.

.
.

Saturday, February 27, 2010

சாலையில் சில மனிதர்கள்




வணக்கம் நண்பர்களே, இன்பமே சூழ்க! எல்லோரும் வாழ்க! நலமென்பது நமதாகுக, நாளைய பொழுது நல்ல பொழுதாகுக...! (அப்போ இன்று ????!, ஹி ஹி ஹி , நம்ம பதிவைப் படிச்சிட்டிருக்கீங்களே !!!!!? :(

இறையருளால் இன்று நாம் இணைந்திருப்ப‌து ஒரு தொட‌ர் ப‌திவில்... :-)(

ஆம் மிரட்டி ஆணையிட்டால் முரட்டுத்தனமாக மறுத்துவிடலாம், அன்புக்கட்டளையென்றால்? கட்டுப்படுவதுதானே நியாயம்? அதிலும் நாம் அன்புக்கு அடிமை (உபயம் ‍‍- மறைந்தும் மக்கள் மனதில் வாழும் பொன்மனச்செம்மல் :) த‌ட்டிக்க‌ழிக்க‌ முடியாத‌
அன்புத்தோழி இயற்கையின் விருப்ப‌ப்ப‌டி இதோ உங்கள் முன், உங்களுக்காக, உங்களோடு மேலும் ஒரு அறுவைப் ப‌திவோடு நாம் :-)

http://iyarkai09.blogspot.com/2010/01/blog-post_04.html (ரொம்ப‌ நன்றிங்க‌ அம்ம‌ணி ! :(

நண்பர்களே இந்த ந‌வ‌நாக‌ரீக‌ யுக‌த்தில் போக்குவ‌ர‌த்து என்பது சராச‌ரி ம‌னித‌ வாழ்வினின்று பிரித்தெடுக்க முடியா முக்கிய சாராம்சமாக அமைந்துவிட்டதென்றால் அது மிகையன்று.

பாத‌சாரிகளோடு மிதிவ‌ண்டி, மோட்டார் வண்டி, கார், பேருந்து மற்றும் வியாபார‌, தொழில் நிமித்தமாக‌ ப‌ல‌ கன ர‌க‌ வ‌ண்டிக‌ள் என‌ ப‌ல்லாயிர‌ம் வாகனங்களோடு ம‌க்க‌ள் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிமிட‌மும் த‌ங்க‌ள‌து தேவைக‌ளுக்காக‌ சாலைகளில் பயணித்துக்கொன்டுதான் இருக்கிறோம்.

அதிலும் ந‌ம‌து நாட்டில் அழ‌கான‌ சாலைக‌ளுக்கு ப‌ஞ்ச‌மேயில்லை, ஆனாலும் "டோல்" எனும் வரிவசூல் சாவடிகள் வழி விரைவுச்சாலை பயனீட்டாள‌ர்களிடமிருக்கும் கொஞ்ச நஞ்ச சில்லரைகளையும் கரந்து கரைத்துவிடும் வியாபார யுக்திக்கும் அதில் பஞ்சமில்லைதான், என்ன செய்வது !!!?

ம‌னித‌ ச‌ங்க‌ம‌ங்க‌ளில் எங்குதான் ச‌ம‌ர‌ச‌ம் நில‌வுகிற‌து ( ஆற‌டியில், புவி ம‌டியில் ப‌டுத்துற‌ங்கும் அந்த ஓர் இட‌ம் த‌விர்த்து !!!!? ) அவ்வ‌கையில், நெறி ம‌ற‌ந்து, சாலை விதிக‌ளை புற‌ந்த‌ள்ளி சாலைக‌ளை (அவ‌ங்க அவங்க குடும்ப‌ சொத்தாகக் கற்பனை செய்து கொன்டு) க‌ண்மூடித்த‌ன‌மாக வாகனங்களைச் செலுத்தி பல சாலை விபத்துக்களை ஏற்படுத்தி, ரண‌ காய‌ங்க‌ளோடு, உட‌ல் உறுப்புக்க‌ள் இழ‌ந்து ப‌ல‌ வேளைக‌ளில் உயிரையும் ப‌றிகொடுத்து த‌ங்க‌ள் குடும்ப‌த்தையும் நேசித்த‌வ‌ர்க‌ளையும் நிர்க்க‌தியாக‌ பரிதவிக்கவிட்டு பிரிந்துவிடுகின்றனர் பலர் . இதில் மேலும் சோக‌மான‌ விட‌ய‌ம் ப‌ல‌ வேளைக‌ளில் அப்பாவிகளும், குழந்தைகளும், குடும்பங்களும் கூட ஒரு சில ‌ வாக‌னமோட்டிகளின் அலட்சிய‌த்தாலும், அறியாமையாலும், அகம்பாவத்தாலும் பலிகடாவாக்கப்படுகின்றனர். இவைய‌னைத்தும் விட‌ மேலும் ஒரு கொடுமை என்ன‌வென்றால் சில‌ர் தாமாகவே எங்கேயாவது, எதையாவ‌து மோதி விப‌த்துக்குள்ளாகும் கோடூர‌ம். (ச‌ரியாத்தான் சொல்றாங்கப்பா!, முன்னெல்லாம் எருமை மேலே வ‌ருவார் எம‌ன், இப்போ அவ‌ர் வாகனமேறி வ‌ருகிறார் என்று !!!? )

ச‌ரி ந‌ண்ப‌ர்க‌ளே, சாலை தொட்டு அள‌வுக்கு மீறி வ‌குப்பெடுத்து விட்ட‌தாக‌ அடியேனுக்கு தோன்றுவ‌தால் :((((( , நாம் நமது பதிவுக்குள் நுழைவோமா ??? ( அட‌க்க‌ட‌வுளே ! அப்போ இவ்ளோ நேர‌ம் காதில, சாரி க‌ண்ணுல‌, ர‌த்த‌ம் வ‌ர்ர‌ அள‌வுக்கு அறுத்துத்த‌ள்ளியது !!!?) ஹி ஹி ஹி அது முக‌வுரை ம‌ட்டுமே தெய்வ‌ங்க‌ளே ! (இன்றைக்கு ந‌ம்ம‌ கிட்டேயிருந்து உங்க‌ளை யாருமே காப்பாற்ற‌ முடியாது, பாவ‌ம்பா நீங்க‌ள்ளாம்...! :(

முந்தைய காலங்களில், அதாவது நம்ம அப்பா, அம்மா சிறுவர்களாக இருந்த காலத்தில் ‌ப‌ரீட்சையில் வெற்றிபெற்றால், அவ‌ங்க‌ அப்பா அம்மா ஒரு மிதிவ‌ண்டி வாங்கித்த‌ருவார்க‌ளா என எதிர்பார்த்து ஏங்கினார்க‌ள், ஆனால் இப்போதைய‌ சின்ன‌ஞ் சிறுசுக‌ள் , ந‌ண்டு சிண்டுக‌ளெல்லாம் 18 வ‌ய‌து ஆகிவிட்டால் போதும், அப்பா அம்மாகிட்ட‌ மோட்டார் வேணும், கார் வேணும்னு இல்ல‌ அட‌ம் பிடிக்குதுக‌ !! என்ன‌ செய்வ‌து, கால‌ம் செய்த‌ கோல‌ம், இல்லையில்லை அல‌ங்கோல‌ம் !!! த‌த்துபித்துவென்று வாக‌ன‌ங்க‌ளை செலுத்தி த‌ங்க‌ளுக்கும் பிற‌ருக்கும் ஆப‌த்தை விளைவித்துவிடுகின்ற‌ன‌ர் இவ‌ர்க‌ள்.

அறிவுரை கேட்ப‌து எனபது ப‌ல‌ருக்கும் பிடிப்ப‌தில்லை (ஹி ஹி ஹி இந்த தத்துவம் படைபாளிக்கும் சேர்த்துத்தான் !!) அத‌னால் நாம் இங்கே அறிவுரை ஒன்றும் சொல்ல‌ப்போவ‌தில்லை, (அப்பாடா நிம்மதி !!! ) அனுப‌வ‌மே மிக‌ப் பெரிய ஆசான் என்ப‌தால் அடியேன் அறிந்த, ஊடகங்களில் கண்ணுற்ற, வாழ்விட அருகாமையில், பணிமனையில் என கண்ணுற்ற சில விபத்துக்களை தங்களோடு பகிர்ந்து கொளள விழைகிறேன்...

ச‌ம்ப‌வ‌ம் 1 :அந்த உள்ளூர் தொழிற்சாலையில் அந்த சகோதரர் பணியிலமர்ந்து ஒரு சில மாதங்களே ஆகியிருந்தன. பணிவும், நட்பான குணமும் கொன்டவர், அவரை அனைவருக்கும் பிடித்திருந்தது‌. அச்சமயத்தில் அவ‌ருக்கு அர‌சாங்க‌ உத்தியோக‌ம் கிடைத்தது, வேலை நிறுத்த க‌டித‌ம் கொடுத்தார், வீட்டீல் அந்த‌ வார‌க்க‌டைசியில் அவ‌ருக்கு அவ‌ர் ம‌ன‌ங்க‌வ‌ர்ந்த‌ ம‌ங்கையோடு நிச்ச‌யதார்த்தம் த‌யாராக‌... அந்த‌ நாள் அவ‌ர் பணியில்‌ க‌டைசி நாள், அனைவ‌ரிட‌மும் புன்ன‌கையோடு விடைபெற்றுக்கொன்டார் (வாழ்விலும்...


:( புறப்பட அவ‌ர் செலுத்திய‌ மோட்டார் க‌ம்பெனி விட்டு கண் மறையும் முன்பே அதிவேக‌மாக‌ ப‌க்க‌த்து க‌ம்பெனியிலிருந்து வெளிவ‌ந்த ஒரு காரால் மோத‌ப்ப‌ட்டு, மோட்டார் சுக்கு நூறாய் நொறுங்க‌, மோட்டாரிலிருந்து தூக்கியெறிய‌ப்ப‌ட்டு பின் ம‌ண்டையில் ப‌ல‌த்த‌ காய‌த்துட‌ன்... விழுந்த‌வ‌ர் பின்ன‌ர் எழ‌வேயில்லை...!

ச‌ம்ப‌வ‌ம் 2 : அது ஒரு பண்டிகை காலத்து பனி இரவு. இரு நண்பர்கள், பண்டிகை விருந்து முடிந்து வீடு திரும்பிக்கொண்டிருக்கும் வேளை. அதி விரைவாக செலுத்தப்பட்ட அவர்களின் மோட்டார் வண்டி ஒரு சாலை வளைவில், நிலை குலைந்து சாலையோர வீதிவிளக்குக் கம்பத்தில் மோத, மோட்டாரை ஓட்டிவந்த வாலிபன் உடலும் அதில் மோதி கடும் காயங்களுடன் இரத்த வெள்ளத்தில் நடுச்சாலையில் சரிய..., உடன்‌ வ‌ந்த‌ ந‌ண்ப‌ன் சொற்ப‌ காய‌ங்க‌ளுட‌ன் த‌ப்பி உத‌வி கோரி கடந்து செல்லும் வாகன‌கங்க‌ளை கைகாட்டி நிறுத்த‌, யாருமே நிற்க‌வில்லை ! (பிறர்க்கொரு துயரென்றால் ஓடி உதவும் எம் இனத்திற்கு(அப்படி உதவி உபத்திரவங்களுக்கு ஆளான நல்லவர்களும் உண்டு) , ஒரு துயரென்றால் உதவ பல சமயங்களில் யாருமே முன்வருவதில்லை!!!!, இரவு இரத்தக்கறையோடு விடிந்தது, எப்படியோ காவல்துறையும் அங்கே வந்தது, ஆனால் வீழ்ந்த அந்த வாலிபர் மீட்டெடுக்க முடியா ஆழ்ந்த நித்திரை‌யினின்றி எழ‌வேயில்லை...!



ச‌ம்ப‌வ‌ம் 3 : (நாளிகை செய்தி) புக்கிட் மெர்த்தாஜாம் எனுமிட‌த்தில் ஓர் இர‌வில் இரு ந‌ண்ப‌ர்க‌ள், கேளிக்கை விடுதியில் உற்சாக‌மாக... ந‌ள்ளிர‌வு க‌டந்து புற‌ப்ப‌டும் வேளையில், ஒரு ந‌ண்ப‌ர் தைப்பிங்கில் அமைந்துள்ள ஒரு கேளிக்கை விடுதிக்கு (சுமார் 75 கிலோமீட்டர் தூரம்) சென்றுவர மற்றொருவரையும் உடனழைக்க (விதி வலியது அல்லவா ? :( உடனே விரைவுச்சாலை வ‌ழி காற்றினும் க‌டிதாகக் காரிலேறிப் பறந்த‌னர் நண்பர்கள், சில மணித்துளிகளும், பல மைல்களும் கடந்த பின்னரே அவர்களுக்கு ஒரு மிகப்பெரிய உண்மை புலப்பட்டது, அதாவது அது தைப்பிங் நோக்கிச் செல்லும் விரைவுச்சாலை அல்ல என்பது...!!!! மேலும் தூரம் கடந்து திரும்ப விருப்பமின்றி அந்த ஒரு வழிச்சாலையில் காரைத் திருப்பி வந்த வழியே திரும்பினர் அவர்கள் (என்னே ஒரு அறிவுப்பூர்வ‌மான‌ செய‌ல்...!!!!!!)
விளைவு எதிரே வந்த ஒரு காரில், அப்பா, அம்மா மற்றும் ஐந்து குழந்தைகள். இவர்களின் கார் அவர்கள் காரை மோதித்தள்ள படுபயங்கர‌மான காயங்களுடன் அவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட, அவர்களை மோதிய அந்த வாலிபர்களின் கார் பயணம் அந்த இடத்திலேயே முடிய, திரும்ப முடியாத இடத்திற்கு அவர்களின் ஆன்மாக்கள் பயணிக்கத்துவங்கின‌...!



பார்த்தீர்களா நண்பர்களே, பிறர் தவறால் உயிர் துறந்த ஒரு நல்லவர் (சம்பவம் 1), தனக்குத் தானே தீங்கிழைத்துக்கொன்ட ஒருவர்(சம்பவம் 2), தன் தவறால் தானும் ஆபத்தில் சிக்கி பிறரையும் ஆபத்துக்குள்ளாக்கிய ஒருவர் (சம்பவம் 3), இதுபோன்ற நிலை யாருக்கும் ஏற்படக்கூடாது. எனவே விபத்துக்களைத்தவிர்த்து வள‌மாக வாழ சாலை விதிக‌ளை ம‌தித்து, பாதுகாப்பு அம்ச‌ங்க‌ளையும் ம‌ற‌வாது பின்ப‌ற்றி, சிந்தித்து, முன்னெச்சரிக்கையோடு செயல்படுவோம். மீண்டும் சூடான ஒரு பதிவோடு அதிவிரைவில் சந்திப்போம்... அதுவரை வண‌க்கமும் வாழ்த்துக்களும்...
மீண்டும் சந்திப்போம் நண்பர்களே....