.

.
.

Tuesday, December 31, 2013

2014 புத்தாண்டில் பாலாவின் பரதேசியும் எமது மூதாதையர்களும்...!




ந‌ம் நாட்டில் குறிப்பிடத்தக்க‌ அரசியல் அதிர்வுகள் மற்றும் சமூகத்தை திரும்பிப்பார்க்க வைத்த, அரசியல் பேசவைத்த, சிலருக்கு ஏற்றமாகவும், பலருக்கு ஏமாற்றம் நிறைந்த ஆண்டாகவும் மலர்ந்து இன்று விடைபெறும் 2013 க்கு நாமும் இன்று விடை கொடுப்போம்.

ஒவ்வோர் ஆண்டின் இறுதியிலும்  அந்த ஆண்டு விடைபெறுவதையொட்டி ஆஸ்ட்ரோ தொலைக்காட்சி அவ்வாண்டின் சிறந்ததாக அடையாளம் காண‌ப்பட்ட , மக்கள் மனதைக் கவர்ந்த, வசூலை அள்ளிக்குவித்த 10  படங்களை வரிசையிட்டு திரையிடுவது ஆண்டுதோறும் வழக்கமே, இவ்வாண்டும் அவ்விதம் திரையிடப்பட்ட படங்களில் நான்காம் இடத்தை பிடித்து அண்மையில் ஒலியேறியது இயக்குனர் பாலாவின் "பரதேசி" திரைப்படம்.


இயக்குனர் பாலா "நான் கடவுள்" திரைப்படத்துக்காக, 2008ஆம் ஆண்டின் சிறந்த திரைப்பட இயக்கத்துக்கான இந்திய தேசிய விருதைப் பெற்றவர்.
இவர் இயக்குனர் பாலுமகேந்திராவின் மாணவருமாவார். தமிழ் சினிமாவில் இவரது ஆளுமை ஆழமாகவே பதிந்து வருவது அனைவரும் அறிந்த ஒன்றே. தான் இயக்கும் கதாபாத்திரங்களின் வழி ரசிகனையும் ஆட்டிப்படைக்கும் சித்துவேலை இவருக்கும் கைவந்த கலையாகவே இருக்கிறது. ஆனால் அது எல்லா சமயங்களிலும் சோக அலைகளிலேயே ரசிகனை மூழ்கடித்துவிடுவது வருத்தமே.

இவர் படங்களின் காட்சிகளைபோல, கதாபாத்திரங்கள் போல பாடல்களும் அருமையாகவே அமைந்திருக்கும், உதாரணத்திற்கு  இசைஞானி இளையராஜாவின் குரலில்/ இசையில் ஒலித்த‌ உயிரைத்தாலாட்டும் "எங்கே செல்லும் இந்த பாதை" எனும் சேது படப் பாடல். என்றும் மனதைவிட்டு அகலாத மிக மிக அருமையான பாடல். எப்பொழுதும் மனதைக் கவர்ந்த பாடல்களில் முதலிடம் வகிக்கும் பாடல் இது...!

சேது (1999), நந்தா (2001), பிதாமகன் (2003), நான் கடவுள் (2009), அவன் இவன் (2011) ஆக இறுதியாக தற்சமயம் எட்டிப்பார்த்திருப்பது பரதேசி (2012).

சேது படத்தில் முதலில் அழகான தோற்றத்துடன் காட்சியளிக்கும் கதாநாயகன் விக்ரம் பின்னர் தலையில் தாக்கப்பட்டு சித்தம் கலங்கி,  கருகி, கரைந்து, மொட்டைத்தலையும் சீரழிந்த தோற்றமுமாக காட்சியளிக்கும் போது நம்மையறியாமலேயே  நம் கண்களில் துளிர்க்கும் கண்ணீர்..!. "ந‌ந்தா" படத்தின் இறுதிக்காட்சியில் தற்போது சிங்கமாய் கர்ஜிக்கும் அன்றைய அமைதி நாயகன் சூர்யா தன்னை புற‌க்கணித்து ஒதுக்கிய தன் தாய்  அவர் கையால் ஊட்டும் விக்ஷம் கலந்த உணவை தெரிந்தே தன் நீலக்கண்கள் விரிய வாங்கி உண்பாரே, அப்போது ஏற்படும் மனவலி..! அது மட்டுமா "நான் கடவுள்" படத்தின் பெயர் திரையிடப்படும் பொழுது காட்டப்படும் காட்சிகளில் ஒரு காட்சி, முடமான ஒரு பிச்சைக்காரப் பெண்மணியை வில்லன் இடுப்பில் எட்டி உதைக்க அவர் சரிந்து விழுவார் பாருங்கள்...!, அந்த கணத்தில் அது சினிமா என்பதையும் மற‌ந்து அந்த வில்லனை எட்டிப்பிடித்து நாலு அறை விட கைகள் பரபரக்கும். தடுக்க முடியவில்லையே எனும் தாக்க‌ம் (இதற்குமேல் இந்தப் படத்தைப் பார்க்க இதயத்தில் வலுவில்லையென‌  எழுந்து ஓடிவந்துவிட்டது கூடுதல் தகவல்..! )


இப்படியான படங்களின் காரணகர்த்தாவான பாலா அண்மையில் தந்த படமே "பரதேசி". இப்படத்தைப்பற்றி நிறைய கூறலாம், ஆனால் அது என்னில் ஏற்படுத்திய வேறு பாதிப்புகளை பதிவு செய்யவே இந்தப் படைப்பு. ஒப்பந்தக்கூலிகளின் அவல வாழ்க்கையையும், அவர்களின் கண்ணீர் காவியங்களையும் பதிவு செய்த இப்படத்தை திரையில் காணும் போது மனக்கண்ணில் தெரிந்தவை யாவும், எமது மூதாதையர், ச்ஞ்சிக்கூலிகளாய் இந்நாட்டிற்கு கொன்டுவரப்பட்ட எமது பாட்டனின் பெற்றோர், அவர்களின் வாரிசுகளாய் இந்நாட்டிற்கு வளமை சேர்க்க இரத்தமும் வியர்வையும் சிந்திய எமது பாட்டன் பாட்டிமார், அவர்களைத்தாண்டி எமது பெற்றோர்களும் ஓரளவிற்கு தோட்ட வாழ்க்கைக்கு தங்கள் பங்கை வித்திட்ட பின்னர் தானே இரப்பர் தோட்டங்களுக்கான வர‌வேற்பு குறைய கைமாறிய தோட்டங்களில் இருந்து மேம்பாட்டாளர்களால் மனிதாபிமானமின்றி வெளியேற்றப்பட்டனர்.அவர்களே மனத்திரையில் முழுமையாய் இடம்பிடித்துக் கொண்டனர்.  

தோட்டங்களை விட்டு வெளியேற்றப்பட்ட பின்னர் அவர்களின் அவல வாழ்க்கையை யார் கருத்தில் கொன்டது ? இன்று ஊடகங்களிலும், காட்சிகளிலும் இந்தியரல்லாதோர் பால்மரக்கத்தியைப்பிடித்துக்கொன்டு "போஸ்" கொடுக்கின்றனர், ஏதோ பால்மரத்தையே தாங்கள்தான் கண்டுபிடித்தோம் என்பதைப்போல..! நாமும் பார்த்து ரசித்துக்கொன்டுதான் இருக்கிறோம்..! இந்நாட்டின் இரப்பர் சரித்திரத்தின் மூலமும் முடிவும் யாரென்பதை அறிந்து வைத்துக்கொன்டே .. !

அன்று அட்டைக்கு இரத்த தானம் செய்து பல சமயங்களில் பாம்பு, பூரான் மலேரியாக்கொசு என பலவற்றுக்கும் உயிர்த்தியாகம் செய்து மீண்ட இந்த சமுதாயத்தை இன்று மீண்டும் தோட்டப்புரத்திற்கு செல்லலாமே என செல்லமாய் சீண்டும் நமது சமுதாய தலைவர்கள் சொல்வதைக்கேட்டு அழுவதா சிரிப்பதா என்றே புரியவில்லை..! ஒரே தமாக்ஷா இருக்குது போங்க...!

இனிவரும் 2014 எல்லோருக்கும் ஏற்றம் தரும் ஆண்டாய் மலர்ந்திட "இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்"  

    

 இருள் சிநேகிதி ‍- இரண்டாம் பாகம்

 

 

 சரசுவின் திருமணம் இனிதே நடைபெற்றது. அவளை தனது குடும்பத்தினர்க்கு பிடிக்கவில்லை என்பதை உணர்ந்த ராஜன் அவளுக்கென அந்த ஊரிலேயே ஒரு அழகான பங்களா வீட்டை விலைக்குவாங்கி அதில் அவளை குடிவைத்தான்.

சரசுவை ராஜன் தன் கண்ணின் கருமணியைப்போல் போற்றிப் பாதுகாத்தான். வைரத்தை தங்கத்தில் இழைத்ததைப்போல் பொன்னாபரணங்களாலும், விலையுயர்ந்த ஆடைகளாலும் இயற்கையிலேயே அழகான சரசு மேலும் பன்மடங்கு அழகு சுடர்விட அழகுதேவதையாய் பிரகாசித்தாள்.  அழகான கொலு பொம்மைபோல் சரசு அந்த பங்களாவில் வீற்றிருக்க வீட்டு வேலைகள் யாவையும் வேலையாட்கள் செய்தனர்.

இத்தனையும் செய்த ராஜன் சரசுவை அவனின் பொக்கிக்ஷமாக பாதுகாத்தாலும் அவளை தனது உடமையாகத்தான் கருதினானேயொழிய அவளும் தன்னைப்போல் உயிரும் உணர்வும் கொன்ட சக ஜீவன் என்பதை கருத்தில்கொள்ளவில்லை. தங்கக்கூண்டில் அடைபட்ட கிளிபோல் சரசுவின் சுதந்திரம் தடைபட்டு விட்டது. ராஜன் மிகவும் சந்தேகப்பிராணியாகவும் இருந்தான். எந்த ஆணும் சரசுவை உற்று நோக்கினால் கூட‌  அவனால் சகித்துக்கொள்ள முடியாது சினத்தில் பொங்கி எழுவான், அதற்குக் காரணமானவன் அவன் கையில் சிக்கி  சின்னாபின்னமாவான். இதை உணர்ந்த ஊர் மக்கள் அவனிடத்தில் மிகவும் எச்சரிக்கையாகவே நடந்து கொன்டனர்.

பழையதை மறக்காத சரசு தனது மாமன் குடும்பத்தினர்க்கு நிறைய பொருளுதவிகள் செய்துவந்தாள். மாமன் மறுத்தாலும் தானே வலிய அவர் பிள்ளைகளின் கல்வி, திருமணம் என அவர்களின் தேவைகளுக்கு ஏகபோகமாக செலவு செய்து தானும் மகிழ்ந்து அவர்களையும் மகிழ்வித்தாள். அவளுக்கு மகிழ்ச்சி என்பதால் ராஜனும் இந்த விடயத்தில் மட்டும் எந்தத் தடையும் சொல்லவில்லை. மாமனின் பெண்க‌ள் யாவரும் ஒருவர்பின் ஒருவராக மண‌முடித்து அண்டை ஊர்களில் அவரவர் வாழ்வை ஆரம்பித்தனர். நாதன் ஒருவனைத்தவிர, அவன் தானாக  வளர்த்துக்கொன்ட தனது ஒருதலைக் காதலை மனதில் கொன்டு திருமணமே வேண்டாமென தனிமையில் வாழ்ந்து வந்தான். சிறிது காலத்தில் மாமன் வேலய்யனும் அவரைத் தொடர்ந்து அவர் மனைவியும் மறைவை எய்தினர். நாதன் தனித்து வாழ்ந்து வந்தான் .

அமைதியான நதியில் வெள்ளம் பெருக்கெடுத்ததைப்போல், நிம்மதியும் வளமும் நிறைந்திருந்த சரசுவின் வாழ்வில் பேரிடி வீழ்ந்த‌து. பக்கத்து ஊருக்கு ஏதோ காரியமாக சென்ற ராஜன் அங்கே நிகழ்ந்த கைகலப்பில் ஒருவரை வெட்டிக்கொன்று விட்டு காவல்துறையினரிடம் சிக்கினான். அவன் கொன்றதோ அந்த ஊரில் பிரபலமான ஒரு பணக்காரனின் பையன்.
பழிவாங்கும் வெறியில் தனது பணபலத்தின் துணையுடன் ராஜன் சிறையிலிருந்து மீளவே முடியாது பார்த்துக்கொன்டார் கொலையுண்ட வாலிபனின் தந்தை.ராஜனும் பணக்காரனே, இருந்தும் அவன் விதி அவனுக்கு பாதகமாய் வேலைசெய்ய அவனுக்கு மரணதண்டனை ஊர்ஜிதமானது.

சரசு பரிதவித்துப்போனாள். ராஜனின் நிலையறிந்து கொந்தளித்த அவன் குடும்பம் அவனைக் காப்பாற்றும் முயற்சியில் தீவிரமாக இறங்கியது, இருப்பினும் அவர்களின் முயற்சி தோல்வியில் முடியவே, அவர்களின் கோபம் அப்பாவியான சரசுவின் பக்கம் திரும்பியது.

ராஜனின் தாயாருக்கு ஏற்கனவே சரசு எட்டிக்காயாய் கசந்தவள். இப்படி ஒரு சம்பவம் நிகழ்ந்ததும், அதற்குக் காரணம் சரசுதான் என அப்பாவியான அவள்மேல் வீண்பழி சுமத்தி தகாத வார்த்தைகளல் அவளை வறுத்தெடுத்தார். தன் அவனுக்கென மனதில் வரித்திருந்த தனது சகோதரன் மகளை மணமுடிக்காது, இவளை மணம்புரிந்து குடும்பத்தைப்பிரிந்து தனிக்குடித்தனம் சென்றானே தன்மகன் எனும் வன்மம் விக்ஷமாய் தலைக்கேற சரசுவைத் தலைமுடியைப் பற்றி இழுத்து வீட்டை விட்டு துரத்தி அடித்தார் ராஜனின் தாயார்.
மாமன் வீட்டில் வேலைக்காரியாய் வாழ்வைத்துவங்கிய சரசு சிலகாலம் மகாராணியைப்போல் சகல சம்பத்தோடும் திருமதி ராஜனாய் வாழ்ந்துவிட்டு திடீரென ஒரு நாள் யாவும் களைந்த கனவைப்போல், யாவற்றையும் இழந்து மீண்டும் அபலை சரசுவாய் வீதியில் நின்றாள்.  அப்போது......!.

தொடரும்....

    






Saturday, December 28, 2013

இருள் சிநேகிதி...!




 அழகான குடியிருப்பு. நிறைய தமிழ் மக்கள் பழமை மாறாமல் அன்னியோன்யமாய் வாழும் பகுதி, அங்கே இயற்கையும் வஞ்சனையின்றி தமது செல்வங்களை வாரி இரைத்திருந்தது , அழகான பச்சைப் பசுமையான மலைகள் (அழகிய மலைகள் பாதுகாக்கப்பட வேண்டியவை எனும் உண்மை மறந்த மனித இனம் இப்போது முன்னேற்றம், நாகரீகம், வளர்ச்சி எனும் பெயரில் மலைகளை துகிலுரித்து, கரையானை விடவும் கேவல‌மாக அவற்றை அரித்தெடுத்து புவியை மாசுபடுத்தும் கோரம் நிகழாத காலம் அது...!) படகு பயணிக்கக் கூடிய பெரிய நதி, அதில் மீன்பிடித்து உணவாக்கிக் கொள்ளவும், வாழ்க்கைத்தேவைகளுக்கு நீரெடுத்துக் கொள்ளவும் வசதி, ஆங்காங்கே சுறுசுறுப்பான மாந்தர்களின் கைவண்ணத்தில் பூத்தும், காய்த்தும் குலுங்கும் குட்டி குட்டி காய்கறித்தோட்டங்கள்.

அங்கே வாழ்ந்த வேலய்யன் குடும்பத்தில் தாய் தந்தையர் அற்ற நிலையில் சம்பளம் இல்லாத வேலைக்காரியாய் அடைக்கலம் புகுந்திருந்தாள்  சரசு. அவளைப் பார்த்தாள் 20 வயதுப் பெண் என்று யாருக்குமே தோன்றாது! மிகவும்  இளமையான தோற்றம். அடர்த்தியான சுருள் கேசமும்,  சந்தண நிறமும் இலட்சண‌மான முகமும் வாய்த்தவள், கனிவான பார்வை, அமைதியான புன்னகை என ஊரிலுள்ள ஏனைய பெண்களில் தனித்துத் தெரிந்தாள். இருந்தும், அவள் சாயம் போன பழைய ஆடை உடுத்தி மிகவும் எளிமையான தோற்றத்துடன் வேலைக்காரியாக, அந்த வீட்டில் வலம் வந்து கொன்டிருந்தாள்.

வேலைய்யன் நல்ல மனிதர், ஆனால் அவர் மனைவியோ அவருக்கு நேரெதிர் குணம் படைத்த பெண்மணி.தமது தங்கையும் அவள் கணவனும் ஒரு கோர விபத்தில் பலியானதும் ஆதரவற்ற‌ நிலையில் வாடிய அவர்களின் ஒரே பெண்  சரசுவை மனித நேயத்துடன் கூட்டி வந்து தமது வீட்டில் வைத்து வள‌ர்த்தார் கனவண்டி ஓட்டுனரான வேலைய்யன். அவருக்கே ஐந்து குழந்தைகள் இருந்தும் அவர் சரசுவை ஏனைய உறவினர்கள் போல் கைவிட்டு விடவில்லை, மாறாக தன்னோடு அழைத்துவந்து தன் குடும்பத்தில் வாழ வழிசெய்தார். ஆனால் அவர் மனைவி  வீட்டு வேலைகள் அனைத்தையும் அவள் தலையில் சுமத்தினார். வேலைய்யன் கண்டித்தாலும் தமது சுபாவம் மாறாது சரசுவை காலையிலிருந்து இரவு வரை வேலை வாங்கி துன்புறுத்தினாள்.

வேலைய்யனின் ஐந்து குழந்தைகளில் மூத்தவன் நாதன், ஓரளவு படித்து முடித்து விட்டு, தமது தந்தைக்கு உதவியாக வேலைக்குச் சென்று கொன்டிருந்தான். தாயின் பிடியில் சிக்கித் தவிக்கும் சரசுவின்பால் இள‌வயது முதலே ஏற்பட்ட கரிசனம் நாள‌டைவில் காதலாக உருமாறி அவனுள் பிரவகித்துக் கொன்டிருந்தது, அவளைத் தமது தாயின் கோரப் பிடியிலிருந்து  காப்பாற்றி மணமுடித்து மகாராணிபோல் வாழவைக்க வேண்டுமென்று ஆயிரம் ஆசைகளை மனதில் சுமந்து தமது அன்பை சரசுவிடமும் , குடும்பத்திடமும் வெளியிட தக்க சமயத்தை எதிர்நோக்கி அவன் காத்திருந்த அந்த சமயத்தில் தான் அந்த அசம்பாவிதம் நிகழ்ந்தது.

 அந்த ஊரில் வசதி படைத்த சண்டியராக வலம் வந்து கொன்டிருந்த ராஜனின் பார்வையில்  சிக்கிவிட்டாள் சரசு, கண்ட மாத்திரத்தில் அவளிடம் மனதைப் பறிகொடுத்தான் ராஜன். மணந்தால் அவளைத்தான் மணக்க வேண்டுமென மனதில் நிச்சயித்து  தனது குடும்பத்தாரிடம் மணம் பேச தூது அனுப்பினான். அவள் வேலைக்காரப் பெண், வேண்டாம் என அவள் குடும்பத்தினர் வலியுறுத்தி மறுத்தும் பிடிவாதமாக அவள் தான் வேண்டும் என ஒற்றைக்காலில் நின்றான் ராஜன். சரசு எனும் அழகோவியம் அவனை முழுமையாய் ஆக்ரமித்து ஆட்டிப்படைத்தது...!

வேறு வழியில்லாமல் வேண்டாவெறுப்பாக திருமணம் பேசி மணமுடிக்க ஏற்பாடுகள் செய்தனர் ராஜனின் குடும்பத்தினர்.

சரசுவிற்கு தம்மை சுற்றி நடப்பது யாவும் அதிசயமாக இருந்தது, வெலைக்காரியாய் உழன்று கொன்டிருந்த அவளை திடீரென ஒரு பணக்காரன் மண‌முடிக்க முன்வந்தது அவளுக்கு ஆச்சரியமாக இருந்தது...! ராஜன், அஜானுபாகுவாய் பெரிய சிவந்த கண்களோடு பார்க்க

அச்சமூட்டும் உருவ அமைப்பை பெற்றவன். அவனிடம் அன்பு தோன்றியதோ இல்லையோ, அத்தையிடமிருந்து விடுதலை பெற‌வாவது இந்த திருமணம் அவசியம் என்பதை உணர்ந்து திருமணத்திற்கு சம்மதித்தாள் சரசு.

வேலைய்யனுக்கு ராஜனை அறவே பிடிக்காது, ஊரிலுள்ள வம்பு சண்டைகளுக்கெல்லாம் அவனே தலையாய் நிற்பவன் என்பதால். இருந்தாலும் தன்னிடம் பெண்கேட்டு வந்த அவனின் பணிவு, அவன் கண்களில் தெரிந்த மரியாதை அவர் மனதையும் கவரவே செய்த்து எவ்ளோ பெரிய பணக்காரன்! கொஞ்சமும் பந்தா இல்லாமல் எத்தனை பணிவு..! வேலைய்யன் திருமணத்திற்கு தமது முழு சம்மதத்தையும் தந்தார். திருமண செலவுகளுக்கு என ராஜன் கொடுத்த பத்தாயிரம் வெள்ளி வேலைய்யன் மனைவியை மனங்குளிர வைத்தது. ஒருவேளை உணவுக்கும் வாடியிருந்த சரசுவிற்கு ஊரே வியக்க திருமணம் நடந்தது.மொத்ததில் அனைவரும் மகிழ்ந்திருந்தனர், ஒரே ஒரு ஜீவனைத் தவிர..!


அது இளவயது முதலே அவள் பால் அன்பு கொன்டு அவளை மணமுடிக்கக் காத்திருந்த நாதன் !  என்ன செய்வது விதி வலியது அல்லவா ?, இன்னார்க்கு இன்னாரென்று எழுதி வைத்தானே தேவன் அன்று...! அதை யாராலும் மாற்ற‌ இயலாது...! இதயத்தில் யாரென்பதை மனிதன் முடிவு செய்தாலும், வாழ்க்கையில் யாரென்பதை காலம் தான் முடிவு செய்கிறது. அன்பு கொன்ட நாதன் பண்பும் நிறைய கொன்டவன், சரசுவிற்கு கிடைக்கப்போகும் நல்வாழ்க்கைக்கு அவன் குறுக்கே நிற்க விரும்பவில்லை  மன‌ம் வருந்தினாலும் வெளியே சிரித்து அவனும் மண வேலைகளில் பங்கெடுத்துக் கொன்டான். அதுதான் அவன் வாழ்வில் செய்த மிகப் பெரிய தவறு. அவனும் ஏன் யாருமே அப்போது எதிர்பார்க்கவில்லை ஒரு கோரம் மிக விரைவில் அர‌ங்கேற‌ப் போகிறது என்பதை....!