.

.
.

Tuesday, July 23, 2013

42ம் நம்பர் வீடு...! - இறுதிப்பாகம்

 தொடரும் கல்பனாவின் சோகக்கதை.....



பட்டணத்தின் ஒதுக்குப் புறமொன்றில் ஆட்களின் புழக்கம் அதிகமில்லாத, அமைதியும், தனிமையும் நிறைந்த ஓரிடத்தில், களையும் கம்பீரமுமாக அமைந்திருந்தது அந்த 42ம் நம்பர் வீடு!

தரைவீடு என்றாலும், மிகவும் பெரிதாக,  நீலமும் பச்சையும் கலந்த கடல் நீல நிறத்தில் சுவர் வண்ணம், செங்கல் நிறத்தில் பளிங்குத் தரை என கண்ணைக் கவர்ந்தது அவ்வீடு..! செல்வந்தர்களுக்கேயுரிய செல்வ பூரிப்புடன், சகல‌ வசதிகளுடனான சமையலறை, இன்ன பிற வசதிகளுடன் அமைந்த அந்த வீடு அதற்குச் சற்றும் சம்பந்தமில்லாத வெகு குறைவான வாடகையில் அமைந்தது தங்களின் பெரும் பாக்கியம் என அகமகிழ்ந்து போயினர் என் பெற்றோர். முதலில் எனக்கும் ஓடி விளையாட வசதியாக பரந்து விரிந்திருந்த அந்த வீடு மிகவும் பிடித்திருந்தது , ஆனால் அந்த மகிழ்ச்சி வெகு விரைவிலேயே மறைந்து, பெரும் பீதி என்னை ஆட்கொள்ளப்போகிறது என்பதை நான் அறிந்திருக்கவில்லை அப்போது..!   


அந்த வீட்டில் குடியேறிய சில நாட்களுக்குப் பின் ஒரு நாள் மாலையில்  வழக்கம் போல அம்மா பால் புட்டியில் பாலை நிரப்பி முன்னறையில் என்னை படுக்கச் செய்து விட்டு ஏதோ வேலையாக சமையலறைக்குள் சென்று விட்டார். பாலை அருந்திக்கொன்டே உற‌க்கம் வராமல் தத்தளித்துக்கொன்டிருந்த நான் தரையில் இப்படியும் அப்படியுமாக உருண்டு புரண்டு கொன்டிருந்தேன். அமைதியான அந்த வேளையில் ஏதோ ஒரு சன்னமான ஒலி என் கவனத்தை ஈர்த்தது, ஒலிவரும் திசையை நோக்கி நெருங்கினேன், அந்த ஓசை அந்த வீட்டின் முன்னறையின் ஒரு ஓரத்தில் அமைந்திருந்த தரையினடியில் இருந்து வெளிப்பட்டுக் கொன்டிருந்தது,காதை அந்த ஒலிவரும் பளிங்குத்தரையின் மேல் வைத்து கேட்கிறேன், இப்போது இன்னும் தெளிவாக கேட்கிற‌து அந்த சத்தம் "லப் டப், லப் டப் " என !!!

அது இதயத் துடிப்பின் ஓசை என்பது எனக்குப் புரியவில்லை, இருந்தும் விநோதமான ஒலியாக இருந்ததால் ஓடிச்சென்று அம்மாவை அழைத்தேன். சமயலறையில் இரவு உண‌வு தயாரிப்பதில் மும்முரமாக இருந்த அம்மா, முதலில் வர மறுத்தாலும், பின்னர் என் நச்சரிப்புத் தாங்காமல் சலித்துக் கொன்டே வந்து நான் குறிப்பிட்ட அந்த இடத்தில் காதை பொருத்திக் கேட்டார், அவருக்கு எதுவுமே கேட்கவில்லை! கடுப்புடன் எழுந்து என்னைத் திட்டிக்கொன்டே திரும்பவும் சமையலறைக்குள் சென்றுவிட்டார். நான் ஆச்சரியத்துடன் மீண்டும் அங்கே காதை வைத்துக் கேட்கிறேன், தெளிவாக கேட்கிறது சப்தம் "லப் டப், லப் டப்" என...! மெல்ல அவ்விடத்திலிருந்து அகன்று தூரத்தில் படுத்து கண்களை இறுக மூடிக்கொன்டேன், வார்த்தைகளால் விவரிக்க முடியாத  ஒரு பய‌ உணர்வு இதயத்தை இறுக்க‌ ஆரம்பித்தது...!

அந்த சம்பவத்திற்குப் பின்னர், மேலும் மேலும் விநோதமான பல சம்பவங்கள் அரங்கேறின, எங்களுக்கு அறிமுகமில்லாத ஒரு சீன மாதுவை அந்த வீட்டின் பல இடங்களில் பல சமயங்களில் நான் பார்த்தேன், அமைதியாகவும், கருமை நிற‌த்திலும் சோகமாகவும் காட்சியளித்தாள் அப்பெண், அவள் பார்வை பெரும்பாலான சமயங்களில் சூனிய‌த்தை வெறித்து நோக்கிய வண்னமும் ஒரு சில சமயங்களில் என்னை நோக்கிய வண்ண‌மும் அமைந்திருந்தது, அவளைப் பார்த்தாலே மிகவும் பயமாக இருந்தது எனக்கு! அப்பொழுதெல்லாம் அம்மாவை வற்புறுத்தி அழைத்து வந்து காட்டினாலும் அம்மா பார்க்கும் பொழுது அங்கே எதுவும் இருப்பதில்லை, எனவே அம்மா என்னை திட்டி கோபம் கொள்வார், இது பலமுறை தொடர, சில முறை என‌க்கு அடியும் விழுந்தது, இதனால் வேதனையுற்ற நான் நாளடைவில் அம்மாவிடம் எதையும் சொல்வதை நிறுத்திக்கொன்டேன். நான் மிகவும் மெலிந்து அடிக்கடி நோயில் விழ ஆரம்பித்தேன். என் அம்மா நான் பயந்திருக்கிறேன் என கயிறு மந்திரித்து கட்டினார், ஆனால் நான் காணும் விநோத காட்சிகளும், அந்த சோகமான பெண்ணும் என் பார்வையில் அவ்வப்போது வந்து போய்க் கொன்டுதான் இருந்தன. குறிப்பாக   தரையிலிருந்து வரும் அந்த லப் டப் ஓசையும்..  ஆச்சரியம் என்னவென்றால் இவை எதுவுமே அம்மா, அப்பா என யாருக்குமே தென்படவில்லை என்பதுதான் ! அதனால் அவர்கள் நான் பயப்படுவதை மிகச் சாதாரணமாக எடுத்துக்கொன்டு, சிறு குழந்தை உளருகிறாள் என தங்களுக்குள் பேசிக்கொன்டனர்.

இந்த நிலையில் என் அம்மா குடும்ப நன்மைக்காக மேலும் ஒரு முடிவை எடுத்தார், அது அவர் பகுதி நேர வேலைக்குச் செல்வது! ஆரம்பத்தில் நாங்கள் குடியிருந்த வீடு, தற்பொழுது குடியிருக்கும் வீட்டைக் காட்டிலும் இரண்டு மடங்கு அதிகமான வாடகையை கொன்டிருந்தது, இருப்பினும் அந்த வீட்டில் எல்லா செலவுகளும் போக ஒவ்வொரு மாதமும் கொஞ்சம் பணத்தை மிச்சம் பிடித்து சேமித்து வைத்திருந்தார் அம்மா, ஆனால் தற்பொழுது வாழும் வீட்டில் எப்படித்தான் சிக்கனம் பிடித்து சேமித்து வைத்தாலும் கையில் பண‌ம் தங்காமல் ஒவ்வொரு மாதமும் வீணான செலவுகளால் கரைந்து போகிறது என அம்மா புலம்ப ஆரம்பித்தார். இப்படியே போனால் நாளும் விடமென ஏறிவரும் விலைவாசியில் எப்படி சொந்த வீடு வாங்கி குடியேறுவது ? அம்மா மீண்டும் கலங்க ஆரம்பித்தார், அதுசமயம் அப்பாவும் தனது பகுதி நேர வேலையை இழந்திருந்தார், அவரின் வாகனம் பழுது பார்க்கும் செலவு, எனது நோய்க்கான செலவு என மாத மாதம் செலவுகள் அதிகரித்து வந்தன.

நாட்கள் உருண்டோடின, எங்களின் வாழ்விடத்திற்கு மிதிவண்டியில் சென்று வரும் தூரத்தில் ஒரு முதியோர் காப்பகம், அதில் பகுதி நேரமாக சமையலாள் வேலை காலியிருப்பதாகவும், நல்ல சம்பளம் தரப்படுவதாகவும் அறிந்து கொன்ட அம்மா, அந்த வேலைக்குச் செல்ல விரும்பினார். அது குறித்து அப்பாவிடம் கலந்தாலோசித்தார், அம்மா வேலைக்குச் சென்றுவிட்டால் என் நிலை என்ன, யார் கவனித்துக்கொள்வது என்பதைப்பற்றி இருவரும் கலந்தாலோசித்தனர்.  
  
அந்த காப்பகத்தில் வாழும் முதியோர்கள் பலர் நோயால் பீடிக்கப்பட்டவர்கள் என்பதால் என்னை அம்மா பணியிடத்திற்கு உடனழைத்துச் செல்லும் கோரிக்கை காப்பகத்தால் நிராகரிக்கப்பட்டுவிட்டது, மேலும் சமையலறையிலும் என்னை உடன் வைத்துக்கொள்ள அனுமதி கிடைக்கவில்லை, அதுவும் ஆபத்தானது என்பதால், எனவே அறியாமலேயே அதற்கும் மேலான ஒரு ஆபத்தான நிலையில் எனை விட முடிவு செய்தனர் என் பெற்றோர். அதாவது, அந்த வீட்டில் என்னைத் தனியாக சில மணி நேரங்கள் தூங்க வைத்து விட்டுவிட்டு என் தாய் சில மணி நேரங்களில் வேலைக்குச் சென்றுவிட்டு வந்து விடுவது எனும் ஏற்பாடுதான் அது. எனினும் மேலாளர் பதவி சலுகையை உபயோகித்து அந்த சில மணி நேரத்தை தமது ஓய்வு நேரமாக்கிக் கொன்டு எனது அப்பா வீட்டிற்கு வந்து என்னைக் கவனித்துக் கொள்வது எனவும் ஏற்பாடானது. போதுமான பண‌ம் சேர்ந்தவுடன் அம்மா வேலையை விட்டு விடுவது எனவும் முடிவெடுத்துக் கொன்டனர் என் பெற்றோர்.

அதற்கு பின் வந்த நாட்களில், அம்மா வேலைகள் அனைத்தையும் சுறுசுறுப்பாக முடித்து, எனக்கும் வயிறு நிரம்ப உண‌வளித்து, புட்டி நிறைய பாலும் புகட்டி படுக்கை அறையில் உற‌ங்கச்செய்து விட்டு மிதிவண்டியில் வேலைக்குச் சென்று விடுவார். இயல்பாகவே நன்கு சமைக்கக் கூடியவர் அம்மா, அங்கே முதியோர்களுக்கு, அட்டவணைப்படி கஞ்சி, சூப் என உப்பு, உறைப்பு, எண்ணெய் குறைத்து பத்தியமாக சமைத்து வைத்துவிட்டு, ஒரு சில மணி நேரங்களில் வேலையை முடித்துவிட்டு வீட்டிற்கு திரும்பி விடுவார், அதற்குள் அப்பாவும் வீடு வந்து உற‌ங்கும் என்னை கவனித்துக்கொன்டு வீட்டிலிருப்பது வழக்கம். ஆனால் கூடுதல் வேலை அல்லது வேலைகளில் பிரச்சனை என ஏதும் நேர்ந்துவிட்டால் அன்று அப்பா வீட்டிற்கு வர இயலாமல் ஆகிவிடும். இப்படியாக பல சமயங்களில் நானறியாமலேயே அவ்வீட்டில் தனித்து விடப்பட்டிருந்திருக்கிறேன் நான்.

அன்றும் அதுபோலவே என் தாய் வேலைக்குச் சென்றுவிட, என் தந்தை வேலையில் ஏதோ பிரச்சனையால் வீட்டிற்கு வரவில்லை, உற‌ங்கிக்கொன்டிருந்த நான் திடீரென உற‌க்கத்திலிருந்து விழித்துக்கொன்டேன், மிக மிக அமைதியாக இருந்தது வீடு. பயத்துடன் விழித்து எழுந்தேன், அறை மங்கலாக காட்சியளித்தது, படுக்கையறைக் கதவின் அடியிலிருந்து வெண்புகை கசிந்து உள் வந்து கொன்டிருந்தது..., எனக்கு பயமாக இருந்தது, அழுகை வந்தது, அழுது கொன்டே அறைக்கதவை திற‌ந்து கொன்டு வெளியில் வந்து நின்றேன், வீடு முழுதும் அடர்த்தியான புகை, எனது தொண்டை கசந்தது, கண்கள் எரிந்தன, மூச்சுத்திண‌றியது, அப்போது எனக்கு எதிரேயிருந்து, முன்னறையில், எனக்கு இதய ஓசை கேட்டதே அவ்விடத்தில் என்னைப் பார்த்துக் கொன்டே நின்றிருந்த அந்த கருமையான சீனப்பெண் என்னை நோக்கி நெருங்கி வந்து கொன்டிருந்தாள், அதற்கு மேலும் தாக்குப்பிடிக்க முடியாமல் சுயமிழந்து வீழ்கிறேன் நான்...!

கல்பனா தனது இளம் பிராயத்திற்கே சென்று, ஒரு சிறுமியாக மாறி த‌ன்னிடம் அவள் அநுபவத்தை சொல்வது போலிருந்தது திவ்யாவிற்கு, மெய்மற‌ந்து கல்பனாவின் சுயசரிதத்தில் ஆழ்ந்திருந்த அந்த நேரத்தில் திவ்யாவின் கைப்பேசி அமைதியைக் கிழித்துக்கொன்டு ஒலிக்கத் துவங்கியது, கவனத்தை திருப்பி கைப்பேசி அழைப்புக்கு பதிலளிக்க ஆரம்பித்த மறுகணம், திகைத்துப்போய், கைப்பேசியை பற்றிய கைகள் நடுங்க, வீசும் குளிர் காற்று நெற்றி பொட்டில் அறைந்தது போல், சூடான வியர்வைத்துளிகளால் உடல் நனைய,திரும்பிப்பார்க்கவும் திராணியற்று அதிர்ச்சியில் உறைந்திருந்தாள் திவ்யா....

எங்கே இருக்கே திவ்யா ? இன்று மாலை நாம் வெளியே செல்ல முடிவெடுத்திருந்தோமே மறந்து விட்டதா ? உனக்காக‌ ரொம்ப‌ நேரமா காத்திட்டிருக்கேன், சீக்கிரம் வா!  மறுமுனையில் தெளிவாக கேட்டது கல்பனாவின் குரல்... !

பரந்த அந்த மைதானத்தில்,பரவிய‌ இருளில் திவ்யா ஒற்றைப்புள்ளியாக.....!      












பி.கு : பெற்றவர்கள் அல்லது பொறுப்பான பாதுகாவலர்கள் இன்றி குழந்தைகள் வீடுகளில் தனித்து விடப்படுவது மனிதாபிமானமற்ற, மிக மிக கொடிய செயலாகும், சட்டப்படி குற‌றமும் கூட, அப்படிப்பட்ட சூழ்நிலைக்கு ஆளாகும் குழந்தை மனோரீதியிலும், உடல்ரீதியிலும் பெரும் பாதிப்பிற்கு ஆளாகக்கூடும்.


இன்னுமொரு விடயம், குழந்தைகள் கூறுவதை பெரியவர்கள் அக்கறையுடன்  செவிமடுக்க வேண்டும். சிறு குழந்தை தானே என அவர்கள் கூறுவதை அலட்சியமாக புறந்தள்ளலாகாது. அது அவர்களின் த்ன்மானத்தையும், தன்னம்பிக்கையையும் அதிகமாக பாதிக்கும். சில சமயங்களில் பெரியவர்களை விடவும் சிறுவர்களுக்கு அதிகம் செய்திகள் எட்டக்கூடும் என்பது வாழ்வியல் உண்மை.  

இந்த இரு செய்திகளை முன்வைத்தே, உண்மையும் கற்பனையும் கலந்த இந்த 42ம் நம்பர் வீடு கதை உருப்பெற்றுள்ளது...!

No comments: