.

.
.

Thursday, October 15, 2009

ஆகா வந்துருச்சு தீபாவளி...!

வணக்கம் நண்பர்களே, இதோ வருது! அதோ வருது! என ஆசையோடு எதிர்பார்த்த தீபாவளி, என்ன ஆச்சரியம்! இதோ இன்னும் இரண்டொரு நாளில், வாசல் தேடி வந்தே விட்டது பாருங்கள்...

உன்னைக்கண்டு நானாட, என்னைக்கண்டு நீயாட
உல்லாசம் பொங்கும் இன்பத் தீபாவளி
ஊரெங்கும் மகிழ்ந்து ஒன்றாகக் கலந்து
உற‌வாடும் நேரமடா... உறவாடும் நேரமடா...!

பழம்பெரும் சினிமா பாடல் பட்டி தொட்டி எங்கும் முழங்க, புத்தாடைகள் புன்னகைகள், பலகாரங்கள், மத்தாப்பு, உறவினர்கள், ஆஸ்ட்ரோவில் பல சிறப்பு நிகழ்ச்சிகளோடு ஒவ்வொரு தீபாவளியும் நமக்கு ஓராயிரம் நினைவுகளை இதயத்தில் இழைத்திருக்கும், ஹாஸ்யங்களுக்கும் அதிலே பஞ்சமிருக்காது...! அடியேன் வீட்டு தீபாவளி ஒன்றும் அதுபோல நினைக்கும் போதெல்லாம் சிரித்து சிரித்து மகிழ வைக்கும், அதை உங்களுக்கும் சொல்லட்டுமா...? வாருங்கள் கொசுவத்திச்சுருள் உத்தியை உபயோகித்து கடந்தகாலத்திற்குள் நுழைவோம்...

என்றோ பெய்த மழைதான் ஆனால் இன்றும் நினைந்து பார்க்கும் போதெல்லாம் நனைந்து பார்க்க முடிகிறதே என கவிதை வரிகளோடு துவங்குகிறது அந்த வரலாற்றுச் சிறப்புமிக்க சம்பவம்... :-)

எனது ஆரம்பப் பள்ளிப்பருவம், என் தாய் தீபாவளிக்காக சளைக்காது பலகாரங்களை செய்து குவித்துக்கொண்டிக்க‌, அவருக்கு அஸிஸ்டென்ட் + எடுபிடி + மானேஜர் + ஓடும்பிள்ள + கைப்புள்ள எல்லாமே நாங்கள் தான் :-)

எல்லா வேலைகளையும் விழுந்தடித்துக்கொன்டு செய்யும் எங்களுக்கு தீபாவளிக்கு முன் பலகாரங்களை ருசிபார்க்கும் பாக்கியம் மட்டும் வாய்க்காது (என்னக் கொடும சார்! :( சாமி கண்ணைக்குத்தும், கையைக்கடிக்கும் என்றெல்லாம் பல பொய்கள் எங்களை பலகாரங்களை தொடவிடாமல் தடுக்க...அதையும் மீறி பல சம‌யங்களில் நாங்கள்(சரி சரி விடுங்க! அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா :)))

அந்த வருடம், தீபாவளிக்கு முதல் நாள், நாங்கள் குடியிருந்த அந்த வாழ்விடம் தமிழர் நிறைந்த குடியிருப்பு பகுதியாதலால் தீபாவளி பெரு விழாவாய் களைகட்டியிருந்தது... மத்தாப்புக்களாய் மகிழ்ச்சிப் பிரவாகங்கள்...

எங்கள் வீட்டிலும் நரகாசுரனுக்கு ஒரு பெரு விழா, சமையல் அல்லோல கல்லோலப் பட்டுக்கொன்டிருந்தது... என் தாய் மறுநாள் தீபாவளிக்காக தோசைக்கு அரிசியை ஒரு பெரிய பாத்திரத்தில் ஊறவைத்துவிட்டார், பிற‌கு அதேபோல் வேறொரு பாத்திரத்தில் பூலூட் அரிசி(பலகாரம் செய்ய உதவும் ஒருவகை அரிசி) ஊறவைத்துவிட்டார், அம்மா சொல்ல ஊறவைத்த புண்ணியவதி என் சகோதரி...!

மாலையானது, ஒரு பாத்திரத்திலிருந்த அரிசியை சுத்தம் செய்து, ஆட்டுரலில் இட்டு எனது ச்கோதரியையும் என்னையும் தோசைக்கு மாவாட்ட வைத்துவிட்டார் என் தாய்... :‍)

மீதமிருந்த இன்னொரு பாத்திரத்திலிருந்த அரிசியை பலகாரம் செய்ய சீனி தேங்காய்ப்பால், அழகான சிவப்பு வர்ணம் எல்லாம் சேர்த்து வானலியில் வேகவைக்க ஆரம்பித்தார்...

காலக்கொடுமையை பாருங்கள் சார்...! நாங்கள் மாவாட்டத் துவங்கிய கொஞ்ச நேரத்தில் அந்த அரிசி பிசு பிசுவென கல்லோடு ஒட்டிக்கொன்டு பசை ஒட்டியதைப்போல் கல்லை நக‌ர்த்த முடியாமல் திண்டாட வைத்தது... நாங்களும் நாமதான் ஏதோ தவறு செய்து விட்டோம் என பயந்து கொன்டு, அம்மாவிடம் சொன்னால் முதுகுத்தோல் உரிந்து விடுமே, யார் செய்த பாவமோ, இது யார் விட்ட சாபமோ என் வேண்டாத தெய்வங்களை எல்லாம் வேண்டிக்கொன்டு மாவாட்டுவதாய் பாவ்லா காட்டிக் கொன்டிருந்தோம்... :(

அதேவேளை அங்கே அடுப்படியில் என்னைப் பெற்ற் தெய்வம்! கண்ணாடி போல் வெந்து மலர வேண்டிய அந்த அரிசிப் பலகாரம், நச நசவென சாதம்போல் குழைந்து கொப்பளித்து... வானலியில் ஒட்டிக்கொன்டு கரண்டியில் வரமாட்டேன் என அடம்பிடித்துக்கொன்டு என் தாயை திண்டாட வைக்க‌...

என் தாய்க்கு விக்ஷ‌யம் புரிந்துவிட்டது, ஆஹா அரிசியை மாற்றி சமைத்து விட்டோம் எனும் அந்த மகாப் பெரிய உண்மை புலப்பட, அய்ய்யோ மாட்டிக்கிட்டோமே, சாமி என்ன செய்வது... என் தந்தைக்குத் தெரிந்தால் மனுசன், அந்த மூன்று கண்ணனாய் மாறி ருத்ரதண்டவம் ஆடிவிடுவாரோ எனும் பயத்தோடு...

என்னதான் செய்வது, ஆனது ஆச்சு போனது போச்சு, நடந்ததையெல்லாம் கூட்டிக் கழித்து பெருக்கி வகுத்துப் பார்த்து என் தாய் வேகமாக ஒரு விவேகமான முடிவை எடுத்தார், ஆம் தோசைக்கு அரைத்த அந்த மாவையும், பலகாரமாய் !!!! சமைத்த அந்த அயிட்டத்தையும் யாருக்கும் தெரியாமல் வெகு சாமர்த்தியமாய் வீட்டுக்குப்பின்னால் அள்ளிப்போய் கொட்டிவிட வேண்டியது, பிற‌கு வேறு ஏதாவது சமைத்து சமாளித்து விட வேண்டியது. அம்மா தீட்டிய திட்டத்தை அவருடைய செல்வங்கள் நாங்கள் கனக்கச்சிதமாய் நிறைவேற்றிட்டோம்ல...! :‍)

என்னதான் உண்மையை மறைத்தாலும் மனச்சாட்சி என்று ஒன்று உள்ளதே அய்யா, அதை ஏமாற்ற முடியுமா ? அரிசியை மாற்றி விட்ட அந்த உண்மை எங்களுக்கு நினைக்க நினைக்க கெக்கே பெக்கே வென வற்றாத சிரிப்பை வாரி வழங்கிக் கொன்டிருந்தது...

ஒரு வழியாக பின்னர் என் தந்தைக்கும் விக்ஷ‌யம் எட்டியது, நல்லவேளை நல்ல மூட் போல, அவரும் தமது மனைவி மக்களின் "தெற‌மையை" மெச்சி சிரித்துக்கொன்டார்...! நம்புங்கள் நண்பர்களே, கர்ஜித்து மட்டுமே பார்த்திருக்கிறேன், ஒரு சிங்கம் சிரித்ததை அன்றுதான‌ய்யா என் கண்களால் கண்டேன்...! :))

அதன் பின்னர் ஒவ்வொரு தீபாவளியும் இந்த சம்பவத்தை நினைவு கூர்ந்து சிரிக்க அடியேன் குடும்பம் தவறியதே இல்லை, என் அம்மா தீபாவளி காலங்களில், மிகவும் பெருமையோடு, "ஏன்மா அந்த அரிசியை மாற்றிச் சமைத்து அவஸ்த்தை பட்டோமே அந்தக் கதையை பத்திரிகைக்கு எழுதேன்மா", என அவ‌ரின் அந்த வீரதீர சாகசத்தை என்னை எழுதச்சொல்லிக் குறும்பாகச் சிரிப்பார், (இப்போல்ல தெரியுது நம்ம சேட்டையெல்லாம் எங்கிருந்து வந்ததுச்சுன்னு...! :)

அன்புள்ளங்களே..! புத்தாடை அணிந்து புதுப்பொலிவோடு இந்த தீபாவளியை நாம் எதிர்கொள்ளும் இவ்வேளை நம்மிடையே நம்மோடு வாழும் பேறுகுறைந்த அன்பர்களையும் மறந்துவிடல் ஆகாது என்பது எமது தாழ்மையான வேண்டுகோள், அவர்களுக்கும் நம்மாலான உதவிகளையும், ஆதரவையும் நல்கி அவர்களும் துன்பம் மறந்து சற்றேனும் இன்புற்றிருக்க நமது உதவிகளை வழங்கிடுவோமாக...

நல்லது நண்பர்களே இந்த தீபாவளியும், இனி உங்கள் அனைவரின் வாழ்விலும் வரும் ஒவ்வொரு தீபாவளியும் இனிமையையும், மகிழ்ச்சியையும் வற்றாது பெருக்கெடுக்க வைக்கும் ஜீவ நதியாய் ஊற்றெடுக்க‌ பிரார்த்திக்கின்றேன், வாழ்க‌ வளர்க, மீண்டும் சந்திப்போம், என்றும் அன்போடு...



@நவம்பர் 2015 "மன்னன்" மாத இதழில் வெளிவந்த படைப்பு