்கள், காவியங்கள் மற்றும் கலை, கலாச்சாரம், பண்பாடு ஆகியவற்றை இள‌வயது முதற்கொன்டே கற்றுத் தேற முடிகிறது. எந்த வேற்று மொழிப்பள்ளிகளில் ஐயா உங்களுக்கு இவையனைத்தும் கற்றுத்தரப்படுகிற‌து ? நமக்கென வழங்கப்பட்ட நல் பொக்கிக்ஷ‌ங்களை நாமே எடுத்தாளத் தவறுவதால்தானே இன்று ஆங்கிலேயன் அவற்றை புதுப்பித்து காப்புரிமை வைத்து சொந்தம் கொன்டாடுகிறான், அடையாள‌ம் இழந்த சமூகமாக நாம் ஆக வேண்டுமா ? அதற்கு நீங்கள் காரண‌கர்த்தா ஆகலாமா ?  
   
இன்னுமொரு விடயம், பள்ளிகளில் பலதரப்பட்ட போட்டிகள் நடத்தப்படும், விளையாட்டு, அறிவுத்திறன், பேச்சுத்திறன், கலைத்திறன் என. வேற்றுமொழிப்பள்ளிகளில் பயிலும் ந‌ம்மின மாணவர்களுக்கு திற‌மை வாய்த்திருந்தாலும் தமிழ்ப்பள்ளிகளைப்போல் இவற்றில் நேரடியாக களமிரங்க முடியாது, மலாய், சீன மாண‌வர்களோடு போட்டியிட்டு அதையும் தாண்டி திறமையும் அதிர்க்ஷ்டமும் வாய்த்தால் ஒழிய..! போட்டிகள் அங்கே அதிகம், வாய்ப்புகளோ குறைவு, நமக்கென யார் அங்கே வாய்ப்புகளை வாழையிலையில் வைத்துப் பறிமாறப் போகிறார் நம் பிள்ளைகளுக்கு ? நமக்கேன் இந்த நிதர்சனம் புரிய மறுக்கிறது ?

இறுதியாக,சிரமப்பட்டு உழைத்து படிக்கவைக்கும் பெற்றோர்கள் பிள்ளைகள் வாழ்வில் தெய்வமெனப் போற்றப்படுபவர்கள், அவர்களுக்கு நல்லதை மட்டுமே தங்கள் பிள்ளைகளுக்கு தரமேண்டும் எனும் ஆர்வம் அதிகம். எனவே இந்தியப் பெற்றோர்கள் கல்வியோடு கலை, கலாச்சாரம், பண்பாடு, தொன்மை மிகுந்த நமது பாரம்பரியம் ஆகியவற்றை முறையே கற்றுத்தேற வழிவகுக்கும் தமிழ்க்கல்வியை அவசியம் தங்களது குழந்தைகளுக்கு வழங்கவேண்டும்.

200 ஆம் ஆண்டு தமிழ்க்கல்வியினை வெற்றிகரமாய் வரவேற்கும் நாம் , இம்மண்ணில் தமிழ்மொழிக்கல்வி மேன்மேலும் ஆல் போல் தழைத்து அருகு போல் வேரோடி, வாழையடி வாழையாய் தழைக்க நமது இளவல்களை தமிழ்ப்பள்ளிகளில் இணைப்போம், தமிழ்மொழிக்கல்வியின் வாயிலாய் அவர்களை சிறந்த மாந்தர்களாய் வார்த்தெடுப்போம், வாழ்க தமிழ், வள‌ர்க தமிழ்க்கல்வி

ஆக்கம்

சிவ.ஈஸ்வரி
பினாங்கு

   
      

Wednesday, April 9, 2014

இருள் சிநேகிதி ‍‍-  நான்காம் பாகம்

 

முன்கதை : ஒரு பணக்கார முரடனுக்கு மனைவியாகி, அவன் சிறை சென்றதும், வேறு நாதியின்றி தன் மாமன் மகன் நாதன் வீட்டில் தஞ்சம் புகுந்தாள் சரசு. இதனால் அவள்  ச‌ந்தேகிக்கப்பட்டு சிறைமீண்ட‌ அவள் கணவனால் வெட்டிக்கொலை செய்யப்படுகிறாள் . இனி...!

ந‌டசத்திரங்களற்ற அடர் கருமை படர்ந்த வானம், ஊரே உற‌க்கத்தின் பிடியில் இரவின் நிசப்தம் மேலும் பயத்தைக்கூட்ட , இருள் மட்டுமே சாட்சியாக‌, ஒரு கோரம் கொடூரமாய் அங்கே அரங்கேறி முடிந்தது.

நாதனை வெட்டிச் சாய்த்துவிட்டு, சரசுவின் தலையைத் துண்டித்து துடிதுடிக்க கொலை செய்த இராஜன், சரசுவின் உடலில் பீறிட்டுப் பெருகிய இரத்த வெள்ளத்தை ஒரு மன நோயாளியின் மன நிலையோடு பார்த்து இரசித்துக் கொன்டு நின்றான், பின்னர் தான் வந்த வேலை முடிந்ததென்று தன் மேல் படிந்த இரத்தக் கறைகளோடும் கையில் வைத்திருந்த பாராங்கத்தியுடனும் அருகாமையிலிருந்த காவல் நிலையத்தில் சரண‌டைந்தான்.

ஏதோ பெரிதாய் சாதித்து விட்டதைப்போல் மிகவும் சாந்தமாய் மன நிறைவோடு காணப்பட்டான் இராஜன். தனக்கு உரிமையானதை அழித்தாவது பிற‌ர் அடையாமல் தடுக்கும் அவன் குணம் ஈடேறியதில் அவனுக்குப் பரம  திருப்தி.

அரைகுறை விழிப்பும் களைப்புமாய் இருந்த காவல்துறை அவனைக் கண்டு அதிர்ந்து விழித்துக் கொன்டது! விடயமறிந்து அவனை சிறையில் தள்ளிவிட்டு அவனிடமிருந்து கற‌ந்த தகவல்களோடு நாதனின் வீட்டிற்கு விரைந்தது.

உறக்கத்தின் பிடியில் மெய்மறந்திருந்த அந்த வசிப்பிடமும், அங்கே நிகழ்ந்து முடிந்த சம்பவம் அறிந்து அவசர அவசரமாய் உற‌க்கம் உதறி நாதனின் வீட்டின் முன் குவியலானது. நடந்த சம்பவம் அறிந்து அனைவர் முகத்திலும் பயமும் அதிர்ச்சியும் பிரசன்னமானது..!

காவல்துறை இரத்த வாடை வீசிய அந்த வீட்டினுள் ஐயத்துடன் அடியெடுத்து வைத்தது. முன்னறையிலேயே அவர்களுக்கு பேரதிர்ச்சி காத்திருந்தது.  படுக்கை போர்வை யாவும் இரத்தம் தோய்ந்து வழிய, இரத்தவெள்ளத்தில் தன்னிலையிழ‌ந்து கிடந்தான் நாதன், சற்றே தள்ளி அது நாள் வரை அவன் உடலோடு ஒன்றியிருந்து இன்று அந்நியமாகிப்போன  அவன் கரம் துடிப்பையிழந்து சவ‌மாகியிருந்தது.

அவன் சுருண்ட கேசம் நனைந்து, அழகான முகம் வாடி , உடல் முழுதும் இரத்தகளறியால் ஈரமாகி, கண்கள் மூடி, சன்னமாய் இழையோடியது மூச்சு மட்டும்..!, காவல் துறை விரைந்து செயல்பட, அவனை அவசரஊர்தி(ஆம்புலன்சு) அள்ளிக்கொன்டு மருத்துவமனைக்கு விரைந்தது.   

அடுத்து அந்த வீட்டின் பின்னறையில் அறை முழுதும் சிவப்பு சாயத்தை கொட்டிக் கவிழ்த்ததைப்போல் ஒரே இரத்த வெள்ளம், சிவந்த நிற‌மொன்றே அங்கே பிரதானமாய் பிரவகிக்க, சிவப்புச் சமுத்திரம்போல் விளங்கியது அவ்விடம், அதில் சிதைந்த தாமரையாய் புதைந்து கிடந்தாள் சரசு ! இரவின் குளிரோடு அங்கே அலைபாய்ந்த சிறு காற்றும் இரத்த வாடையை அள்ளித் தெளித்துக்கொன்டிருந்தது.


அந்த இரத்தக் குவியலுக்கு நடுவே கைதேர்ந்த சிற்பி வடித்த அழகான சிலையொன்று சிதைந்து சின்னாபின்ன‌மானதைப்போல் அதுவரையில் பேச்சோடு செயலும், உடலும் உயிருமென‌ ந‌டமாடி இன்று பிணமாகிப்போன சரசுவின் உடல் அதுவும் தலைவேறு உடல் வேறாக..!

கண்டோர் கண்கள் கலங்கின, இரத்தவாடை முகத்தில் அறைய குடல் பெயர்ந்து வாய் வழி வந்து விடுவதைப்போல் குமட்டிக்கொன்டு வந்தது அவர்களுக்கு. காண‌முடியாதோர் கைக்குட்டையால் முகம் மூடி வெளியேறினர். கடமை ஆற்ற வேண்டிய கட்டாயத்திற்குள்ளானவர்கள் வேறு வழியின்றி தங்கள் இதயத்தை இரும்பாக்கிக்கொன்டு இரத்தத்தில் ஊறிய அவள் சிரசையும் உடலையும் அங்கிருந்து அப்புற‌ப்படுத்தி மருத்துவமனைக்கு அள்ளிச்சென்றனர்.

அதற்குப் பிற‌கு அந்தக் கொலைக்களம் சாட்சிபீடமாக மாற்றப்பட்டு, கோடுகள் கிழித்து, யாரும் பிரவேசிக்க‌ இயலாமல் தடுப்புகள் சுற்றி, புகைப்படங்கள் எடுத்து. காரியங்கள் முடிந்ததும் அந்த வீடு யாரும் உட்புகாமல் சீல் வைக்கப்பட்டது.

எல்லாம் ஓய்ந்தது. ஆளுக்கொன்றைப் பேசிக்கொன்டு, சூள்கொட்டியவாரே ஊர் களைந்து போனது. விடிய இன்னும் சில பொழுதே எஞ்சியிருக்க, தனித்து விடப்பட்ட அந்த வீட்டின் ஓர் மூலையில் புகையால் செதுக்கிய சிற்பம் போன்று சூனியத்தை வெறித்த பார்வையோடு, ஓர் உருவம் அசைவற்று அமர்ந்திருந்தது. வாழ்க்கையைத் தொலைத்து உடலிலிருந்து உயிரும் தொலைந்து விட்ட அப்பாவி சரசுவின் ஆன்மாதான் அது...!
தொடரும்...            

  

Monday, April 7, 2014

 கடுப்படிக்கும் விளம்பரங்களும், கவலைப்படும் தமிழ் நெஞ்சங்களும்...!



நம் நாட்டில் மிகப்பெரிய மூவினங்களாக அங்கீகரிக்கப்பட்டவை மலாயர், சீனர் மற்றும் இந்தியர்கள், (வெளி நாட்டுக்குடியேறிகள் தற்சமயம் அதிகரித்து வருவது வேறு ஒரு தலைவலி..!) இந்நாட்டில் திராவிட இனங்களான‌ தமிழர்கள், தெலுங்கர்கள், மலையாளிகள் மற்றும் கன்னடர்களோடு சீக்கியர்களும் வாழ்ந்து வருகின்றனர், எனினும் தமிழ் மொழி பேசும் தமிழர்கள் எண்ணிக்கையில் அதிகமாக இருப்பதால் தமிழ் மொழி இந்தியர்களைப் பிரதிநிதிக்கும் மூன்றாவது மொழியாக ஆங்கிலம், மலாய்க்கு அடுத்து இந்தியர்களுக்கு தமிழும், சீனர்களுக்கு மான்டரீன் மொழியும் அங்கீகரிக்கப்பட்டது.

ஒற்றுமையில் சிறந்தவர்கள் சீனர்கள் என்பது வெள்ளிடைமலை, தங்கள் பெயர்களிலேயே தங்களை பிரிவுபடுத்தும் சாதிப்பிரிவுகள் பல இருந்தாலும், த‌ங்கள் இனத்தில் பல பிரிவுகள் இருந்தாலும் மான்டரீன் மொழியை தங்கள் பிரதிநிதித்துவ மொழியாக உள‌மாற ஏற்று இந்நாட்டில் உருப்படியாய் வாழ்ந்து வருகிறார்கள், தங்களை பிரதிநிதிக்கும் மொழிக்கும் அதிக முக்கியத்துவம் ஏற்படுத்திக்கொன்டு !  இன்று சீன மொழியை யாராவது சிறுமைபடுத்திப் பார்க்க முடியுமா ? அப்படிச் செய்ய முனைந்த அரசியல்வாதிகளின் மூக்கை அவர்கள் எப்படி உடைப்பார்கள் என்பதை அரசியல் அறிந்தோர் நிச்சயம் அறிந்திருப்பர், ஆனால் இந்தியர்கள் ? 

தற்கால சூழலில் ம்லேசிய இந்தியரிடையே பல பிரிவுகள், ஆயிரத்தெட்டு அரசியல் கட்சிகள், சாதிச்சங்கங்கள் இவை தனிமனிதனுக்கும் ஒட்டுமொத்த இந்தியர்களுக்கும் ஆற்றிடும் நன்மைகள் என்ன என்பதை எல்லோரும் சிந்தித்துச் சீர்தூக்கிப்பார்க்க‌ வேண்டும். ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு, ஒற்றுமை நீங்கிடில் தாழ்வு ! எனும் உண்மை தற்காலத்தில் மறக்கப்பட்டு வருவது கண்கூடு. சுயநலம், சுயலாபம் மட்டுமே பிரதானம் என இயங்கும் அரசியல்வாதிகள் ஒருபுறம். பொருளாதாரத்தில் உயர்ந்தோர் மேல்நாட்டு ஆங்கிலேயர்களாக தம்மை அடையாளம் காட்டிக்கொள்ள முயல்வது மறுபுறம்..!

நேற்று வடக்கு நெடுஞ்சாலையில் (பினாங்கிலிருந்து தைப்பிங் செல்லும் வழியில்) பயணித்துக் கொன்டிருக்கையில் ஒரு காட்சி, அது ஒரு ரொட்டி(பிஸ்கோத்து) விளம்பரம், பெரிய காட்சிப்பேழையாக‌ (பேனராக) வைக்கப்பட்டிருதது, அதிலே நம் நாட்டின் மூவினப் பெண்களும் அந்த பிஸ்கோத்தை உண்டுவிட்டு தங்கள் கருத்தை ஒரு வார்த்தையில் சொல்கிறார்களாம், மலாய் பெண்மணி மலாயில் ஒரு வார்த்தை, சீனப்பெண்மணி மாண்டரீன் மொழியில் ஒரு வார்த்தை, அடுத்து சேலையணிந்த ஒரு பெண்மணி ஒரு வார்த்தை சொல்கிறார் அது என்னவென்றே புரியவில்லை, காரணம் அந்த எழுத்து இந்திமொழியில் இருக்கிறது !!!.

பார்த்தீர்களா தமிழுக்கு நேர்ந்த தலைகுனிவை ?, இது மட்டுமல்ல, இப்போது பல தொலைக்காட்சி விள‌ம்பரங்களிலும் பல வகைகளில் தமிழர்களை பின்னுக்குத்தள்ளி இந்தியர்களில் ஒரு பிரிவாகவும், எண்ணிக்கையில் குறைவாகவும், பொருளாதரத்திலும், கல்வி நிலையிலும் மேம்பட்டு உள்ள சீக்கியர்களை மட்டுமே இந்தியர்களாக அடையாளம் காட்டும் முயற்சி தற்பொழுது பரவலாக இங்கே சிலரால்  மேற்கொள்ளப்பட்டு வருவது அனைவருக்கும் காணக்கிடைக்கும் காட்சிகளே.ஏனென்று கேட்க பாவம் இந்த அநாதைச் சமுதாயத்திற்கு ஆளில்லை...! 

ஏன் இந்த நிலை ? என்ன செய்து கொன்டிருக்கின்றார்கள் நம் பிரதிநிதிகள் ? இதையெல்லாம் தட்டிக் கேட்காமல் அவர்களுக்கு வேறென்ன வேலை ? ஓட்டுப்போட மட்டும்தான் நாமா ? நமக்கென ஒரு பிரச்சனையென்றால் இவர்கள் யாரும் கேட்க மாட்டார்களா ?

தமிழுக்கு முக்கியத்துவம் கோரப்பட‌ வேண்டும், சிங்கையில் அமைந்துள்ளதைப்போல அரசியல்ரீதியில் தமிழ் இங்கே இந்தியர்களுக்கு கட்டாய மொழியாக்கப்பட வேண்டும், மேற்கல்விகளுக்கும் தமிழ் அவசியமாக்கப்படவேண்டும். தமிழ்ப்பள்ளிகள் தமிழ் சார்ந்த மேன்மைகளையும், அதனால் விளையும் நன்மைகளையும் இந்தியர்களுக்கு எடுத்துரைக்க வேண்டும். அரசியல்வாதிகள் தமிழறிந்தவர்களாக, தமிழை வாழவைப்பவர்களாக இருப்பதை நாம் உறுதி செய்யவேண்டும் ! இனிவரும் காலங்களில் இவற்றை செய்வோமா நாம் ?

Wednesday, April 2, 2014

என் வீட்டுத் தோட்டத்தில்....! 

பசுமைப்புரட்சிக்கு வித்திட்ட நோபல் பரிசாளர் (2004) வாங்கரி மாத்தாய் அவ‌ர்களுக்கு இப்பதிவு சமர்ப்பணம் (ஏப்ரல் 1 அவர் பிறந்த தினம்) 


இவரின் நினைவாக‌ (மறைந்த தினம் : 25/9/2011) இவருக்காக வரையப்பட்ட பதிவு http://tamilpoongga.blogspot.com/2012/09/blog-post.html

நீர்வளமும் நிலவளமும் நிறைந்த நம் நாட்டில் பசுமைக்கு பஞ்சமேயில்லை, இங்கே காணும் இடமெங்கும் மரங்களும் செடி கொடிகளும், பச்சை போர்வை போர்த்திய மலை வளங்களும் நீக்கமற‌ நிறைந்து அழகாக காட்சியளிக்கும். நாட்டின் வளர்ச்சியின் பேரால் ஆங்காங்கே இயற்கைவளங்கள் சுரண்டப்படுவதும், சூரையாடப்படுவதும் உண்மைதான், எனினும் அவையனைத்தையும் தாண்டி இன்னும் மண்ணின் மகத்துவத்தை காப்பாற்ற பசுமை வளங்கள் பயன்பட்டுக்கொன்டுதானிருக்கின்றன.

இதுபோன்ற‌ இயற்கையான பசுமை அழகோடு சில சமயங்களில் மனிதர்களின் கைவண்ணங்களிலும் பூங்காக்கள், பூந்தோட்டங்கள், காய்கறித்தோட்டங்கள், செயற்கைக் காடுகள் என பசுமை பூத்து குலுங்குவதுண்டு. அவ்வகையில், அண்மையில் நம் பிரதமரும் மக்கள் தங்களுக்கு அருகாமையில் இருக்கும் உபயோகிக்கப்படாத நிலங்களில் தங்கள் தேவைகளுக்கான காய்கறிகளை பயிரிட்டுக்கொள்ளலாம் என அறிக்கை வெளியிட்டிருந்தது சிறப்பு..! எல்லோரையும் விட சீனர்களே இவ்வாய்ப்பையும் அதிகம் பயன்படுத்திக்கொள்வதை பரவலாகக் காணமுடிகிறது.

பொதுவாகவே ம‌லாய்க்காரர்கள் "கெபூன்", "டூசூன்" என நிலங்களை வகைப்படுத்தி தங்கள் தேவைகளுக்கும், வியாபாரத்திற்கும் பழவகைகளும், காய்கறிகளும் பயிரிடுவது பல காலமாகவே இங்கு நடைபெற்று வருகிறது. சீனர்கள் சொல்லவே வேண்டாம், வீட்டிற்கு முன் கொஞ்சம் நிலமிருந்தாலும் அல்லது அக்கம் பக்கத்தில் இருக்கும் யாரும் உபயோகிக்காத நிலங்களை பண்படுத்தி பலவிதமான கீரைகள், காய்கறி வகைகளை நட்டு அசத்திவிடுவார்கள்.

நம்மவர்கள் மட்டும் சளைத்தவர்களா என்ன ? ஆர்வமும் வசதியும் கொன்ட பலர் தங்களுக்கு தேவையானவற்றை பயிரிட்டு பாங்கோடு வளர்த்துவரும் அழகையும் நாம் கண்டுகொண்டுதான் இருக்கிறோம். பெரும்பாலும் இவர்கள் கைவண்ணத்தில் கத்தரி, வெண்டை, மிளகாய், கீரைவகைகள், கிழங்குவகைகள், வாழை, தென்னை, முருங்கை இவற்றோடு வெற்றிலை, மல்லிகை போன்றவையும் விளைவதுண்டு.

ஆனால் இவையனைத்தும் மண்ணோடு அதிகம் உறவாடும் வாய்ப்புப் பெற்ற கம்பம், தோட்டம் மற்றும் தரை குடியிருப்புப்பகுதி மக்களுக்கு கிடைத்த வரப்பிரசாதமே, அடுக்குமாடி ,அப்பார்ட்மென்ட் மற்றும் குடியிருப்பைச் சுற்றிலும் சாலையும் சிமெண்டுத்தரைகளும் சூழ அமைந்த வீடுகளில் வாழும் மக்களுக்கு இது போன்ற வசதிகள் வாய்ப்பது குறைவே.  

நாமும் சிலகாலம்வரை அப்படித்தான் வாழ நேர்ந்தது, இறையருளால் மிகவும் அழகான வீடு, அனைத்து வசதிகளுடனும் அமைந்திருந்தது இருப்பினும்  அங்கே நிலவசதி மட்டும் கிடையாது..! சுற்றிலும் சாலைகளும் சிமென்டுத்தரைகளுமாகவே அமைக்கப்பட்டிருந்தன. என்ன செய்வது ? கொஞ்சம் பூந்தொட்டிகளை வாங்கி வைத்து அதில் பூச்செடிகளை நட்டு வைத்து மகிழவேண்டியிருந்தது. அதிர்க்ஷ்டவசமாக‌ அண்மையில் குடியேறிருக்கும் வீடோ சுற்றிலும் நிறைய நிலவசதிகளோடு அமைந்தது, மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. பிறகென்ன நம்ம தோட்டக் கலைத் திறமையை காட்டவேண்டிய நேரம் வந்துவிட்டது...! :)

புற்களைக் கொல்லும் பூச்சிக்கொல்லி மருந்து எதையும் சேர்க்காமல், கிடைக்கும் ஓய்வு நேரங்களில் கொஞ்சம் கொஞ்சமாய் நிலங்களைக் கொத்தி நீர்பாய்ச்சி மண்ணை பண்படுத்தி பாத்திகள் அமைத்து நான்கு வரிசை மரவள்ளிச் செடிகள் ந‌ட்டாகிவிட்டது. அவை நட்ட இருமாதங்களில் கையகள இலைகளை செடிமுழுதும் நிறைத்துக்கொன்டு தற்போது ஓரடி உயரத்தில் எட்டிப்பார்த்து சிரித்துக்கொன்டிருக்கின்றன.

மிளகாய்ச்செடிகளில் முத்து முத்தாய் முகிழ்ந்து அங்கொன்றும் இங்கொன்றுமாய் சின்னச் சின்ன வெண்நட்சத்திரப் பூக்கள் .
ஓர் ஓரத்தில் முருங்கை மரம் துளிர்த்து வருகிறது, செங்கரும்பும், கறிவாழையும் மற்றொரு புறத்தில், மேலும் நிழலான பகுதியில் சிறு சிறு கன்றுகளாய் தக்காளி, கத்தரி, வெண்டைச்செடிகள் வளர்ந்து வருகின்றன. பாத்திகளின் இடைவெளிகளில் நிலக்கடலைச்செடிகள் நட்ட சில காலத்திலேயே அபரிமிதமான வளர்ச்சியுடன், இப்போது அதன் சின்னஞ்சிறு கிளைகளில் மஞ்சள் பூக்கள் மொட்டவிழ்ந்துகொன்டிருக்கின்றன.  

பொறுப்புடனும் பொறுமையுடன் நாம் செய்யும் இதுபோன்ற சிறு சிறு காரியங்களும் நமக்கு பெருமகிழ்வை அளிக்கவல்லவை. தோட்டம் அமைத்து அதில் வியர்வை சிந்தி உழைக்கும்போது அது நல்ல உடற்பயிற்சியாகவும் அமைந்துவிடுகிறது. நம் கையால் நட்ட செடிகொடிகளின் பலன்கள் நமக்கு முழு மகிழ்ச்சியையும் ஆத்மதிருப்தியைத் தரும்.வாய்ப்புக்கிடைக்கும் நண்பர்கள் நிச்சயம் முயற்சி செய்து பாருங்கள்.

நீல வானம் மேலே படர்ந்திருக்க, காற்றின் அசைவுகள் நம்மைச் சூழ்ந்திருக்க, ஓர் ஓரத்தில் குப்பைகூளங்களை(எரிந்தபின் அவை எருவாகும்) கூட்டி சின்னதாய் ஒரு மூட்டமிட்டு சின்னத்தீ அதில் நடனமிட, மண்ணில் கால்பதித்து, நம் கையால் நாம் நட்ட செடிகளுக்கு நீர்பாய்ச்சும்போது , ஆகாயம், நீர், நிலம், நெருப்பு, காற்று என  பஞ்சபூதங்களும் நம்முடன் உறவாட‌, இந்தப் பிரபஞ்சத்தின் ஓர் அங்கமாக நாம் மாறிவிடும் நிதர்சனத்தை நேரடியாக உண‌ரச்செய்யும் அந்தத‌ தருணங்கள் அனுபவத்தால் மட்டுமே அடையக்கூடிய வாழ்வின் உன்னதங்கள்...!