.

.
.

Tuesday, September 25, 2012

மரம் வளர்த்த மாத்தாய்




இய‌ற்கைப் பேரெழிலின் உறை‌விட‌மாக‌த் திக‌ழ்வ‌து ப‌ச்சைப்ப‌சேலெனும் ப‌ச்சைக் க‌ம்ப‌ள‌ம் விரித்த பூமி. அந்த‌ ப‌சுமைக்கு வித்தாவ‌து, செடி, கொடி ம‌ர‌ங்க‌ள் ஆகிய‌ன‌. மரங்களடர்ந்த காடுகள் கண்ணுக்கு அழ‌கையும், புவிக்கு செழுமையும், ஊர்வன முதல் பறவைகள், மிருகங்கள் ஆகியவற்றுக்கு உறைவிடமாகவும் திகழ்கிறது.

நாக‌ரீக‌ மோகத்தால் மனி‌த‌ன் க‌ட்டிட‌ங்க‌ள் எழுப்புவ‌த‌ற்காகவும், த‌ன‌து சுய‌ தேவைக‌ளுக்காக‌வும் ம‌ர‌ங்க‌ளை வெட்டி, காடுக‌ளை அழித்து பூமியை சிதைத்தான்,  புவியின் சீதோஸ்ன‌த்திற்கு ஊறு விளைவித்தான். விளைவு, பூமியின் த‌ட்ப‌ வெட்ப‌ நிலை மாறிய‌து, வெப்ப‌ம‌ய‌மான‌து, நீர்வள‌‌ங்க‌ள் குறைய‌வும், ம‌ழை இன்றி போக‌வும், விவ‌சாய‌ங்க‌ள் குன்றுவ‌து, ப‌சி ப‌ஞ்ச‌ங்க‌ள் ஏற்ப‌டுவ‌து, போதாத‌ற்கு சூரியக் கதிர்களின் நேரடித்தாக்குதலில் இருந்து உலகைப் பாதுகாக்கும் ஓசோன் எனும் காற்று ம‌ண்டல‌‌த்திலும் ஓட்டை விழுந்து, மனிதர்களுக்கு தோல் புற்றுநோய் என‌ பல்வேறு பிரச்சனைகளையும் மனிதன் எதிர்கொள்ளலானான்.

இத‌ற்கு தீர்வுதான் என்ன‌ ? பூமி ம‌றுப‌டியும் செழிக்க‌, சீதோஸ்ண‌ம் சீர‌டைய‌ தேவை பூமிக்கு ப‌சுமை...!, நிறைய‌ ம‌ர‌ங்க‌ளும் செடி கொடிக‌ளும் பூமியை ப‌சுமையாக‌ மாற்றி ம‌னித‌ வாழ்வின் ஆரோக்கிய‌த்திற்கும், ஆனந்த வாழ்விற்கும் உறைவிடமாகும். அவ்வகையில், பூமியை நேசித்து, புவி மாந்தர்களை காத்திட ஒரு பெண்மணி மாபெரும் பசுமை புரட்சியை ஏற்படுத்தி இருக்கிறார். உலகம் செழித்திட தன் வாழ்வை அர்ப்பணித்த அந்த அற்புதப் பெண்மணி வாங்கரி மாத்தாய்.  மனித சேவையே மகேசன் சேவை என்பதற்கொப்ப சமூக சேவைக்கு முக்கியம் தந்து வாழ்ந்தவர். 

வாங்கரி மாத்தாய்  1940 ஆம் ஆண்டு ஏப்ரல் 1 ஆம் தேதி கிக்கூயு எனும் இனத்தில் கென்யாவின் தேட்டு(Tetu) எனும் ஊரில் பிற‌ந்தவராவார். இவரின் இயற்பெயர் வாங்கரி முத்தா என்பதாகும். பின்னாளில் இவர் தனது கணவரின் பெயர் மாத்தாய்(வாங்கி மாத்தாய்) இணைக்கப்பட்டு வாங்கரி மாத்தாய் என அழைக்கப்பட்டார். இவர் உயிரியல் துறையிலும் கால் நடை உடற்கூறு துறையிலும் பிட்ஸ்பர்க் பல்கலைக்கழகம் மற்றும் நைரோபி பல்கழைக்கழகம் ஆகியவற்றில் தமது பட்டப்படிப்பை முடித்தவராவார். ஏப்ரல் 1966 ல் இவர் தனது வாழ்க்கைத்துணைவர் வாங்கி மாத்தாய் என்பவரை சந்தித்து 1969 மே மாதத்தில் மணமுடித்துக் கொன்டார். இந்த இணையருக்கு‌ மூன்று வாரிசுகள் பிறந்தனர்.

மிகச்சிறந்த சுற்றுச்சூழல் ஆர்வலரும், அரசியல்வாதியுமான இவர் 2004ஆம் ஆண்டின் அமைதிக்கான‌ நோபல் பரிசினை பெற்றார். தமது பசுமைப்பட்டை இயக்கத்தின் மூலம் தாம் வாழ்ந்த மண்ணிற்கு மகத்தான சேவையாற்றியவ‌ர் வாங்கரி மாத்தாய்.

இவர் கற்ற உயர்கல்வியின் மூலம் இவர் நைரோபி பல்கலைக்கழக விரிவுரையாளராகவும், பல அரசு சாரா பொது இயக்கங்களில் அங்கத்தினராகவும் சேவையாற்றியுள்ளார் . விளிம்பு நிலை மனிதர்களை சந்திப்பதும், அவர்களது பிரச்சனைகளை கேட்டறிந்து களைவது ஆகிய சேவைகளில் தம்மை ஐக்கியப்படுத்திக்கொன்டார்.

சுற்றுச்சூழலை பாதுகாப்பதோடு, நாட்டில் நிலவும் பஞ்சம், பசி, பட்டினி, வேலையின்மை ஆகிய பிரச்சனைகளைக்களைய, மண்ணையும் மனித வாழ்வையும் ஒருங்கிணைத்த முயற்சியாக மரம் நடுவதன் மூலம் மண்ணின் வரட்சியையும், மனிதரின் வாழ்க்கை வரட்சியையும் ஒருங்கே களையக்கூடிய ஒரு உன்னத வழியைக் கண்டுபிடித்து அதை செயல்படுத்த துவங்கினார்  மாத்தாய்..

இவரின் அயரா உழைப்பினால், இவரை உலகளவில் பிரபலப்படுத்திய "பசுமைப்பட்டை" இயக்கம் ஜூன் 5 தேதி 1977 ல் அறிமுகம் கண்டது. நாட்டில் வேலையின்றி வாடிய பெண்களைக்கொன்டு மரங்கள் நடவும், பின்னர் அதற்கென பசுமைப்பட்டை இயக்கத்தின் நிதியில் அவர்களுக்கு ஒரு தொகையை ஊக்குவிப்புத் தொகையாகவும் வழங்கலானார். இதற்கான பயிற்சிகள், வழிமுறைகள் ஆகியவற்றை அவர்களுக்கு கற்றுத்தந்து "பசுமைப்பட்டை" இயக்கத்தை ஒரு வெற்றிகரமான இயக்கமாக வலம்வரச்செய்தார். 

வெளிச்சம் தரும் விளக்கின் அடியிலும் இருளுண்டு, அதுபோலவே, மண்ணும் மனிதரும் செழிக்க பாடுபட்ட இவரின் தனிப்பட்ட வாழ்க்கையும் அத்தனை இனிமையானதாக அமைந்துவிடவில்லை, மணமுறிவு, வழக்கு விசாரணை, நஸ்ட ஈடு என பல துயரங்கள் இவர் வாழ்விலும் அரங்கேறியுள்ளன. எனினும் அதிலெல்லாம் சோர்ந்து பின்வாங்கிவிடாமல், அரசியல், சமுகசேவை என அயராது பாடுபட்டார் மாத்தாய். உலகம் இவரை உற்று நோக்க ஆரம்பித்தது, அவர் குரலுக்கு செவி சாய்க்க ஆரம்பித்தது. அவரது சேவைகள் அங்கீகரிக்கப்பட்டன. அனு உலைகள் வைத்து பூமித்தாயின் அங்கங்களை சிதைக்கும் மாந்தர்கள் மத்தியில் மரம் வளர்த்து அவள் மனங்குளிர செய்தவரை பல நாடுகள் பாராட்ட ஆரம்பித்தன. பல அங்கீகாரங்கள் பரிசுகள், விருதுகள் என மாத்தாய் பாராட்டப்பட்டார்.   

இவரின் இணையற்ற புவிசேவையைப் பாராட்டி 2007 ஆம் ஆண்டு இந்தியா இவருக்கு "இந்திரா காந்தி" விருது அளித்து கெளரவித்தது. சிறந்த நடிப்பை வழங்கி மக்களுக்கு மகிழ்வூட்டிய நடிகர் சாருக்கானுக்கு "டத்தோ" விருது வழங்கி சிறப்பித்த நம் நாட்டிற்கு ஏனோ உலகமே செழிக்க பா டுபட்ட இவர் சேவைகள் கவனத்திற்கு எட்டாமலேயே போய்விட்டது  போலிருக்கிறது..! வேதனைக்குரிய விடயம்தான் ...!  

இவர் வாழ்ந்த காலக்கட்டத்தில் சுற்றுச்சூழல் குறித்த மக்களின் விழிப்புணர்வு, நேர்மையான அரசியலின் அவசியம் ஆகிய இரு விடயங்களை ஆயுதமாகக் கையிலேந்தி அற்புதமான மாற்றங்களை தமது வாழ்நாளில் ஏற்படுத்தியவராவார். இன்றுடன் அவர் மறைந்து ஓராண்டு பூர்த்தியான நிலையில் அவரின் சேவைகளை நினைவு கூர்வது இயற்கைக்கு காட்டும் ஒரு சிறிய நன்றிக்கடனாக அமையக் கூடும் என்பதாலேயே இந்தப் பதிவு.
யார் எங்கு வேண்டுமானாலும் பிறந்திருக்கலாம், அறிவாளியாய், பணக்காரராய், அழகானவராய் வாழ்ந்து மறைந்திருக்கலாம், ஆனால் எப்பொழுது அவர் தான், தனக்கு எனும் சுயநலமின்றி பிற உயிர்கள் நலமடையவும், புவி செழிக்கவும் பாடுபடுகின்றாரோ அத்தகைய மனிதர் என்றென்றும் மனுக்குலத்தின் மரியாதைக்கு உரியவராவார். உலக மக்களின் போற்றுதலும் அவருக்கு என்றென்றும் உண்டு என்பது நிச்சயம். 

அவ்வகையில் வாங்கரி மாத்தாய் தான் வாழும் காலத்தில் ஏற்படுத்திய திட்டங்களையும், அதனால் விளைந்த பசுமைப் புரட்சிகளும் பின்வருமாறு...
 மாத்தாயின் பசுமைப் புரட்சிகளின் ஆரம்பம் 1973ஆம் ஆண்டுக்கும் 1976ஆம் ஆண்டுக்கும்  மத்தியில் அவர் தேசிய பெண்கள் ஆணையத்தில் உறுப்பினராக அங்கம் வகித்திருந்த காலக்கட்டத்திலிருந்து துவங்குகிற‌து. தமது நாட்டுப்பெண்கள்(கென்யா) தேவைகள் குறித்த விசாரிப்பில் அவர்களுக்கு தூய்மையான குடிநீர், சமையலுக்கான விறகுகள், அவர்கள் உண்பதற்குத் தேவையான உணவு, மற்றும் அவர்களின் வசிப்பிடங்களுக்குத் தேவையான கட்டுமானப் பொருட்கள், வேலிக்கான பொருட்களின் தேவை மற்றும் அவர்களின் மண்ணைப் பாதுகாக்க வேண்டும் என்பதான கோரிக்கைகளை அவர் அடிக்கடி எதிர்கொள்ள ஆரம்பித்தார்.

இதற்கான தீர்வாக எது அமையக்கூடும் எனும் அவரது தேடலுக்கு விடையாகக் கிடைத்தது "பசுமைப்பட்டை" எனும் பசுமைப்புரட்சி இயக்கம். அதாவது அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளுக்கு தீர்வாக தங்களது வாழ்வை தாங்கள் வாழும் பூமியுடன் இணைத்து வழிதேடலானார்  முடிவில் மரங்களை நடுவதன் மூலம் அவர்களின் வாழ்க்கை மேம்பாட்டிற்கும், எதிர்கொள்ளும் பிரச்சனைகளுக்கு ஒரு விடிவாகவும் அமையக்கூடும் எனும் உண்மையைக் கண்டறிந்தார்.

தம‌து சிந்தனைகளை ஏனைய பிற‌ பெண்களின் மனதில் விதைத்து, அதற்கான வழிமுறைகள், அதனால் ஏற்படப்போகும் நல்ல விளைவுகள், மேலும் தாம் உருவாக்கிய பசுமைப்பட்டை இயக்கத்தின் வழி அவர்களுக்கு ஊதியமாக ஒரு தொகை என பல வழியிலும் இவர் தனது பசுமைப் புரட்சிக்கு உயிரளித்தார். இவரின் சீரிய முயற்சியாலும் ஏனைய பெண்களின் சிறப்பான சேவையாலும் அவரின் பசுமைப்பட்டை இயக்கம் பல்கிப் பெருகியது, நீர்வளம் சுரக்கவும், நில வளங்கள் செழிக்கவும், பறவைகள், மிருகங்கள் என பல்லுயிர்கள் தழைக்கவும், மக்கள் வாழ்வு மலரவும் அவரின் சுற்றுச்சூழலை நல்லமுறையில் பராமரிப்பது குறித்த புரிதல் வழிவகை செய்தது.‌  

பெண்ணுரிமைக்காக பாடுபட்ட இவர் அரசியலில் ஈடுபட முயற்சித்தார், எனினும் அன்றைய அரசாங்கம் இவரை விரோதியாக பாவித்து பல்முனைத்தாக்குதல்கள் நடத்தி பழிவாங்கியது, நீதிகோரி நீதிமன்றம் நாடியவருக்கு பாதகமான தீர்ப்பை வழங்கி நீதித்துறையும் வஞ்சித்தது, நைரோபி பல்கலைக்கழகமும் அரசியில் ஈடுபட பணியியிலிருந்து விலகிய இவருக்கு மறுபடியும் பணிபுரியும் வாய்ப்பைத் தரமறுத்த‌து, அவருக்கு அளிக்கப்படிருந்த பலகலைக்கழக பணியாளர்களுக்கான வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டார்...!

வாழ்விழந்து, வேலையிழந்து, வீடும் இழந்து வீதியில் ஒரு பெண்...! அந்நிலையிலும் மனம் தளரவில்லை மாத்தாய். தொடர்ந்து போராடினார், தோல்விகள் அவரைக்கண்டு தோற்று ஓடின...!

"ஆங்கிலத்தில் புகழ்பெற்ற பழமொழி ஒன்று Though Time never last, Though people do” சிரமமான காலங்கள் நிலைத்து நிற்பதில்லை, உறுதியான உள்ளங்கள் யாவற்றையும் எதிர்கொள்ளும் என்று அதற்கொப்ப தன் மீது எறியப்பட்ட கற்களைக் கொன்டே தனக்கான கோட்டையைக் கட்டியவர் மாத்தாய் என்றால் அது மிகையில்லை...!

நார்வே காட்டிலாக்கா சங்கத்திலிருந்து அவருக்கு நட்பும் நல்ல சேதியும் விரைந்து வந்தது. அவரது "பசுமைப்பட்டை" இயக்கத்தின்பால் ஈர்ப்பு கொண்டு தங்களையும் அதில் இணைத்துக் கொள்ள விழைந்தது. ஐநா சபை இவர் இயக்கத்திற்கு பண உதவி செய்த‌து. அதைக்கொன்டு அரசாங்கத்தின் குறுக்கீடுகளை எதிர்கொன்டு சமாளித்து, பசுமைப்பட்டை இயக்கத்தை விரிவு படுத்தினார். ஆப்பிரிக்க நாட்டின் பிற மாநிலங்களுக்கும் "பசுமைப்பட்டை" இயக்கம் விரிவடையத் துவங்கியது.‌ 

மக்களாட்சிக்கும், சுற்றுச் சூழலுக்கும், அமைதிக்கும் தொடர்பு உண்டு என்பதை உணர்ந்து  அந்த ஒற்றுமைக்கு வித்தான வழிமுறைகளைக்கையாண்டு  வெற்றி கண்டவர் மாத்தாய், அரசியலிலும் மக்களாட்சி ஆதரவு இயக்கம் வழியாக தமது பங்கை ஆழமாகப் பதிவு செய்திருக்கிறார் இவர்.

இத்தனை பெருமைகளுக்கும் உரிய இந்த வீரப் பெண்மணி கர்பப்பை புற்றுநோய் தாக்குதலினால் பாதிக்கப்பட்டு 2011, 25 செப்டம்பர் நைரோபி மருத்துவமனையில் மீழாத் துயிலில் ஆழ்ந்தார். மண்ணின் வரட்சி அகல பாடுபட்டவரை மண்மாதா தனக்குள் மகளாக மீட்டுக்கொன்டாள் கல்லறைக்குள்...!

இன்று இவர் பெயரால் வனத்துறை சாதனையாளர்களுக்கு "வாங்கரி மாத்தாய் விருது" வழங்கி கெளரவிக்கப்படுகிறது. 

வாங்கரி மாத்தாய் போலவே சுற்றுச்சூழல் பராமரிப்பில் ஈர்ப்பு கொன்ட ஏனைய சமூக ஆர்வலர்களுக்கும் நமது நன்றியும் நல்வாழ்த்துக்களும். முக்கியமாக "சின்னக் கலைவாணர்" எனப்பாராட்டப்படும் மிகச்சிறந்த நகைச்சுவை நடிகருமான‌் திரு.விவேக் அவர்களும் தமது இயக்கத்தின் வழியாக இந்தியாவில் 11,000 மரங்களுக்குமேல் நட்டிருப்பதாக ஒரு சினிமா நிகழ்வில் தெரியப்படுத்தினார். அவருக்கும் நமது நன்றியும் நல்வாழ்த்துக்களும். மேலும் முகநூல் நண்பர்களும் இது போன்ற சுற்றுச்சூழல் சேவையாளர்கள் ஆங்காங்கே சேவையாற்றி வருவதை பதிவிடுகிறார்கள், அவர்களுக்கும் நமது நன்றிகள். புவி செழிக்கப் பாடுபடும் ஒவ்வொருவரும் இறைவனின் செல்லப்பிள்ளையே...! அவர்களின் சேவையை புன்னகையுடன் ஏற்று பாராட்டிக்கொன்டிருக்கிறது இயற்கை...!

நட்புகளே, கடல் கடந்து இலங்கை கண்ட அனுமனைவிட, பால‌ம் கட்ட உடல் நனைத்து மண‌ல் இறைத்த அணில் இராமரின் அன்புக்கு பாத்திரமானது, அவர் அன்பின் அடையாளமாக மூன்று வரிகளை தமது உடலில் வாங்கியது என்கிறது புராணம். பெரிய சாதனைகள் செய்ய முடியவில்லை என்றாலும் தவறில்லை, சிறிய செயல்களை சிறப்பாக செய்யலாமே...! வாருங்கள் நாமும் நமது பங்காக ஒரு மரத்தை முடியவில்லை என்றால் ஒரு செடியையாவது நட்டுவைப்போம்...!  
      

பி.கு : அண்மையில் ஜோகூர் மாநில தமிழ் இலக்கியக் கழகத்தின் ஏற்பாட்டில் "ஐம்பெரும் புலவர்கள் இலக்கிய விழா 2012" மிக விமரிசையாக நடந்தேறியது. அந்த நிகழ்வில் ஐம்பெரும் புலவர்களின் வலைப்பூ வடிவமைக்கும் போட்டியில் பங்கெடுத்து, சிறந்த வலைப்பூவிற்கான தேர்வு பெற்று, பரிசும் பாராட்டும் பெற்ற "ரஞ்சீதாஸ் கோர்னர்" ரஞ்சீதாவிற்கு மனமார்ந்த பாராட்டுக்கள். முயற்சி தொடரட்டும், அன்பும் நல்வாழ்த்துக்களும். ஒரு பெண்ணின் பெருமையை இன்னொரு பெண்ணே கூறும் அவரின் ஒளவையார் வலைப்பூ இதோ நண்பர்களின் பார்வைக்காக இங்கே...!

Thursday, August 9, 2012

அனாடமிக் செவிவழி தொடு சிகிச்சை‍ ஒரு கண்ணோட்டம்




வணக்கம், எல்லோரும் நலம் வாழ இறையருள் சித்திக்கட்டும் இன்றைய பதிவில் இணைவோம் வாருங்கள்...


“நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்”, உண்மைதான், இவ்வுலகில் நிறைவான வாழ்வு வாழ ஆரோக்கியம் மிக மிக இன்றியமையாதது. ஆரோக்கியமற்ற மனிதரால் விரும்பினாலும் மகிழ்சியாக வாழ முடிவதில்லை. அவர் தானும் துன்புற்று தம்மை நேசிப்பவர்களையும் வருத்தத்தில் ஆழ்த்துகின்றார்.


இன்றைய நவ‌நாகரீக யுகத்தில் விளைந்த நவீன வாழ்வியல் முறைகளும், விஞ்ஞான, தொழில்நுட்ப வளர்ச்சிகளும் மனித வாழ்வை பல வழிகளில் முன்னேற்றப் பாதைக்கு இட்டுச்சென்றுள்ளன என்பது உண்மை, எனினும் நோயற்ற வாழ்வை அவை நமக்குத் தந்துள்ளன என நம்மால் நிறைவு கொள்ள முடிவதில்லை காரணம், நாளும் ப‌ல்கிப்பெருகி வரும் எண்ணற்ற நோய்கள், (பிறந்த குழந்தைகளுக்கு பெயர் வைப்பதைப்போல அல்லவா விஞ்ஞானிகள், நாளும் ஒரு நோயைக் கண்டுபிடித்து புதிது புதிதாய் அவற்றுக்கு பெயர் வைத்துக் கொன்டு வருகின்றனர்) !!?


பண்டைய நாளில் இயற்கையோடு இணைந்து வாழ்ந்த நமது மூதாதையர்கள் கேள்விப்பட்டும் இருந்திரா எண்ண‌ற்ற பல நோய்களுக்கு இன்று நாம் பதில் சொல்லிக் கொன்டிருக்கிறோம் என்பது வருத்தத்திற்குரிய உண்மை. பால் மணம் மாறா சிசுவிலிருந்து, பலகாலம் வாழ்ந்து விட்ட முதியோரும், பெண்கள், ஆண்கள் என அனைவரும் வயது வரம்பின்றி நோயால் பீடிக்கப்படுவது இக்காலத்தில் சர்வ சகஜமாகிவிட்டது.


நோய் என்றால் சாதாரண சளி, காய்ச்சல் முதற்கொன்டு உயிரைக் கொல்லும் இதயநோய், உடல் உறுப்புக்களை இழக்கச்செய்யும் சர்க்கரை நோய் (பெயர் என்னவோ கேட்பதற்கு இனிமையாகத்தான் இருக்கிறது, ஆனால் ஏற்படுத்தும் தீய விளைவுகள்!!!!), உடலை வலுவிழக்கச் செய்யும் ஆட்கொள்ளி நோயான எயிட்ஸ், உடலுக்கு உள்ளே ஊனை உருக்கும் புற்று நோய் என, இன்றைய காலத்து மாந்தர்களுக்கு சொந்தக்காரர்களாகி விட்டன எண்ணற்ற பல நோய்கள் :(


இன்றைய நாளில் மருத்துவம் மட்டுமென்ன சாதாரணமா ? அவர்கள் சிகிச்சையளிப்பதில் மட்டுமல்ல, தனியார் மயமென்ற பெயரில் மக்களிடம் உள்ள கொஞ்ச நஞ்ச பணத்தையும் வசூல் செய்துவிடுவதிலும் மகா கில்லாடிகள் ! :( இதில் ஆச்சரியம் என்னவென்றால் பல சமயங்களில் இவர்களது சிகிச்சை பலனளிக்காது நோயாளி மரித்துப் போனாலும் இவர்களுக்குச் செலுத்த வேண்டிய தொகையை, ஒரு சல்லிக்காசும் குறையாது வசூல் செய்து விடுவார்கள், என்னே ஒரு மனசாட்சி...! கேட்டால் இந்தச் செலவு, அந்தச் செலவு, என அவர்கள் காட்டும் பில்லில் தாதியர் கூடுதல் நேரம் வேலை செய்தனர் என்பதற்கும் வரவு வைக்கப்பட்டிருக்கும் ! சரி சரி போகட்டும், வியாபாரமாகிப்போன உலகில் இதுவெல்லாம் சகஜமப்பா என நம்மை நாமே தேற்றிக்கொள்ள வேண்டியதுதான், வேறு வழி ????


வசதி படைத்தவர்கள் நோய் பீடித்தால் மேற்குறிப்பிட்ட "அருமையான" வசதி படைத்த மருத்துவமனைகளை நாடி சிகிச்சை பெறுகின்றனர் (முற்றிலும் குணமடைவதும், அடையாததும் வேறு விசயம் ) வசதி குறைந்த மக்கள் ?
அவர்களை நோய் தாக்காமல் விட்டு விடுவதில்லையே ! அரசாங்க மருத்துவமனைகளில் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக நிறைந்திருப்பவர்கள் இவர்களே. ஏறக்குறைய இருந்தாலும் தற்காலிக நிவாரணிகள் இவை.

எனினும் இவற்றுக்கெல்லாம் நிரந்தர‌ நிவாரணி ஒன்று உண்டு, அதுவே இன்று நமது தலைப்பில் காணும் "அனாடமிக் செவிவழி தொடு சிகிச்சை "!!!!
இந்தச் சிகிச்சை வழி கத்தியின்றி இரத்தமின்றி, மருந்து மாத்திரைகளின்றி, மருத்துவ சிகிச்சைகளின்றி, உண‌வுக்க‌ட்டுப்பாடுக‌ள் ஏதுமின்றி நமக்கு ஏற்படும் நோய்களிலிருந்து நம்மை நாமே முழுமையாக விடுவித்துக்கொள்ள முடியும், நோயின் பிடியிலிருந்து தற்காத்துக் கொள்ள முடியும், நமது இரத்தத்தினை நாமே சுத்திகரித்துக்கொள்ள முடியும். நம்மை ஆரோக்கியமாகவும், இளமையாகவும், அழகாகவும் வைத்துக்கொள்ள இயலும். இதற்கு அதிகமான செலவுகளோ, சிரமங்களோ கிடையாது. தேவையெல்லாம் முழு ஈடுபாட்டுடன் சில வழிமுறைகள் பின்பற்ற வேண்டியதேயாகும்.

இதையெல்லாம் கேள்விப்பட்டதும் மிக ஆச்சரியமாகவே இருந்தது, ஆனால் அண்மையில் ச‌கோதரர் ஹீலர் பாஸ்கர் அவர்கள் இங்கே மேற்கொன்ட ஒரு சொற்பொழிவில் இவையனைத்தும் சாத்தியமான உண்மைகள் என்பது, தெளிவாக விளங்கியது. " நிறைகுடம் தளும்பாது" என்பதற்கு உதாரணமாக விளங்குகிறார் சகோதரர் ஹீலர் பாஸ்கர் அவர்கள். பகட்டு, படாடோபம் ஏதுமின்றி மிகவும் எளிமையாக காட்சியளிக்கும் இவர், "நான் உங்கள் சகோதரன்" எனும் முகவரியோடு தனது சொற்பொழிவைத் துவங்கி, இன்றைய காலக்கட்டத்தில் மனிதர்களின் ஆரோக்கியக் கேடுகளுக்கான தீர்வை தெளிவுற விளக்குகிறார். இந்த சிகிச்சை குறித்த மேலும் பல தகவல்களை யாவரும் அறியும் பொருட்டு, இணையத்திலும் பதிவு செய்துள்ளார்.
இந்த சிகிச்சையில் சகோதரர் ஹீலர் பாஸ்கர் அவர்கள் பேசுவதை முழுமையாக செவிமடுத்து, அவர் குறிப்பிடும் சில எளிமையான வழிமுறைகளை பின்பற்ற வேண்டும், ஒருமுறை மேற்கொன்ட சிகிச்சை வாழ் நாள் முழுக்க நலமளிக்க வல்லதாகும். .


சகோதரர் ஹீலர் பாஸ்கர் அவர்கள் உடல் நலம், நோய்கள் மீதான விழிப்புணர்வின் அவசியம், நோயிலிருந்து விடுபடும் வழிமுறைகள் என பல விச‌யங்களை எளிமையான முறையில் சிறப்பாக தெளிவுபடுத்தினார், அவையனைத்தையும் இங்கே பதிவிடல் சற்றே சிரமமாகையால், முக்கியமான சில குறிப்புகள் மட்டும் இங்கே பதிவிடப்படுகிறது. மேலும் தகவல்களுக்கு இங்கே...!

அனாடமிக் செவிவழி தொடு சிகிச்சை - இயற்கையுடன் இணைந்த வாழ்வு

உணவு (மண்)
*பசித்தால் மட்டுமே உண்ணவேண்டும்
*உண்பதற்கு அரைமணி நேரம் முன்பும்‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍ ‍பின்பும் நீர் அருந்தக்கூடாது. தேவைப்பட்டால் மட்டுமே சிறிதளவு அருந்தலாம்.
*உண்ணும் பொழுது கண்களை மூடி, இதழ்களை மூடி, இதழ் பிரிக்காமல் மென்று கூழ் போல் அரைத்து பின் விழுங்க வேண்டும்.
*தொலைகாட்சி பார்த்தல், புத்தகம் படித்தல், செல்போன் பேசுதல், கால்களை தொங்கவிடுதல் ஆகிய கவனச் சிதறல்கள் உண்ணும் நேரத்தில் கூடாது.
*முடிந்தவரை வீட்டு உணவு ( நம்மேல் அக்கரை கொன்டவர்கள் சமைத்த உணவை ) உட்கொள்ளவும்.

காற்று (வாயு)
*கொசுவர்த்தி கட்டாயம் உபயோகிக்கக்கூடாது. கொசு வலை பயன்படுத்திக் கொள்ளலாம்
*எந்நேரமும் நல்ல காற்று உள்ளே வருவதற்கும், அசுத்தக்காற்று வெளியேறுவதற்கும் ஏற்புடைய வச‌தியான காற்றோற்றம் நமது வாழ்விடத்தில் அமைந்திருப்பதை உறுதிபடுத்திக்கொள்ளவும்.

ஓய்வு/தூக்கம் (ஆகாயம்)
*வடக்கே தலை வைத்து படுக்கக்கூடாது.
*டீ, காபி குடிக்கக்கூடாது.
*தூக்கத்திற்கும், ஓய்விற்கும் உள்ள வித்தியாசத்தை புரிந்து கொள்ள வேண்டும்.
*இரவில் பல்துலக்கி படுத்தால் நன்றாக தூக்கம் வரும்.
*தலையில் உச்சிக்கும், சுழிக்கும் நடுவில் மசாஜ் செய்தால் நன்றாக உறக்கம் வரும்.

உழைப்பு ( நெருப்பு )
*A/C (குளிர்சாதன வசதி) பயன்படுத்துதல் கூடாது.
*தினமும் உடலில் உள்ள அனைத்து இணைப்புகளுக்கும் பயிற்சி
அளிக்கப்பட வேண்டும். அப்போதுதான் நிண நீர் ஓட்டம் நன்றாக இருக்கும்.
*இரத்த ஓட்டத்திற்கு இருதயம் உதவும், ஆனால் நிண நீர் ஓட்டத்திற்கு உடல் உழைப்பு ஒன்றே உதவிடும்.





"சுவ‌ர் இருந்தால்தானே சித்திர‌ம் வ‌ரைய‌ முடியும்" ? நாம் ஆரோக்கிய‌த்துட‌ன் இருந்தால்தானே வாழ்வை மகிழ்வுடன் வரவேற்க முடியும் ?
என‌வே தெய்வங்களே...! மேற்குறிப்பிட்ட‌ த‌க‌வ‌ல்க‌ளை த‌ங்க‌ள் வாழ்வில் ப‌ய‌ன்ப‌டுத்தி ப‌ல‌ன‌டையுமாறு விண்ண‌ப்பித்து விடைபெறுவோம், மீண்டும் அடுத்த‌ செய்தியுட‌ன் விரைவில் க‌ள‌ம் காணுவோம், அதுவ‌ரை என்றும் ந‌ட்புட‌ன்.....

மு.கு : வருடங்கள் சில கடந்து மீண்டிருக்கிறோம். இன்றும் நம்முடன் உடன்வரும் அன்புள்ளங்களே, உங்கள் நம்பிக்கைக்கு நன்றி, இன்றுபோல் என்றும் கம்பெனிக்கு உங்கள் ஆதரவு தொடரவேண்டுமாய் அன்புட‌ன் கேட்டுக் கொள்கிறோம்... :))


பி.கு : ஏற்க‌ன‌வே சில பகுதிகள் பதிவேற்றப்பட்டு, நண்பர்களின் (ஏ)கோபித்த ஆதரவை பெற்ற!!!? :( ஆத்மா இறுதிபாகம் விரைவில்.... எதிர்பாருங்கள்...!!!
(நண்பர்களின் நிம்மதியைக் கெடுக்க ஏதோ நம்மால முடிஞ்சது...! :)))