.

.
.

Friday, August 30, 2013


யதார்த்தவாதிகளும் சந்தர்ப்பவாதிகளும்...!(நிறைவுப்பகுதி)


சாந்தியை எப்படியேனும் சிறையிலிருந்து காப்பாற்றியாக வேண்டும்  எனும் தீவிர உந்துதலில் சாந்தியின் தந்தையும், சந்திரனும் கையிலும், சேமிப்பிலும் இருந்த பணம் யாவற்றையும் திரட்டி அந்நாட்டின் மிகச்சிறந்த வழக்கறிஞர்கள் என அறியப்பட்டவர்களை நாடி தங்கள் வழக்கை முன்வைத்தனர், ஆனால் வழக்கின் சாராம்சம் அறிந்தவுடன் பலரும் இந்த வழக்கு வெல்லாது என வெளிப்படையாகவே கூறிவிட்டனர். ஒரு பஞ்சாபி வழக்கறிஞர் மட்டும் முயற்சி செய்வோம் எனக் கூறி வழக்காடச் சம்மதித்தார்.

விசாரணை சாந்திக்கு சாதகமாக அமையவில்லை, அவளிடம் பையைக் கொடுத்த மூதாட்டியும் இறுதிவரை அகப்படவேயில்லை என்பதோடு, சுங்கச்சாவடி காமிராக்களில் பதிவாகியிருந்த காட்சிகளும் அவள் உதவிதான் செய்தாள் என்பதை நிரூபிக்க போதுமான சாட்சியாக அமையவில்லை, ஏதோ ஏற்கனவே அறிமுகமான இருவர் அளவளாவி ஒருவர் பையை மற்றவர் பெற்றுச் செல்வதை போலிருந்தன அதில் பதிவாகியிருந்த காட்சிகள்.
 
எனவே விசாரணையில் சாந்தி குற்றவாளி என்றே தீர்ப்பளிக்கப்பட்டு, அவளுக்கு உச்சபட்ச தண்டனையாக‌ மரணதண்டனை விதிக்கப்பட்டது !.

சாந்தியின் தந்தையும் சந்திரனும் தீர்ப்பைக் கேட்டு பெரிதும் வருந்திக் கலங்கினர், சாந்தி கண்களில் நீர்வழிய‌  தீர்ப்பை செவிமடுத்துக் கொண்டிருந்தாள்...! வேறென்ன செய்ய முடியும் அவளால் ? விதி என்று சொல்வார்களே, அது இதுதானோ ? அவள் மனம் நொந்து வேதனையில் வாடிக்கொன்டிருந்தது.

சாந்தியின் குடும்பத்தினர், தங்களின் முயற்சியை கைவிடவில்லை, விடாமுயற்சியுடன் வழக்கை உயர் நீதிமன்றத்திற்கு  கொன்டு சென்றனர். மிகவும் பிரயத்தனத்துடன்  மேலும் பணத்தைத் திரட்டி வேறொரு வக்கிலை வைத்து வழக்காட முனைந்தனர்.


father-daughter1சாந்தியின் தந்தை மிகவும் வேதனையுடன் அந்த வழக்கறிஞரின் கைகளைப் பற்றிக்கொன்டு தன் மகளை, அவளுக்கு விதிக்கப்பட்டிருக்கும் மரணதண்டனையிலிருந்து மீட்டுத் தரும்படி கண்ணீர் விட்டு மன்றாடினார். குறைந்த பட்சம் அவள் மரண தண்டனையிலிருந்து மீண்டு ஆயுள் தண்டனைக்கு மாற்றப்பட்டாலும், தன் மகள் சிறையிலேனும் உயிர் வாழ்கிறாளே எனும் சிறு மகிழ்ச்சியாவது மனதில் தங்குமே என அந்தத் தந்தை மனம் எதிர்பார்த்து ஏங்கியது.


அவள் தாயோ மணக்கோலத்தில் தான் கண்டு மகிழக் காத்திருந்த மகள் வாழ்வையே இழந்து விட்டாளே எனும் சோகத்தில் நிரந்தர நோயாளியாகி படுக்கையே கதி என்றாகிப் போனார். சாந்தியை இழந்துவிட்டால் அவர் உயிர் நிலைப்பதும் அரிதுதான் என்பதை அந்தக் குடும்பமே உண‌ர்ந்து இரட்டை சோகத்தில் மருகிக் கொண்டிருந்தது.

வழக்கு மறுபடியும் விசாரணைக்கு வந்தது, மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் திருப்புமுனையான தீர்ப்பு அமையும், குறைந்த பட்சம்  சாந்தியின் உயிராவது மிஞ்சும் என எதிர்பார்த்துக் காத்திருந்த சாந்தி, சந்திரன், சாந்தியின் ஒட்டுமொத்தக் குடும்பம், குணசாலியான அவள் மீது அன்பு கொண்ட உற்றார், சுற்றம், நட்புகள் என வேண்டியவர்கள் அனைவருக்கும் பேரிடியாக அமைந்தது தீர்ப்பு...! அதில் அவள் குற்றம் மறு உறுதி செய்யப்பட்டு, அவள் மரண‌தண்டனை ஏற்கனவே குறிப்பிட்டபடி நிறைவேற்றப்படவேண்டும் என மறுதீர்ப்பு வழங்கியது உயர்நீதிமன்றம்,

கைப்பற்றப்பட்ட கொடிய போதைப்பொருளின் அளவு, அதன் மூலம் விளையக் கூடிய பேரிழப்புகள், பாதிப்புகள் ஆகியவற்றை கருத்தில் கொண்டு தீர்ப்பு வழங்கப்பட்டது, அவள் தான் நம்பி உதவி செய்தவரால் நம்பிக்கை மோசடிக்கு ஆளாகியிருக்கிறாள் எனும் கூற்று அங்கே வெற்றி பெறவில்லை.    

கருணை மனுக்கள் நிராகரிக்கப்பட்ட நிலையில், சாந்தியைக் காப்பாற்ற‌ மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் அனைத்தும் தோல்வியைத் தழுவியதால்  அவளின் மரண தண்டனை உறுதியாகிப்போனது, அவளைக் காப்பாற்றும் முயற்சியில் சாந்தியின் தந்தைக்கும், சந்திரனுக்கும் மிஞ்சியதெல்லாம் அலைச்சலும், மன உலைச்சலும் மட்டுமே...!

சாந்தி தப்பிக்க வழியின்றி மரணத்தை எதிர்கொள்ளத் தயாரானாள், தந்தையிடம் தான் அன்புகொண்ட, தன் மீது அன்பு பூண்ட அனைவருக்கும் தன் அன்பைத் தெரிவித்து தான் விடைபெறுவதை அறிவிக்கச் சொன்னாள்...!

அந்தச் சம்பவம் தந்த அதிர்வில் 20 வயதுப் பெண்ணான சாந்தி 50 வயது பெண்மணியைப்போல் தோற்றத்தில் தளர்ந்து 80 வயது மூதாட்டியைப்போல் வாழ்க்கை முடிந்துவிட்ட முதிர்ச்சியோடு பேசுவதைக் கேட்க அவள் தந்தையின் மனம் அனலில் இட்ட புழுவாய் துடித்தது ..! 

மறைந்த தன் தாயே மறுபடியும் மகளாய் தன் மடியில் தவழ்கிறாள் என  அன்போடு அள்ளி அணைத்து, உச்சி முகர்ந்து, பாராட்டி சீராட்டி, படிக்க வைத்து, நற்பண்புகளை ஊட்டி வளர்த்து, மணமுடித்துத் தரப்போகும் தருணத்தில் காலனுக்கு தன் மகளை வாரிக் கொடுக்க எந்தத் தந்தைக்குத்தான் மனம் வரும் ? சிறையில் சிக்கிக்கொன்ட தன் செல்லக்கிளியின் நிலையை நினைத்து, வாய்விட்டு அழுதார் சாந்தியின் தந்தை, விதியின் சதியை நொந்து...!  

அவள் மனங்கவர்ந்த சந்திரன் வேறு யாரையேனும் திருமண‌ம் புரிந்து கொள்ள வேண்டும் என சாந்தி அவனிடம் விண்ணப்பித்தாள். சந்திரனுக்கோ சாந்திக்கு மரண தண்டனை எனும் தீர்ப்பைக்கேட்ட மறுநொடியே தன் உயிரின் பாதி தன்னிலிருந்து விடைபெற்றுச் சென்று விட்டதைப்போலிருந்தது. பெயருக்கு வாழ்வதாக பெயர்பண்ணிக்கொன்டு நடைப்பிணமாக நடமாடிக்கொன்டிருந்தான். தன்னை வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொள்ளும்படி சாந்தியே கூறுவதைக்கேட்டு அவனால் கலங்கி நிற்க‌ மட்டுமே முடிந்தது, காலம் அலங்கோலமாக்கிச் சென்ற தங்களின் அன்பு வாழ்க்கையை எண்ணி...!

அவளுக்கு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டது...!

சாந்தியைப் போன்ற யதார்த்தவாதிகளின் வாழ்க்கை அவளை ஏமாற்றிய மூதாட்டியைப் போன்ற சந்தர்ப்பவாதிகளால் சூரையாடப்படுவது, உலகில் ஒன்றும் புதிதல்லவே...!

நம்பிக்கையுடன் அவள் செய்த சிறு உதவி, இடம், பொருள், ஏவல் மறந்து அவள் செயல்பட்ட ஒரே ஒரு காரணத்தினால் அவள் வாழ்வையே பறித்துசென்றது.

உதவி செய்வது தவறல்ல! ஒவ்வொரு மனிதரும் ஏதாவது ஒருவழியில் பிறர் உதவியை நாடுவதும், பிற‌ர்க்கு உதவி செய்ய நேருவதும் வாழ்வில் தவிர்க்க முடியாதவை..! ஆனால் பல சமயங்களில் நம்பிக்கையுடன் செய்த உதவிகளே நம்பிக்கை மோசடிகளாய் மாறி, தீட்டிய மரத்திலேயே கூர் பார்ப்பதைப்போல, உதவியவரையே பதம் பார்த்து விடுவதால்தானோ என்னவோ இப்பொழுதெல்லாம் யாரும் யாருக்கும் உதவ முன்வருவதில்லை, அதன் பாதிப்பும் யாருக்கும் தெரிவதில்லை, தான் பிறர் உதவியை நாடி நிற்க வேண்டிய நிலை தனக்கு ஏற்படும் வரை...!

எனினும் தற்காலத்தில் உதவுவதிலும் கூட கூடுதல் கவன‌ம் அவசியமெனப்படுபவதால் தன்னையும் பாதுகாத்துக்கொன்டு, தன்னால் இயன்ற உதவிகளை முடிந்தளவு பிற‌ர்க்குச் செய்து ஆத்ம திருப்தியோடு வாழ்வதே இக்காலத்தில் சாலச் சிறந்த செயலாக அமையக்கூடும்.!

சாந்தியின் ஆன்மா சாந்தியடையட்டும்...!

Saturday, August 24, 2013

 யதார்த்தவாதிகளும் சந்தர்ப்பவாதிகளும்...!(2)

 

அம்மா, அம்மா என தன்னை அழைத்தபடி   ஒரு மூதாட்டி தனக்குப் பின்னால்

நின்றிருப்பதைக் கண்டதும், ஆச்சரியத்துடன் சாந்தி அவரை ஏறிட்டு நோக்கினாள்  , சுமார் 70 அல்லது 80 வயது மதிக்கத்தக்க அம்மூதாட்டி பச்சையும் சாம்பலும் கலந்த பட்டுப்படவையில் பாந்தமாக, படிய வாரி சிறியதாகக் கொண்டையிட்ட கேசம் துவங்கி, நெற்றியிலே குங்குமப் பொட்டு, காதிலே எட்டுக்கல் தங்கத்தோடு, கழுத்திலே சங்கிலி என நல்ல வசதியான தோற்ற‌த்தோடு மங்களகரமாக காட்சியளித்தார்.

"ஏன் பாட்டி, என்னையா கூப்பிட்டீங்க? என வியப்புடன் கேட்டாள் சாந்தி, அதற்கு அந்தப் பாட்டி லேசாகச் சிரித்தபடி," ஆமாம்மா பாட்டி இதோ இந்த பேக்க தூக்க முடியாம தவிச்சு கிட்டு நிக்கிறேன்மா, யாரையாச்சும் உதவி கேட்கலாம்னு பார்த்திருந்தேன், உன்னைப் பார்த்தேன், பாட்டிக்கு கொஞ்சம் உதவி செய்யுறியாம்மா ? உனக்கு புண்ணியமாப் போகும், பாட்டி அத்தனை நைச்சியமாக தன்னை பாட்டி, பாட்டி என விளித்துக்கொன்டு சாந்தியை மூளைச்சலவை செய்தாள்.

இயற்கையிலேயே மிகவும் பரந்த மனப்பான்மை கொன்ட சாந்திக்கு அப்போழுது தூக்கக் கலக்கம் வேறு! மனம் சமயோசிதமாக எதையுமே யோசிக்கவில்லை, வயசான பாட்டிதானே, என்ன வந்துவிடப் போகுது என யதார்த்தமாக நினைத்துக்கொன்டு " சரி பாட்டி , வாங்க நான் உங்களுக்கு உதவி செய்யுறேன், எனக் கூறி பாட்டியின் காலடியில் வைக்கப்பட்டிருந்த அந்த பெரிய கருமை நிற பையை கையில் எடுத்துக் கொன்டாள்.

உண்மையிலேயே அந்தப் பை மிகவும் கனமாக இருந்தது, "என்னப் பாட்டி பேக்கு இவ்ளோ கனமா இருக்கு ? பாட்டியை நோக்கி கேள்விக்கணை தொடுத்தாள் சாந்தி, சற்று அதிர்ச்சியுற்றாலும் சாமர்த்தியமாய் மறைத்துக்கொன்டு, இல்லேம்மா எல்லாம் வெறும் புடவைங்கதாம்மா, வேற ஒண்னும் இல்லை என‌ போலியாய்ச் சிரித்தாள் பாட்டி, அவளின் பொல்லாத நோக்கம் புரியாத சாந்தி, நரியின் வஞ்சகத்திற்கு இரையான ஆட்டைப்போல தலையாட்டி அவள் கூற்றை ஏற்றுக் கொன்டு அந்தப் பையை தூக்கிக் கொன்டு நடந்தாள்.

அந்தக் கிழவி சாந்தியை  முன்னே நடக்கச் செய்து விட்டு , சற்றுப் பின் தங்கி மெல்லப் பின்னால் தலை குனிந்தவாரே தனது இடையில் சொறுகியிருந்த சுருக்குப் பையை கையில் வைத்து எதையோ துளாவுவதாய் பாவனை செய்தபடி மெல்ல நடந்தாள். சாந்திக்கு மீண்டும் தொழிற்சாலை பேருந்தை அடைய வேண்டிய அவசர நிலை வேறு, எனவே பாட்டியின் பையுடன் முடிந்தளவு வேகமாக நடந்தாள்.

சற்று தூரம் நடந்த பின், பின்னாள் திரும்பி வாங்க பாட்டி என அந்த மூதாட்டியை தன் உடன் வருமாறு அழைத்தாள், அவளோ தந்திரமாக, வேகமா நடக்க முடியலேம்மா, முட்டி வலி, நீ வயசுப் பிள்ள வேகமா நடக்கலாம் என்னால முடியுமா? , தோ, உன் கூடவே வரேன், நீ போம்மா என்றாள், சரி பாட்டி என முன்னால் நடந்தாள் சாந்தி.

கடப்பிதழ் சோதனை கடந்து வெளியேறும் நுழைவாயிலை நெருங்கிக் கொன்டிருந்த போது, ஒரு அதிகாரி விரைந்து வந்து அவளைத் தடுத்து நிறுத்தினார். "உங்கள் பையை பரிசோதிக்க வேண்டும்" எனக் கூறினார்.

அவள் கையிலிருந்த அந்த பிரயாணப் பையை பரிசோதனை மேசையின் மேல் வைக்கும்படி பணித்தார். சாந்தி உடனே "இது என் பை இல்லை, இந்த பாட்டியுடையது" எனக் கூறியவாறே பாட்டியைக் காண்பிக்க பின்னால் திரும்பினாள், பின்னால் கண்ணுக் கெட்டிய வரை பாட்டியின் நிழலைக்கூட காண முடியவில்லை, பரிசோதனை என வந்ததும் அம்மூதாட்டி அவ்விடத்தினின்று மாயமாகிப் போய் எங்கோ ஒளிந்து விட்டாள்.

அவ்விடம் முழுதையும் கண்களால் அலசி ஆராய்ந்தாள் சாந்தி, எங்குமே அந்தப் பாட்டி தென்படாதது கண்டு துனுக்குற்றாள், அதிர்ச்சியுடன் திரும்பியவளை ஒரு மாதிரியாக மேலும் கீழும் பார்த்தபடி, அவள் தூக்கி வந்த பையை பரிசோதிக்க ஆரம்பித்தார் அந்த அதிகாரி, அவர் அனுபவத்தில் எவ்வளவு பேரை பார்த்திருப்பார் !? 

கவனமாக ஆராய்ந்ததில், உள்ளே துணிமணிகளில் சுற்ற‌ப்பட்டு மிகவும் லாவகமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த தமது கையை விட அகலமான அந்த‌ வெண்ணிற பொட்டலங்களை , வெளியே எடுத்து வைத்தார். சாந்தி அதிர்ச்சியில் சிலையாகிப் போய் நின்றாள்.விடயம் தெரிந்து மேலும் அதிகாரிகள் அங்கே கூடினர். அனைவரும் சாந்தியை பார்த்தபடி தங்களுக்குள் பேசிக் கொன்டனர். 

அங்கே நடமாடிக் கொன்டிருந்த மக்களும் அவ்விடத்தில் ஏதோ விபரீதம் என்பதையுண‌ர்ந்து நின்று கவனிக்க ஆரம்பித்தனர், ஓர் அதிகாரி அந்தப் பொட்டலத்திலிருந்த பொருளை ஆராய்ந்து விட்டு அவளை நோக்கி "நீ போதைப்பொருளை கள்ளக்கடத்தல் செய்கிறாயா " என ஆங்கிலத்தில் அவளை கேட்க, ஏற்கனவே அங்கு நடந்தவற்றை ஊகித்து நிலைகுலைந்து போயிருந்த‌ சாந்தியை, அதிகாரியின் கேள்வி மேலும் பயமுறுத்த‌ அவள்  கண்கள் கலங்க, இல்லை! இல்லை! என அலறிப் புலம்பியவாறே கீழே சரிந்தாள். கண்கள் இருள, கொடிய ராட்சத‌ தீ நாக்குகள் நீண்டு சுழலும் அதள பாதாள‌த்துள் தாம் அள்ளி வீசி எறியப்படுவதாய் மனசு உணர‌ நடுநடுங்கிப் பயத்தில் மயங்கி விழுந்தாள்.

அவள் மயக்கம் தெளிவித்து, கொடிய போதைப்பொருளை பெருமளவு கள்ளக்கடத்தல் செய்த குற்றத்திற்காக‌, கைவிலங்கிட்டு, அவளை  தடுப்புக் காவலில் வைத்தனர்.

சாந்தியின் குடும்பத்தினர்க்கு செய்தி போனது, அதிர்ச்சியில் மொத்தக் குடும்பமும் அரண்டு போனது. அய்யோ!  என அலறிப் புலம்பினார் சாந்தியின் தாய். நடந்த சம்பவத்தை கேள்விப்பட்டதும் சுக்கு நூறாய் நொறுங்கிப் போனது சந்திரனின் இதயம்....!

உடனே சாந்தியின் பெற்றோர்  சந்திரனை அழைத்துக்கொண்டு சாந்தியை காண‌ச் சென்ற‌னர். தடுப்புக் காவலில் சோகமே உருவான‌ சாந்தியைக் கண்டு அவள் பெற்றோர் வாய்விட்டுக் கதறினர். சந்திரன் அவளை ஏறிட்டு நோக்கியபடி மெளனமாய் நின்றான், புயலடிக்கும் அலைகட‌லாய் அவன் மனம் ஆர்ப்பரித்துக் கொன்டிருந்தது. அவன் கண்களில் மல்கிய கண்ணீர், கன்னங்களில் வழிந்து மேலாடையை நனைத்தது.

சாந்தியால் பேசக்கூட முடியவில்லை, நடந்த சம்பவங்களால் மிகவும் அதிர்ச்சியுற்று பிரமை பிடித்து நின்றாள். தடுப்புக்காவலை தாண்டி அவள் ஆன்மா சந்திரனைப்பற்றிக்கொன்டு அந்தச் சிறைபிலிருந்து விடுபட துடியாய்த் துடித்தது. வெளி நாட்டு சிறையில் அடைபட்டுக் கிடக்கும் தான் விடுதலை அடைவோமா ?, மீண்டும் சந்திரனின் கைகளை பற்றிக் கொன்டு சுதந்திரக் காற்றை சுவாசிப்போமா ? என சாந்தியின் மனம் நொடிக்கு நூறு தடவை ஏங்கித் தவித்து, ஓலமிட்டுக் கதறியது.    

சாந்தி கைதான சம்பவம் இரு நாட்டு நாளிகைகளிலும் செய்தியாக வெளிவர ஊருக்கே அந்த சம்பவம் தெரிந்து போனது. சாந்தியின் பெற்றோர் காதுபடவே, அவளை தவறாக விமர்சித்து அவர்களின் வெந்த புண்ணில் வேலை பாய்ச்சினர் மனிதப் போர்வை போர்த்திய சில மனிதாபிமானமற்ற‌ அக்கம் பக்கத்து குடியிருப்பு வாசிகள்.

வழக்கு விசாரணைக்கு வந்தது, அவள் நிலை கேள்விக்குறியானது.

எதிர்வரும் பதிவில் இத்தொடர் நிறைவு பெறும்....

தொடரும்...

 

          

Wednesday, August 21, 2013

யதார்த்தவாதிகளும், சந்தர்ப்பவாதிகளும்...!



அழகான அண்டை நாடு...! சுபிட்சத்திற்கும், சுத்தத்திற்கும் பெயர் பெற்ற நாடு.  தொழில் வாய்ப்புகள், கல்வி , மருத்துவம் என சொந்த நாட்டு மக்களுக்கு மட்டுமன்றி அருகாமையிலுள்ள ஏனைய நாட்டு மக்களுக்கும் பயனளிக்கும் நாடு...! நாட்டின் சட்ட திட்டங்களையும், அதன் அமுலாக்கங்களையும் மிகவும் நேர்த்தியாக அனுசரித்துவரும் நாடு .


சாந்தி, எஸ்.பி.எம் படிப்பை அவள் முடித்து சில வருடங்கள் கடந்திருந்தன‌. சுமாரான தோற்றமும், நடுத்தர உயரமும் கொன்டவள், நல்ல சிநேகபாவம், யாரையும் எதிர்நோக்குங்கால் மதித்துப் புன்னகைக்கும் கணிவானவள்.
அவளுக்கு பக்கத்து நாட்டில் வேலை கிடைத்து மூன்று வருடங்களாக அங்கே பணியாற்றி வந்தாள். அங்கே உயர்தரமான கணினி தொழிற்சாலை ஒன்றில் அவளுக்கு தொழிற்சாலை ஊழியராக வேலை கிடைத்திருந்தது.

ஒவ்வொரு முறையும் வேலை முடித்து தொழிற்சாலை பேருந்தில் பயணித்து இரு நாட்டு சுங்கச் சாவடிகளையும் கடந்து வீடு திரும்புவாள். நாணய மதிப்பில் அந்நாடு உயர்ந்திருப்பதால், இரு மடங்கு வருமானம் கிடைப்பதை உத்தேசித்து அவளைப்போலவே ஆயிரக்கணக்கானோர் நாடு கடந்து பயணித்து, பணியாற்றி வீடு திரும்புவர் அங்கே..!  


திருமண வயதை நெருங்கிய அவளுக்கு, அவள் வீட்டில் மணமுடிக்க முடிவெடுத்திருந்தனர். மண‌மகன் அவள் மனங்கவர்ந்தவன். ஒரே குடியிருப்பைச் சேர்ந்தவர்கள். சிறுவயது முதலே ஒன்றாய் வளர்ந்து, ஒன்றாய் படித்து, ஒன்றாகவே இதயத்தையும் இடம் மாற்றிக் கொன்டவர்கள் அவர்கள் இருவரும், இரு குடும்பமும் நல்ல நெருக்கம், எனவே மணமுடிக்க எந்தத் தடையும் இல்லாது, இனிதே கலந்து பேசி கூடிய விரைவில் அவர்களுக்கு மணமுடிக்க ஏற்பாடுகள் செய்தனர் இரு வீட்டாரும். மணமகன் சந்திரன்,  களையான முகமும், உயரமான தோற்றமும் கொன்டிருந்தான். சொந்த நாட்டில் ஒரு தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்தான்.

திருமணமாக இன்னும் இரண்டு மாதங்களே எஞ்சியிருந்தன, சாந்தியை வேலையை விட்டு விலகும்படி சந்திரனும், அவள் குடும்பத்தினரும் வலியுறுத்தினர். சந்திரன் , திருமண‌த்திற்குப்பின் சாந்தி வேலைக்கு செல்லக்கூடாது என அன்புக் கட்டளையிட்டான். தன் பணியிடத்தில் வேலை நிறுத்த கடிதம் கொடுத்தாள் சாந்தி. நல்ல வேலை, நிறைவான வருமானம் இதைப் போய் விடுவதா என சாந்திக்கு வருத்தமாக இருந்தது, இருப்பினும் அனைவரும் விரும்பியபடி முடிவெடுத்தாள், மனதுள்ளோ, இது சரிப்பட்டு வராது, சில காலம் கழித்து சந்திரன் மனதை மாற்றி வேறு இடத்தில் வேலை தேடிக் கொள்ளலாம் என தனக்குத்தானே சமாதானம் செய்து கொன்டாள்.

காலம் கரைந்து கொன்டிருந்தது, திருமண நாள் இன்னும் இரு வாரங்களில், அவள் வேலையை விட்டு, திருமதி. சந்திரன் எனும் அடைமொழியோடு இல்லத்தரசியாக பதவி உய‌ர்வு பெரும் நாள் நெருங்கிக் கொன்டிருந்தது.

அன்று அவளுக்கு இரவு நேரப் பணி, மாலை ஏழு மணிக்கு வேலை துவங்கி மறு நாள் காலை ஏழு மணிக்கு வேலை முடிவுறும். இரவில் கண்விழித்துப் பணிபுரிந்த அயர்வோடு, மறுநாள் காலை வேலை முடிந்து பேருந்து இருக்கையில் உறங்கியவாறே வீடு திரும்பிக் கொண்டிருந்தாள், "செக்போயின்ட் வந்துட்டது, எல்லோரும் போயி செக் பண்ணிட்டு வந்திருஙக" என பேருந்து ஓட்டுனர்   குரல் கொடுக்க அதுவரை கோழிதூக்கம் போட்டுக் கொன்டு வந்த சாந்தியும் ஏனைய தொழிலாளர்கள் அனைவரும் மெல்ல மெல்ல பேருந்தைப் பிரிந்து சுங்கச்சாவடியின் பரிசோதனை கடக்க உட்சென்றனர். பேருந்து ஓட்டுனர் அவ்வழியிலேயே பரிசோதனை கடந்து மறுமுனையில் தொழிலாளர்களுக்காக‌க் காத்திருந்தார்.

சுங்கச் சாவடி, பளிச்சிடும் மைதானம் போல் பரந்து விரிந்திருந்தது, ஆங்காங்கே ஒளிர்விடும் மின்சார விள‌க்குகள், இரு கைகள் இணைத்து அணைத்தாலும் கைகளுக்குள் வசப்படாத‌ பெரிய பெரிய உலோகத் தூண்கள், கண்ணாடியாய் பிம்பங்களை பிரதிபலிக்கும் சலவைக்கல் தரை. ஆங்காங்கே பணியிலிருக்கும் அதிகாரிகள், கூடவே இங்கும் அங்குமாய் பயணிகள் பலர்
பல நிறங்களில், பல மொழிகளின் துணையோடு அங்கே...

பிரமிப்பூட்டும் அந்தக் காட்சிகளை ரசிக்கும் நிலையில் இல்லாத சாந்தி களைப்போடு தனது சிறிய கைப்பையை தோளில் மாட்டிக்கொன்டு கடப்பிதழ் பரிசோதனைக்காக  விரைந்து 

கொன்டிருந்தாள், அப்போது அவள் பின்னாளிருந்து யாரோ அழைக்க நின்று

 பின்னோக்கி திரும்பினாள், அங்கே....













தொடரும்.... 

Friday, August 2, 2013

வேற்றுமொழிப்பள்ளிகளும், இந்தியப் பெற்றோர்களின் மனோநிலையும்...!




அண்மையில் நாட்டில் நடைபெற்ற‌ ஒரு சம்பவம் இந்நாட்டின் ஒட்டுமொத்த இந்தியர்களையும் புண்படுத்தியதோடு ஆத்திரத்திலும் ஆழ்த்தியுள்ளது. எஸ்கே  ஸ்ரீபிரிஸ்தானா  எனும்  தேசிய மொழிப்பள்ளியில்  இந்திய மற்றும் சீன மாணவர்களை கழிவறை அருகே (உடை மாற்றும் இடமாம்!?) உணவருந்தச் செய்த கொடுமை சம்பந்தப்பட்ட ப‌ள்ளி ஆசிரியர்களால் நிகழ்த்தப்பட்டுள்ளது! இக்குற்றச்செயலை புரிந்தவர்களுக்கு சரியான தண்டனை கோரி போராட்டத்தில் பொதுமக்கள்! வழக்கம்போல் பேசாமடந்தைகளாய் அரசியல்வாதிகள்!.

 அது ஒரு தேசிய மொழி ஆரம்பப்பள்ளி, அதில் பயிலும் மாணவர்கள் 7 லிருந்து 12 வய‌துக்குட்பட்ட சிறுவர்கள். சொந்தமாக முடிவெடுக்கும் வாய்ப்பற்றவர்கள் சிறுவர்கள், அவர்கள் தங்கள் பெற்றோர்கள், ஆசிரியர்கள் சொற்படி நடக்கவேண்டியவர்கள். அவர்களை சரியான முறையில் பெற்றோரும், ஆசிரியர்களும் வழிந‌டத்துவதை உறுதி செய்ய வேண்டியது பெற்றோர்கள், ஆசிரியர்கள் மட்டுமல்ல! . நாம் அனைவரும் அடங்கிய இந்த சமுதாயம், நம்மை ஆளும் இந்நாட்டின் அரசாங்கம் ஆகிய அனைவருக்கும் அவர்களை பாதுகாக்க வேண்டிய கடப்பாடு உள்ளது. ஏனெனில் இன்றைய சிறுவர்களே நாளைய இந்நாட்டின் எதிர்காலத்தை நிர்ண‌யிப்பவர்கள். வருங்காலத்தில் அவர்கள் நல்ல முறையில் முன்னேறி இந்நாட்டை வளமான பாதையில் வழி நடத்தவும் முடியும், குற்றவாளிகளாகவும், வன்முறையாளர்களாகவும் மாறி இதே நாட்டை அழிவுப்பாதைக்கு இட்டுச் செல்லவும் முடியும்...! இந்தச் சிறுவர்களுக்கு தக்க நீதி வழங்கப்பட வேண்டும் என்பதே எல்லோருடைய எதிர்பார்ப்பாகும். அதற்கு அவர்களுக்கு அநீதி இழைத்தவர்கள் முறைப்படி தண்டிக்கப்பட வேண்டும்.

இச்சம்பவம் பற்றி யோசிக்கையில் சுமார் பத்து பதினைந்து ஆண்டுகளுக்கு முன் வேற்றுமொழிப் பள்ளி ஒன்றில் பயின்ற ஓர் இந்திய மாணவனுக்கு நிகழ்ந்த கொடுமை நினைவுக்கு வந்தது. வெளியில் வராத செய்தி இது.

அது ஒரு இந்தியர்கள் நிறைந்த குடியிருப்புப் பகுதி அங்கே பல குடும்பங்களோடு காவேரி அக்காவும் ஒரு வாடகை வீட்டில் வாழ்ந்து வந்தார். அவரின் கணவர் ஒரு ராணுவ அதிகாரி, சரவாக்கில் பணியாற்றிக்கொன்டிருந்தார். வருடத்தில் ஓரிரு முறை மட்டுமே வீட்டுக்கு வந்து செல்வார். அவர்களுக்கு இரு ஆண் குழந்தைகள், மூத்தவனுக்கு 8 வயது, இளையவனுக்கு 7 வயது.

காவேரி அக்கா, குள்ளமாக, சற்று தடித்த தோற்றத்துடன் முன்பற்கள் இரண்டும் சற்று தூக்கியவாறு இருப்பார், பழகுவதற்கு இனியவர். அவரின் மூத்த மகன் நல்ல கொழு கொழுவென்று தாட்டிகமாக வீரனைப்போல் இருப்பான், ஆனால் இளையவனோ மிகவும் சிறிய உருவத்துடனும், பரிதாப முகத்துடனும் காட்சியளிப்பான். அவனுக்கு சரியாக பேசக்கூட வராது. திக்கி திக்கித்தான் ஓரிரு வார்த்தைகள் பேசுவான், பயந்த‌ கண்கள், இதழ் ஓரங்களில் எப்போழுதும் எச்சில் வழிந்து கொன்டிருக்கும்.. அந்த இரு குழந்தைகளையும் காவேரி அக்கா அவர் கணவர் விருப்பப்படி சற்று தொலைவிலிருந்த சீனப்பள்ளி ஒன்றில் சேர்த்து விட்டிருந்தார். மூத்தவன் அப்போது இரண்டாம் ஆண்டில் பயில, இளையவன் முதலாம் வகுப்பில்.

ஒரு நாள் அப்பள்ளியில் பயிலும் சில துக்ஷ்ட சீன‌மாணவர்கள் மூத்தவனுக்குத் தெரியாமல் அவன் தம்பியை அப்பள்ளியின் ஒதுக்குப்புற‌மான இடத்துக்கு அழைத்துச் சென்று அவனிடமிருந்த பண‌த்தைப் பிடுங்கிக்கொண்டு அவனை சரமாரியாக தாக்கியிருக்கின்றனர்.  மறைவான‌ பகுதியாதலால் அச்சிறுவனின் அவலக்குரல் யாருக்கும் எட்டவில்லை, அவனை சரமாரியாக  தாக்கிய பின் அந்த தீயவர்கள் அந்த அப்பாவி சிறுவனை அருகிலிருந்த பள்ளியின் சாக்கடை கால்வாயில் தள்ளிவிட்டு விட்டு ஒன்றும் நடவாதது போல் அவரவர் வகுப்புக்கு சென்றுவிட்டனர்.

அந்த கால்வாய் அகலமானது, ஒரு வளர்ந்த மனிதரின் இடுப்பள‌வு ஆழம் கொன்டது, எப்போதும் அதில் கொஞ்சம் கருமையான அழுக்கு நீர் தேங்கி இருக்கும், அந்த கால்வாயில் விழுந்த அந்த சிறுவனின் இடது கை முறிந்து போனது, தலையின் முன்பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது. கால்வாயில் சுருண்டு விழுந்து கிடந்தான் அச்சிறுவன், அவன் நல்ல‌ நேரம், அப்போது அவ்வழியாக அந்த கால்வாயை சுத்தம் செய்ய வந்த அப்பள்ளியின் தோட்டக்காரர் (இந்தியர்) கால்வாயில் அழுதவாறே கிடந்த சிறுவனைக் கண்டு பதறிப்போய், உடனே கால்வாயில் இறங்கி அவனை தூக்கிக்கொன்டு வெளியே வந்தார்.

உடல் முழுக்க காயங்களோடு, முகம் வீங்கி, உதடு கிழிந்து கிடந்த அச்சிறுவனை அழுக்கு, நாற்றம் எதையும் பாராது, நெஞ்சோடு அள்ளி அணைத்துக்கொன்டு தலைமை ஆசிரியர் அறைக்கு கொன்டு சென்றார், அங்கே அப்பள்ளியின் தலைமை ஆசிரியன், அக்குழந்தை உயிரோடு இருப்பதை உறுதி செய்து விட்டு, "இன்னும் கொஞ்ச நேரத்தில் பள்ளி முடிந்துவிடும் பெற்றோர் வந்து கவனித்துக்கொள்வார்கள் எனவே அதுவரை அவனை அவனுடைய வகுப்பறையில் விட்டுவிடு எனப் பணித்திருக்கிறான்..! (ஒரு வேளை தன் சொந்த இனமான சீனக்குழந்தையாயிருந்தால் அவன் அப்படியொரு முடிவை எடுத்திருப்பானா என்பது தெரியவில்லை ! ) தோட்டக்காரர்  திகைத்துப்போனார், மீண்டும் குழந்தையை தூக்கிக்கொன்டு அவனுடைய முதலாம் வகுப்பறையை தேடிக்கொன்டு ஓடினார், அவனின் வகுப்பாசிரியை எலலோருக்கும் மேல்! அவள் அச்சிறுவனின் மேலுள்ள சாக்கடை அழுக்கால் வகுப்பறை நாறிவிடும் எனக்கூறி அவனை பள்ளி விடும்வரை பள்ளி உணவுச்சாலை (காண்டீனில்) விட்டுவிடும்படி கூறியிருக்கிறாள், யாருக்கும் அவனுக்கு உதவவேண்டும் , முதலுதவிச்சிகிச்சை வழங்க வேண்டும் என்று தோன்றவேயில்லை, என்ன காருண்ய மனமோ புரியவில்லை! சே என்றாகிப்போனது தோட்டக்காரருக்கு, இருந்தும் அச்சிறுவனை தூக்கிக்கொன்டு உண‌வுச்சாலைக்கு கொன்டு சென்றார், அங்கிருந்த நாற்காலியில் அமர்த்தி தனது துவாலையால் கொஞ்சம் கொஞ்சமாக அவனை துடைத்துவிட்டார். அவன் காயங்களிலிருந்து நிற்காமல் வழிந்து கொன்டிருந்த இரத்தத்தை சுத்தம் செய்தார். பள்ளி விடும் வரை பொறுமையோடு அவன் அருகில் அமர்ந்து அவனை பாதுகாத்தார் அந்த நல்லவர்..!

பள்ளி விட்டதும், அவன் அண்ணன் வெளியில் வந்து தன் சகோதரனின் நிலையைக் கண்டு அதிர்ந்துபோய்  நின்றான். அவர்களை அழைத்துச்செல்ல வந்த காவேரி அக்கா தனது மகனின் நிலையைக் கண்டு பதறிப்போனார். உடனடியாக அவன் வகுப்பாசிரியரை சென்று கண்டார், அவர் படிப்பறிவற்றவர், தமக்குத் தெரிந்த ஓரிரு மலாய் வார்த்தைகளைக்கொன்டு "அப்பா பசாய்"? (என்ன நடந்தது) ? என்று வினவ, கொஞ்சமும் அக்கறையில்லாமல் "தத்தாவ்" (தெரியாது) எனக்கூறி கதையை முடித்துவிட்டாள் அந்த பொறுப்பற்ற வகுப்பாசிரியை...! காவேரி அக்காவுக்கு என்ன நடந்ததென்று புரியவில்லை குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார், கீழே விழுந்து விட்டான் எனக்கூறி உடைந்திருந்த மண்டை காயத்திற்கு தையலும், முறிந்த‌ கைக்கு கட்டும் போடப்பட்டு சில நாட்கள் மருத்துவமனையிலேயே தங்கவைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வீட்டிற்கு அனுப்பப்பட்டான் அச்சிறுவன். சட்டம் தெரியாத, உலக நிலவரங்கள் புரியாத காவேரி அக்கா அமைதி காத்து விட்டார், அதே இன்று போலிருந்தால், முகநூல், ஊடகங்கள், நாழிதழ்கள், காவல்துறை புகார் என சரியான பதிலடி அந்தப் பள்ளிக்கு கொடுக்கப்பட்டிருக்கும்.

சில நாட்கள் கழித்து ஒரு நாள் மதியம் வீட்டிற்கு வந்த காவேரி அக்கா நடந்த சம்பவத்தை பற்றி கூறினார், அதை கேட்க மிகவும் வேதனையாக இருந்தது, அதோடு அப்பிரச்சனையை விட்டு விட்டீர்களா அக்கா ? என  பொறுமையிழந்து நான் கேட்க, காவேரி அக்கா , இல்லை உடனே சின்னவனை( தனது இளைய மகனை அவர் அப்படித்தான் செல்லமாக அழைப்பார்) அந்த சீன பள்ளியிலிருந்து நிப்பாட்டி தமிழ்ப்பள்ளியிலே சேர்த்துட்டேன் என்றார், " ஓ அப்ப  ரெண்டு பேரும் இப்ப தமிழ்ப்பள்ளியில படிக்கிறாங்களா அக்கா ?  என ஆர்வத்துடன் கேட்க அவர் கொடுத்தார் பாருங்கள் ஒரு பதில்! என்னை திக்கு முக்காடச் செய்து விட்டது அவர் சிந்தனை !

"இல்லை, இல்லை பெரியவன் அதே சீன ஸ்கூல்லயே தான் படிக்கிறான்...! என்ன இருந்தாலும் சீனப்பள்ளியில் படிச்சா சீனங்களோடு கலந்து சீக்கிரமா முன்னுக்கு வரலாம் இல்லையா ?"
நான் வாயடைத்துப்போனேன், என்னே ஒரு தன்மானம்! சுயகெளரவம்!
வீரம்! விவேகம்! நமக்கு...!!!!
  

             
   
சிவனேசு,
பினாங்கு
 

Thursday, August 1, 2013

ஒரு ஜீன்சு உடையும், உடையாத நட்பும்...! - நிறைவு

 பயணம் தொடர்கிறது...

நல்லவேளை அங்கே மலை நெடுக ஓய்வுக்கூடாரங்கள் அமைக்கப்பட்டிருந்தன. ஆங்காங்கே அமர்ந்து சிறிது ஓய்வெடுத்துக்கொன்டு மலையுச்சியை அடைந்தபோது மணி 3ஐ தொட்டிருந்தது, மலையுச்சி பார்க்க ரம்மியமாக இருந்தது, பச்சைக் கம்பளம் விரித்த மேடுகள். அதில் சகஜமாக உலவித்திரியும் வென்மேகச் சாரல்கள், மிகவும் குளிர்ச்சியான சீதோக்ஷ்ணம்,  பனி மூட்டங்கள் உடல் தழுவி உள்ளம் குளிரச்செய்தன. மலையுச்சியிலிருந்து கீழே பார்த்தால் சின்னச்சின்னச் சதுரங்களாய் பட்டண‌ம் கண்ணுக்கு தென்பட்டது. எல்லோரும் அந்த இயற்கை எழிலை அனுபவித்து மகிழ்ந்தனர். மலையேறிய களைப்போடு பசியும் சேர்ந்து கொன்டது...

உணவுண்ண ஆயத்தமானார்கள்,  அவர்கள் அனைவரும் திட்டமிட்டபடி ஆளாளுக்கு உணவு கொன்டு வந்திருந்தனர். குளிர்பாணங்கள், நாசி லெமாக் உணவு, கச்சான், பலகாரங்கள், மிட்டாய்கள் அவற்றோடு ஒரு பெரிய பாத்திரம் நிறைய பொறித்த கோழித்துண்டுகள் ( kfc ) என எக்கச்சக்க உண‌வுகள். பெண்களை "சாப்பாட்டு இராமாயிகள்" என்றால் நமக்கு கோபம் வருகிறது! அனால் அங்கே அந்தக் குட்டிப்பெண்கள் அனைவரும் இணைந்து ஒரு குட்டி உணவகத்தையே உருவாக்கி வைத்திருந்தனர். அவரவர் அவர் எடையில் பாதியளவு பையை சுமந்து வந்ததன் காரணம் அப்போதுதான் விளங்கியது...!     

மிகவும் குளிர்ச்சியான இடம், உணவு வெகுவிரைவில் சில்லிட்டுவிடுமல்லவா ? அதனால் அனைவரும் விரைந்து உண்டனர், அவள் வெண்ணெயும், பழக்கூழும்(jam)  கலந்த ரொட்டித்துண்டுகள் கொன்டுவந்திருந்தாள், ஒரு துண்டை உண்டுவிட்டு பார்த்தால் பாத்திரம் காலி, அதன் பின்னர் அடுத்தவர் உணவை தொடக்கூடாது எனும் அம்மாவின் கட்டளை அங்கே காலி!

ஒரே மகிழ்ச்சியாகவும், ஆரவாரமாகவும் இருந்தது, சற்று நேரம் கழித்து மணியைப் பார்த்தால் 5ஐ தாண்டியிருந்தது! இவளுக்கு பதைபதைக்க ஆரம்பித்தது. அனவரும் கீழிறங்கத் தயாராயினர், உணவுண்டதாலும், ஏற்கனவே மலையேறிய களைப்பாலும் யாரும் திரும்பவும் நடக்கத் தயாராயில்லை!

நல்லவேளை அங்கே பயணம் செய்ய ஜீப் வண்டிகள் வசதியும்  ஏற்படுத்த‌ப்பட்டிருந்தது, சிறு சிறு குழுக்களாக பிரிந்து வண்டிகளில் ஏறி கீழே பிரயாணமானார்கள் அவர்கள். 

மலையடிவாரத்தில் அனைவரும் திரும்பவும் ஒன்றுகூடி விடைபெற்றுப்பிரிந்தனர். அவள் அரக்கப் பரக்க வீட்டையடையும் போது மணி 7. தோழியும் உடன் வந்தாள். அவசரத்தில் உடை மாற்ற‌ வேண்டியதும் மறந்து போயிருந்தது, வீட்டு வாசலை அடைந்ததுதான் தாமதம், உள்ளேயிருந்து ஒரு பெண்புலி உறுமத் தொடங்கிய‌து....!!! 

"அப்படியே உன் கூட்டாளி வீட்டுக்கு போயிடு, வீட்டுக்குள்ளே வந்தே, காலை ஒடச்சிப்புடுவேன், எத்தனை மணிக்கு வீட்டுக்கு வர்ர"? ஏசிக்கொன்டே எட்டிப்பார்த்தவர், ஜீன்ஸ் சட்டையில் நின்றிருப்பதைப் பார்த்ததும் எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றியது

போலானது! "என்ன சட்டை இது "? என்று ஆரவாரம் செய்ய, அதுவரை அவளோடு அமைதியாக‌ நின்றிருந்த அவள் தோழி , பொறுமையிழந்து, "ஆண்ட்டி பஞ்சாபியெல்லாம் போட்டுட்டு மலையேற‌ முடியாதுன்னு நாந்தான் என் சட்டைய கொடுத்தேன்" என்றாள், அவள் அம்மா ஒன்றும்
பேசாமல் உள்ளே சென்றுவிட்டார்.

பொழுது இருட்டிக்கொன்டு வந்தது, "நீ வீட்டுக்குப் போ நான் பார்த்துக்கொள்கிறேன்" எனக் கூறினாலும் கேளாது, அவள் வீட்டு வாசலில் அவளோடு கொசுக்கடியில் உடன் நின்றாள் தோழி! அது வரிசை வீடு, அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் எட்டிப் பார்த்தனர். வெட்கமும் வேதனையுமாக இருந்தது! இன்னும் கொஞ்ச நேரத்தில் அவள் தந்தையும் வந்து விடுவார்! அவருக்கு இந்த நிகழ்வு எதுவும் தெரியாது, விடயம் அறிந்தவுடன் அவர் ஊரே பார்க்க இனாமாக ஒரு உருத்திர தாண்டவம் ஆடுவார், அதை நினைக்க இன்னும் பயமாக இருந்தது அவர்களுக்கு!

நல்லவேளை அவள் அம்மாவின் மனம் சற்று இரங்கியது. அதுமட்டுமல்ல அப்பா வந்துவிட்டால் விடயம் அவருக்கு தெரிந்துவிடும் அம்மாவுக்கும் பாட்டு விழும் அல்லவா?  அதனால் வெளியில் வ‌ந்து "போ உள்ளே, இனிமே இந்தமாறி செஞ்சே" அவர் முடிக்கவில்லை, அவள் முடிவெடுத்துவிட்டாள்....! இனி இப்படி செய்து அவமானப்படக்கூடாது என்று! அதுவரை இருளில், கொசுக்கடியில் அவளோடு உடன் நின்ற அவள் தோழி நிம்மதியோடு
விடைபெற்றுச் சென்றாள், தோழியை அனுப்பி வைத்துவிட்டு அவள் வீட்டுக்குள் ஓடி, குளித்துவிட்டு
அவள் அப்பா வருவதற்குள் விரைவாக போர்வையை போர்த்திகொன்டு படுத்துவிட்டாள் , ஆனால் தூக்கம்தான் வரவேயில்லை, நெடு நேரம் வரை. அம்மாவின் புண்ணியத்தால் அந்த சம்பவம் இன்றுவரை அவள் அப்பாவுக்கு தெரியாது...!

இப்படி அம்மாவின் ஆத்திரத்தால் வாசலில் நின்ற அந்த பாவப்பட்ட ஆத்மா யாராயிருக்கக்கூடுமென்பதை வாசிப்பவர்கள் ஓரள‌வு கணித்திருக்கக்கூடும், அந்த சம்பவத்திலும் இன்றுவரை அவள் வாழ்வின் இன்ப, துன்பங்கள் அனைத்திலும் அன்றுபோலவே இன்றும் பங்கெடுத்துக்கொள்ளும் அவளின் அந்த  அன்புத்தோழியின் பெயர் கோமளா.

அன்று அவள் கொடுத்த அந்த ஜீன்ஸ் இன்றும் துணிஅடுக்கில் அந்த அநுபவத்தை பறைசாற்றிக்கொன்டு பத்திரமாய் இருக்கின்றது மனஅடுக்கில் பசுமையான அவர்கள் நட்பின் நினைவுகளைப்போல...!

இடைநிலைப்பள்ளிப்பள்ளி வாழ்க்கையில் மற‌க்க முடியாத நிகழ்வு இது, தோழிகள் கோமளம், ஜோஸப்பீன், தமிழ்மலர், நிர்மலா, ஏஞ்சலீனா, மஞ்ஜிட் கவுர், சாண்டி, உமா, க்ஷோபா, மஞ்சுளா, சித்ரா, வாணி, முனியம்மா, சுகுனா (பெயர் விடுபட்ட தோழிகள் மன்னிக்க) எல்லோருக்கும் அன்பும் நல்வாழ்த்துகளும்...!